Thursday, 23 February 2017

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 3

No comments
ஸாயிபாபாவின் அனுமதியும் வாக்குறுதியும் – அடியார்க்கு இடப்பட்ட திருப்பணிகள் – பாபாவின் நிகழ்ச்சிகள் வழிகாட்டும் விளக்குகள் அவரின் தாயன்பு – ரோஹிலாவின் கதை – பாபாவின் சுவையும் அமுதமுமான மொழிகள்



     முந்திய அத்தியாயத்தில் விளக்கப்பட்டபடி ஸாயிபாபா தமது பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கூறியதாவது, ‘ஸத் சரித்திரம்’ எழுதுவதைப் பற்றி நான் உம்முடன் முழுமையாகச் சம்மதிக்கிறேன். நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகள் எழுதப்படுமானால் அறியாமை அகலும். அவைகள் கவனத்துடனும் பக்தியுடனும் கேட்கப்படுமானால் இவ்வுலக வாழ்க்கையின் உணர்வு தணிந்து பக்தி, அன்பு ஆகியவற்றின் வலிமையான அலைகள் மேலெழும்பும். என்னுடைய லீலைகளின் ஆழத்தில் ஒருவன் முழுகுவானானால் அவன் ஞானமென்னும் விலை மதிப்பில்லாத முத்துக்களை எடுப்பான்.
     இதைக் கேட்டு இந்நூல் ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியடைந்தார். உடனே தன்னம்பிக்கை உடையவராயும் பயமற்றவராயும் ஆனார். இப்பணி வெற்றிகரமாக நிறைவேறியே தீரவேண்டும் என்றும் எண்ணினார். பிறகு சாமா (மாதவராவ் தேச்பாண்டே)விடம் திரும்பி பாபா கூறியதாவது, “ஒருவன் என் நாமத்தை அன்புடன் உச்சரிப்பானாகில் நான் அவனுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து அவனுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். என் வாழ்க்கையையும் செயல்களையும் ஊக்கமுடன் இசையாகப் பாடுவானாயின் அவனுக்கு முன்னும் பின்னும் எல்லாத் திக்குகளிலும் சூழ்ந்திருப்பேன். என்னிடம் உள்ளத்தையும் உயிரையும் ஒப்புவித்த அடியார்கள் இந்நிகழ்ச்சிகளைக் கேட்டதும் இயற்கையிலேயே மகிழ் வெய்துவர். நம்பிக்கையுடன் என் லீலைகளை எவனாவது இசைப்பானாயின் அவனுக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கி, என்றும் நிலைத்திருக்கும் திருப்தியையும் அளிப்பேன். எவன் என்னிடம் பூரணசரணாகதி அடைகிறானோ, எவன் என்னை விசுவாசத்துடன் வணங்குகிறானோ, எவன் என்னை நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் புரிகிறானோ அவனை விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும். என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், எனது நிகழ்ச்சிகளையும் வாழ்க்கையைப் பற்றியும் எண்ணி இவ்வாறாக என்னை நினைவில் இருத்தி இருப்பவர்கள் எங்ஙனம் உலகப் பொருள்கள், உணர்ச்சிகள் இவைகளில் கவனமுள்ளவர்களாக இருக்கமுடியும்? சாவின் வாயினின்று எனது அடியவர்களை நான் வெளியே இழுத்து விடுவேன். எனது கதைகள் கேட்கப் பட்டால் எல்லா நோய்களும் விலகும். எனது கதைகளை மரியாதையுடன் கேட்டு அவற்றை எண்ணித் தியானம் செய்து கிரகித்துக் கொள்ளுங்கள். இதுவே மகிழ்ச்சிக்கும் திருப்திக்குமான மார்க்கமாகும். என் அடியவர்களின் பெருமையும் அகம்பாவமும் அற்றுவிடும். கேட்பவரின் மனம் அமைதிப்படுத்தப்படும். அன்றியும் அது இதயப் பூர்வமும் முழுமையுமான பக்தியாயிருப்பின் அது (மனம்) உச்ச உணர்ச்சியுடன் ஒன்றாகி விடும். “ஸாயி ஸாயி” என்று சாதாரணமாக ஞாபகமூட்டிக் கொள்வதே, பேச்சில் கேட்பதில் உள்ள பாவங்களைத் தீர்க்கும்.

அடியவர்களுக்கு அளிக்கப்பட்ட பலதரப்பட்ட பணிகள்

      ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கிறார். சிலர் கோயில், மடம் கட்டுதல்களிலும், சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைத்தலுமான பணிகளும் அளிக்கப்படுகிறார்கள். சிலர் ஆண்டவன் புகழைப் பாட்டுவிக்கப்படுகிறார்கள். சிலர் க்‌ஷேத்ராடன யாத்திரைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும் எனக்கு ஸத் சரித்திரம் எழுதும் வேலை ஒதுக்கப்பட்டது. எல்லாம் சிறிது தெரிந்து ஒன்றும் முழுமையும் தெரியாதவனைப் போன்ற நான் இப்பணிக்கு கொஞ்சமும் தகுதியுடையவன் அல்லன். பின்னர் ஏன் அத்தகைய கடினமான வேலையை மேற்கொள்ள வேண்டும். எவரே ஸாயிபாபாவின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப முடியும்? ஸாயிபாபாவின் அருள் ஒன்று மட்டுமே இக்கடின வேலையை நிறைவேற்ற ஊக்கம் அளிக்க முடியும். எனவே நான் எனது பேனாவைக் கையில் எடுத்த போது ஸாயிபாபா எனது அகங்காரத்தை அகற்றிவிட்டு அவரே தமது நிகழ்ச்சிகளையெல்லாம் வரையலானார். ஆதலின் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் விவரிப்பதின் பெருமை அவரையே அடைகிறது. என்னையல்ல. பிறப்பில் மறையவனாக இருப்பினும் சுருதி, ஸ்ம்ருதி என்ற இரண்டு கண்கள் (பார்வை அல்லது காட்சிகள்) தேவையுள்ளவனாக இருந்தேன். எனவே ஸத் சரித்திரத்தை எழுதவே இயலாத நிலையில் இருந்தேன். ஆனாலும் ஆண்டவன் அருள், ஊமையைப் பேசவைக்கிறது. முடவனை மலையைக் கடக்கச் செய்கிறது அவரின் விருப்பப்படி காரியங்களைச் செயற்படுத்தும் தந்திரத்தை அவர் ஒருவரே அறிவார். புல்லாங்குழலோ, ஹார்மோனியமோ எங்ஙனம் ஒலி எழுப்பப்படுகிறது என்பதை அறியா. இது அவற்றை வாசிப்பவனையே சார்ந்தது. சந்திரகாந்தக்கல் கசிவதும், கடல் பொங்கியெழுவதும் சந்திரோதயம் காரணமாகவே, அவ்வவற்றின் தன்மையால் அல்ல.

கலங்கரை விளக்கமாக பாபாவின் கதைகள்

      படகுக்காரர்கள் பாறைகள், அபாயங்கள் இவற்றிலிருந்து விலக்கி பத்திரமாகப் பயணம் செய்வதற்காக, கடலின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கம் கட்டப்படுகிறது. சம்சாரம் என்னும் ஸாகரத்தில் ஸாயிபாபாவின் கதைகள் அத்தகைய பயனை நல்குகின்றன. அவைகள் அமிர்தத்துக்குச் சுவையூட்டு கின்றன. நமது உலகப்பாதையை மிருதுவாகவும், கடப்பதற்கு எளியதாகவும் ஆக்குகின்றன. ஞானிகளின் கதைகள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள். நமது செவிகளின் வழியாக உள்ளத்தினுள் புகும் போது சரீராபிமானம் அல்லது அஹங்காரம், துவைத உணர்ச்சி மறைகின்றது. நம் உள்ளத்தில் அவைகள் தேக்கப் படுமானால். சந்தேகம் பறந்தோடும், சரீரத்தின் பெருமை உணர்ச்சி கீழே இறங்கும். ஏராளமாக விவேகம் சேகரிக்கப்படும். பாபாவின் தூய புகழை விவரிப்பதும், அதையே அன்புடன் கேட்பதும் அடியாரின் பாபங்களை அழிக்கும். கிருத யுகத்தின் ஆன்மிகப் பயிற்சியானது சமதமா (உள்ளம், உடல் இவற்றின் தனித்தன்மை), திரேதா யுகத்துக்குத் தியாகம். த்வாபர யுகத்துக்கு வழிபாடு, கலியுகத்திற்கு இறைவனின் புகழையும், நாமத்தையும் இசையாகப் பாடுவதுமாகும். கடைசிப் பயிற்சியானது நான்கு வருணத்தைச் சேர்ந்த எல்லார்க்கும் உரியதாகும். மற்றைப் பயிற்சிகளான யோகம், யாகம் (தியாகம்), தியானம், தாரணை (ஒரு முகப்படுத்துதல்) ஆகியவை பழகுவதற்கு மிகவும் கடினமானவை. இறைவனது (ஸாயிபாபா) புகழைச் செவிமடுப்பது மிகவும் எளியதாகும். நாம் நமது கவனத்தை அவைகள் மீது திருப்ப மாத்திரமே வேண்டும். இவைகளைக் கேட்பதும், கதைகளைப் பாடுவதும், புலன்கள், அவற்றின் பொருள்கள் மீதுள்ள உறவை நீக்கி, அடியவர்களைப் பற்றறுத்தவர்களாக்கி முடிவில் ஆன்ம உணர்வுக்கு வழியமைக்கும். இக்குறிக் கோளையே கருதிக் கொண்டு ஸாயிபாபா “ஸத்சரித்ராமிருதா” என்னும் அவரது கதைகளை எழுதச் செய்தார்; அல்லது உதவி செய்தார். அடியவர்கள் இப்போது இக்கதைகளை எளிதாகப் படிக்கவோ, கேட்கவோ செய்யலாம். அங்ஙனம் செய்யும் போது அவரைத் தியானம் செய்க.

ஸாயிபாபாவின் தாயன்பு

      தன் இளங்கன்றை பசு எங்ஙனம் நேசிக்கிறது என்பதை யாவரும் அறிவர். அதன் மடி எப்போதும் நிறைந்திருக்கிறது. கன்று பால் வேண்டி மடியை முட்டும்போது தடையின்றி பால் பெருக்கெடுக்கின்றது. அங்ஙனமே தாயாரும் தக்க தருணத்தில் தன் ’குழவியின் பசியை அறிந்து முலையமுது தந்து’ ஊட்டுகிறாள். குழந்தைக்கு ஆடை அழகுற அணிவிப்பதிலும் சிறப்புறச் சிங்காரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறாள். குழவி எதைப் பற்றியும் அறிவதுமில்லை, கவலையுறுவது மில்லை. ஆயின் தன் குழந்தை நன்றாக உடை உடுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்ணுறும் தாயின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையில்லை. தாயன்பு விசித்திரமானது. அசாதாரண மானது. பற்றில்லாதது. இணையில்லாதது. தமது அடியவர்களிடம் ஸத்குருவும் இத்தகைய தாயன்பு காண்பிக்கிறார்கள். இத்தகைய அன்பே ஸாயிபாபா என்னிடம் கொண்டிருந்தது. அதைப் பற்றிய நிகழ்ச்சி கீழ்வருமாறு :
      நான் அரசாங்க வேலையிலிருந்து 1916ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். கௌரவமாக என் குடும்பத்தை நடத்துவதற்கு எனக்குத் தீர்மானித்துத் தரப்பட்ட பென்ஷன் போதவில்லை. குரு பூர்ணிமா அன்று நான் சீர்டிக்குச் சென்று இருந்தேன். அங்கு திரு. அண்ணா சிஞ்சணீகர் அவராகவே பாபாவிடம் எனக்காகக் கீழ்வருமாறு வேண்டினார். ”தயவு செய்து அவரை அன்புடன் நோக்குங்கள். அவர் பெறும் பென்ஷன் அறவே போதாது. அவரது குடும்பமோ வளர்ந்து வருகிறது. அவருக்கு வேறு வேலை ஏதும் கொடுங்கள். அவரது ‘சிந்தா குலந்தனைத் தீர்த்து’ அவரை மகிழச் செய்யுங்கள்”, பாபா பதில் அளித்தார் : ”அவர் வேறு ஏதாவது வேலை பெறுவார். ஆயின் இப்போது அவர் எனக்குப் பணி செய்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அவரது உணவு எப்போதும் நிறைந்திருக்கும். ஒரு போதும் காலியாய் இராது. அவர் தனது கவனம் அனைத்தையும் என்பால் திருப்பி நாத்திகர்கள், மதப்பற்று அற்றவர்கள், கொடுமையாளர்கள் இவர்களின் கூட்டுறவைத் தவிர்த்து, எல்லோரிடமும் பணிவாகவும் அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும் உயிராலும் என்னை வணங்கவேண்டும். இதை அவர் செய்வாராகில் அவர் எல்லையற்ற பேரின்பத்தை அடைவார்.”
     எவருடைய வழிபாடு உபதேசிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த நான் என்பது யார் என்னும் வினாவுக்கு ஸாயிபாபா என்பது யார் என்னும் குறிப்பில் முன்னமே இந்நூலில் குறிக்கப்பட்டிருக்கிறது.

ரோஹிலாவின் கதை

     எல்லோரையும் அரவணைக்கும் ஸாயிபாபாவின் அன்பை ரோஹிலாவின் கதை நமக்குக் காட்டுகிறது. உயரமாகவும், வாட்டசாட்டமாகவும், காளையைப் போன்ற வலிமை உடையவனாகவமுள்ள ரோஹிலா என்பவன் சீர்டிக்கு வந்தான். நீண்ட கஃப்னி என்னும் உடை அணிந்திருந்தான். ஸாயிபாபா விடமுள்ள அன்பினால் அங்கு தங்கியிருந்தான். இரவும் பகலும் கலிமாவை (திருக்குரானின் பாடல்கள்) சப்தமாகவும், குரூரமாகவும் ஒப்பித்து “அல்லாஹு அக்பர்” (கடவுள் பெரியவர்) என்று கத்துவான். சீர்டியின் பெரும்பாலான மக்கள் பகல் எல்லாம் தங்கள் வயலில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்குத் திரும்பும் போது ரோஹிலாவின் குரூர இரைச்சல்களாலும், கத்தல்களாலும் வரவேற்கப்படுவார்கள். அவர்கள் தூங்க முடியாமல் மிகுந்த தொல்லையும், அசௌகர்யமும் அடைந்தனர். மௌனமாக இத்தொந்தரவைச் சில நாட்கள் பொறுத்திருந்து, அவர்களால் இனிமேல் படமுடியாது இத்துயரம் என்னும் நிலை வந்தவுடன், பாபாவை அணுகி இதைக் கவனித்து ரோஹிலாவின் தொந்தரவை நிறுத்தும்படியும் வேண்டிக் கொண்டனர். பாபா அவர்களின் வேண்டுதல்களைக் கவனிக்கவில்லை. மாறுபாடாக அவர்களைக் கடிந்தார். அவர்களைத் தங்கள் வேலைகளைக் கவனிக்கும்படியும் ரோஹிலாவைக் கவனிக்க வேண்டாம் என்றும் கூறினார். அவர் மேலும், ரோஹிலாவுக்கு ஸாந்திப்பி என்னும் மிகவும் கெடுதலான மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்றும் அவள் உள்ளே வரமுயன்று ரோஹிலாவையும் தம்மையும் தொந்தரவு செய்வதாயும் ஆனால் ரோஹிலாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவுடன் அவள் உள்ளே நுழையத் துணியவில்லையென்றும் ஆதலால் அவர்கள் மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார். உண்மையில் ரோஹிலாவுக்கு ஒரு மனைவியும் கிடையாது. அவனுக்கு மனைவியாக பாபா குறிப்பிட்டது துர்புத்தி அதாவது கெட்ட எண்ணங்களாகும். ஏனெனில் வேறெதைக் காட்டிலும் கடவுளிடம் வேண்டிக்கொள்வதிலும் முறையிட்டுப் பேரிரைச்சல்கள் செய்வதையும் பாபா விரும்பினார். அவர் ரோஹிலாவின் பக்கம் இருந்து ரோஹிலாவின் இரைச்சல் களையும் கூக்குரல்களையும் பொறுத்துக் கொள்ளுமாறும் அவை சீக்கிரம் மறைந்துவிடும் என்றும் கூறினார்.

பாபாவின் இனியதும் அமிர்தத்தினையொத்த வார்த்தைகளும்

      ஒரு நாள் மத்தியானம் ஆரத்தி முடிந்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாபா கீழ்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார்.
     ”நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து  இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும், அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நான் அரவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப் படுத்துபவன். ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே. நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம். என்பால் கவனத்தைத் திருப்புவனை எதுவும் துன்பம் விளைவிக்காது. ஆனால், மாயை என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும். எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக்கூடிய, அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்.”
     இத்தகைய அழகான, விலைமதிப்பற்ற மொழிகளைக் கேட்டு, இனிமேல் என் குருவைத் தவிர வேறு யாருக்கும் நான் பணிவிடை செய்யப் போவதில்லை என்று என் மனதில் நான் தீர்மானித்தேன். அண்ணா சிஞ்சணீகரிடம் பாபா விடுத்த பதில் (உண்மையில் அது எனக்கானதாகும்) அதாவது நான் ஒரு வேலை பெறுவேன் என்னும் எண்ணம் என் மனதில் சுழன்றது. நான் அங்ஙனம் நிகழுமா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எதிர்கால நிகழ்ச்சிகளைக் கண்ணுறும் போது பாபாவின் வார்த்தைகள் உண்மையாயின. நான் ஒர் அரசாங்க உத்தியோகத்தைப் பெற்றேன். ஆனால் அது குறுகியகால அளவுடையது. பிறகு நான் சுதந்திரம் அடைந்தேன். என் குரு ஸாயிபாபாவினுடைய சேவைக்கு என்னைப் பூரணமாக சமர்பித்தேன்.
     இவ்வத்தியாயத்தை முடிக்கு முன்பாக பல்வேறு இடைஞ்சல்களான ‘மடி’, ‘தூக்கம்’, ‘மனது அலைதல்’, ’உணர்வுகளுடன் உறவு’, இவற்றை விட்டொழித்துவிட்டுத் தங்களுடைய முழுமையும் சிதைவுமற்ற கவனத்தை இந்த ஸாயிபாபாவின் கதைகளுக்கு அளிக்கும்படி இந்நூலைப் பயில்வோரிடம் நான் வேண்டிக் கொள்கிறேன். அவர்களது அன்பு இயற்கையானதாக இருக்கட்டும். பக்தியின் இரகசியத்தை அவர்கள் அறியட்டும். மற்ற பல சாதனைகள் புரிந்து களைப்படைய வேண்டாம். ஓர் எளிய மருந்தை அவர்கள் பற்றட்டும். அதாவது ஸாயிபாபாவின் கதைகளைக் கேட்பது, இது அவர்களின் அறியாமையை அழித்து அவர்களுக்கு முத்தி நல்கும். ஓர் உலோபி பல்வேறு இடங்களில் தங்கினாலும், தன்னுடைய புதைக்கப்பட்ட செல்வத்திலேயே சதா சிந்தனை உள்ளவனாக இருப்பதைப் போல், ஸாயிபாபா நம் அனைவரின் உள்ளமெனும் அரியாசனத்தில் வீற்றிருக்கட்டும்.
     அடுத்த அத்தியாயத்தில் ஸாயிபாபாவின் சீர்டி விஜயத்தைப் பற்றிக் கூறுகிறேன்.

ஸ்ரீசாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்


Friday, 10 February 2017

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 2

No comments
இப்பணியைச் செய்வதன் நோக்கம் – இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும் துணிவின்மையும் – காரசார விவாதம் – குறிப்பிடக்கூடியதும் முனிவருடைய பட்டமுமான 'ஹேமாட்பந்தை' வழங்குதல் – குருவின் அவசியம்




        கடைசி அத்யாயத்தில் தம்முடைய மராத்தி மூல நூலில், இப்பணியைச் செய்வதற்கு அடிகோலிய காரணங்கள், இதைப் படிப்பதற்குத் தகுதியுடையந்தவர்கள் முதலிய வேறுபல அம்சங்களையும் எடுத்துச் சொன்னார். இந்த அத்தியாயத்திலும் அதையே குறிப்பிடத் தொடங்குகிறார்.

இதை எழுதுவதன் காரணம்

     முதலாம் அத்தியாயத்தில் கோதுமை மாவரைத்து, அதை கிராம எல்லைகளில் தூவிவிட்டதன் மூலம் காலரா தொற்று வியாதியைத் தடுத்து அழித்ததான ஸாயிபாபாவின் அற்புதத்தைக் கண்டோம். நான் ஸாயிபாபாவின் பல அற்புத லீலைகளைப் பெரும் உள்ளக் கிளர்ச்சியுடன் கேட்டிருக்கிறேன். அக்கிளர்ச்சியே இவ்வழகான பணியாகப் பொங்கி உருவெடுத்தது, ஸாயிபாபாவின் பெருமையுடைய அற்புதங்களை வரைதலானது, அவருடைய அடியவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும் அறிவுறுத்துவதாகவும் இருப்பதுடன், அவர்களின் பாவங்களையும் நீக்குமாதலினால்தான் நான் ஸாயிபாபாவின் புனித வரலாற்றையும் அவருடைய அறிவுரைகளையும் வரையத் தொடங்கினேன். ஞானியின் வரலாறு என்பது தர்க்க சாஸ்த்திரத்திற்கோ பட்டிமன்றத்துக்கோ உரியது அன்று. அஃது உண்மையும் பெரியதுமான வழியையே காண்பிக்கின்றது.

பணியைச் செய்யத் திறமையின்மையும், துணிவின்மையும்

      தாம் இப்பணியைச் செய்யத் தகுதியுடையவர் அல்ல என்று ஹேமாட்பந்த் நினைத்தார் “எனக்கு நெருங்கிய நண்பனின் வாழ்க்கையே தெரியாது. அப்படியே எனது மனதையும் நான் அறியேன். இவ்வாறிருக்கையில் வேதங்களால் கூறவியலாத ஒரு ஞானியின் வரலாற்றையோ அல்லது அவதாரத்தின் குணங்களையோ நான் எங்ஙனம் எழுதுவேன்? ஒரு ஞானியின் வாழ்க்கையை விவரிக்கும் ஒருவனும் ஞானியாகவே இருக்கவேண்டும். எனவே, நான் எங்ஙனம் அவர்தம் புகழை விவரிக்க இயலும்? ஞானியின் வாழ்க்கையை வரைவதென்பது மிக்க கடினமானதாகும். ஒருவன் ஏழ்கடல் ஆழத்தையும் அளவிட்டு விடலாம். துணி ஜோடனைகளால் ஆகாயத்தையும் அலங்கரித்து விடலாம். இது தீரமிக்க செயலாகும் என்று நான் அறிவேன். இது என்னைப் பார்த்துப் பிறர் நகைக்க இடம் கொடுத்துவிடும்” என நான் ஸாயிபாபாவின் அருளை நாடினேன்.
     அடியவர்கள் விரும்பும் , வெற்றிகரமாய் முடிவுபெறும் இப்பணியை மேற்கொள்வதற்கு ஞானியர் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோர்களை கடவுள் விரும்புகிறார் என்று  மஹாராஷ்ட்டிரத்தைச் சேர்ந்த முன்னோடி கவியும் ஞானியுமான ஸ்ரீஞானேச்வர் மஹாராஜ் என்பவர் எடுத்தியம்பியிருக்கிறார். இப்பணியை ஞானிகள் சங்கல்ப்பிக்கிறார்கள். அடியவன், அம்முடிவை அடைய மறைமுக காரணமாகின்றான். அல்லது கருவியாகின்றான். உதாரணமாக சக வருடம் 1700ல் கவிமஹிபதி ஞானிகளின் வாழ்க்கையை எழுத உயர் நோக்கங் கொண்டார். ஞானிகள் அவரைச் சங்கல்பித்து பணியை நிறைவேற்றி வைத்தார்கள். அம்மாதிரியே சகவருடம் 1800ல் தாஸ்கணுவின் சேவையும் அங்கீகரிக்கப்பட்டது. முன்னவர் பக்தவிஜயம், ஸந்தவிஜயம், பக்த லீலாமிருத், ஸந்த லீலாமிருத் என்னும் நான்கு நூல்களையும் பின்னவர் நவீன ஞானியரைப் பற்றி விவரிக்கப்பட்ட பக்த லீலாமிருத், ஸந்த கதாமிருத் என்ற நூல்களையும் இயற்றினர்.
     பக்த லீலாமிருத்தின் 31, 32, 33 அத்தியாயங்களிலும், ஸந்த கதாமிருத்தின் 57ஆம் அத்தியாயத்திலும் ஸாயிபாபாவின் சுவையான வாழ்க்கையும் அவரின் அறவுரைகளும் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் ஸாயிலீலா பத்திரிக்கை 11,12 தொகுப்பு 17 ஆகியவற்றில் தனியாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. படிப்பவர்கள் இவ்வத்தியாயங்களைப் படிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அங்ஙனமே பாந்திராவைச் சேர்ந்த திருமதி சாவித்திரிபாய் ரகுநாத் தெண்டுல்கர் பதிப்பித்துள்ள ஸ்ரீஸாயிநாத் பஜனமாலா என்ற சிறிய அடக்கமான புத்தகத்திலும் ஸாயிபாபாவின் அற்புத லீலைகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. தாஸ்கணு மஹாராஜும் பல்வேறு இனிய பாடல்களை ஸாயிபாபா மீது எழுதியிருக்கிறார். குஜராத்தில் அமிதாஸ்பவானி மேதா என்னும் சீர்டியைச் சேர்ந்த ஓர் அடியவர் ஸாயிபாபாவின் சில நிகழ்ச்சிகளைப் பதிப்பித்துள்ளார். தஷிணபிட்ஷா ஸான்ஸ்த்தாவும் ’ஸாயிநாத்பிரபா’வை சில பதிப்புகள் செய்தனர். இவ்வாறு ஸாயிபாபாவைப் பற்றி பல நூல்கள் இருக்கும் போது இந்த ஸத்சரித்திரம் ஏன் எழுதப்படவேண்டும், அதற்கான தேவையென்ன என்றும் எதிர்ப்புக் கேள்விகள் வருகின்றன.
     விடை தெளிவானதும், எளியதும் ஆகும். அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஓர் பெருங்கடல் போன்று ஸாயிபாபாவின் வரலாறு உள்ளது. அனைவரும் அதனுள் ஆழ்ந்து மூழ்கி விலைமதிப்பற்ற ஞானம், பக்தி என்ற முத்துக்களை எடுக்கலாம். நல்லுணர்வில் ஊறிக் கிடக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுக்கலாம். ஸாயிபாபாவின் கதைகள், சிறுகதைகள், அறிவுரைகள் ஆகியவை மிகவும் அற்புதமானவை. இவ்வுலக வாழ்க்கையினுடைய துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் ஆகியவர்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன. வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும் அறிவூட்டுவதுமான ஸாயிபாபாவின் இவ்வறிவுரைகளெல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அடியவர்கள் கோரும் “பிரம்மத்துடன் ஐக்கியமாதல்”, “அஷ்டாங்கயோகம்”, “தியானப்பேரின்பம்” முதலியவற்றைப் பெறுவர். எனவே இந்நிகழ்ச்சிகளைப் பொறுக்கி எடுக்க எண்ணங் கொண்டேன். அதுவே எனது சிறந்த வழிபாடு ஆகும் என்பதாதலின், ஸாயிபாபாவின் தரிசனத்துக்கு கொடுத்து வைக்காத இந்த எளிய ஆன்மாக்களின் கண்களுக்கு இந்நிகழ்ச்சித் தொகுப்புகள் பேருவுவகையாக இருக்கும். எனவே நான் ஸாயிபாபாவின் அறவுரைகளையும், இயற்கையானதும் எல்லையற்றதுமான தன்னுணர்வுக் கருத்துக்களையும் சேகரிக்க முற்பட்டேன். இப்பணியில் பாபாவே என் உள்ளுணர்வைக் கிளப்பிவிட்டார். உண்மையில் என்னுடைய அஹங்காரத்தை அவர்தம் பாதத்தடியில் சம்ர்பித்து இம்மை, மறுமை இரண்டிலும் என்னைப் பூரண சந்தோஷமாக்குவார் என்று எண்ணினேன்.
     இப்பணிக்கு நானே, எனக்கு அனுமதி அளிக்கும்படி ஸாயிபாபாவைக் கேட்கமுடியவில்லை. பாபாவின் நெருங்கிய அடியவரான திரு.மாதவ்ராவ் தேச்பாண்டே என்ற சாமாவிடம், சென்று எனக்காக பாபாவிடம் கேட்கும்படி நான் வேண்டிக்கொண்டேன். அவர் எனது எண்ணத்திற்காக பாபாவிடம் வாதாடினார். “இந்த அண்ணா சாஹேப் தங்கள் வரலாற்றை எழுத விரும்புகிறார். அதற்கு நான் ஓர் ஏழைப் பக்கிரி என்று  கூறாதீர்கள். ஆயின் நீங்கள் சம்மதித்து அவருக்கு உதவியளிப்பதாகக் கூறினால் அவர் எழுதுவார், அன்றி தங்கள் திருவடிக்கருணையே இப்பணியை நிறைவேற்றிவிடும். தங்கள் அருள் துணையின்றி எதுவும் வெற்றிகரமாகச் செய்ய இயலாது. ஸாயிபாபா இவ்வேண்டுகோளைத் திருச்செவிமடுத்தவுடன் உருகி, உதி என்னும் திருநீறளித்து ஆசீர்வதித்து தன்னுடைய வரம் நல்கும் கரத்தை என்தலைமேல் வைத்து, ”இவர் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து, குறிப்புகள் வைத்துக்கொள்ளட்டும். நான் இவருக்கு உதவி செய்வேன். அவர் ஒரு புறக்கருவியே ஆவார். என்னுடைய வரலாற்றை நானே எழுதி என்னுடைய அடியவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவேண்டும். அவர்தம் அஹங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்பித்துவிடட்டும். வாழ்க்கையில் இங்ஙனம் செய்பவனுக்கே நான் உதவிபுரிகிறேன். என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ண நான் அவருடைய வீட்டில் “ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே” பணிபுரிகின்றேன். அவருடைய அஹங்காரம் சிறுதுளியும் எஞ்சியிராமல் அறவே அழிக்கப்பட்டுவிட்டால், நானே அவருட் புகுந்து என் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நானே எழுதுகிறேன். அடியவர்தம் உள்ளங்களில் எனது நிகழ்ச்சிகள், அறிவுரைகள் நம்பிக்கையூட்டும். எளிதில் தன்னை உணரலாம். பேரானந்தப் பெருநிலையையும் அவர்கள் எளிதில் பெறுவார்கள். ஆயின் ”ஒருவரது சொந்தக் கருத்தையே நிலைப்படுத்தல், மற்றவர் கருத்தை மறுக்கச் செய்யும் முயற்சிகள், ஒரு பொருளின் நன்மை தீமைகள் பற்றிய விவாதங்கள் இருத்தல் கூடாது” என்று பகர்ந்தருளினார்.
     ”விவாதம்” என்னும் சொல்லானது ஹேமாட்பந்த் என்னும் பட்டத்தை நான் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்க நான் கொடுத்து இருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுகிறது. அதையே இப்போது கூறுகிறேன். காகாஸாஹேப் தீக்‌ஷித், நானாஸாஹேப் சாந்தோர்க்கர் ஆகியவர்களுடன் நான் நெருங்கிய நட்போடிருந்தேன். அவர்கள் என்னை சீர்டிக்குப் போய் பாபாவின் தரிசனத்தைப் பெறும்படி வலியுறுத்தினார்கள். ஆயினும் இடையில் கிளம்பிய ஏதோ ஒன்று என்னை சீர்டிக்குப் போகவிடாமல் தடுத்தது. லோனாவாலாவில் உள்ள எனது நண்பனின் புதல்வன் காய்ச்சல் அடைந்தான். எனது நண்பன், வைத்தியமுறை, வேண்டுதல் முறைகளில் உள்ள எல்லா வழிகளிலும் முயன்றார். ஆயினும் காய்ச்சல் குறையவில்லை. முடிவாகத் தனது குருவை தன் மகனின் படுக்கைக்குப் பக்கத்தில் அமரவைத்தான். இதுவும் கூட பலனளிக்கவில்லை. இதைக் கேள்வியுற்றதும் “என் நண்பனின் பையனைக் காப்பாற்ற முடியாத குருவால் யாது பயன்? குரு நமக்கு எதையுமே செய்ய இயலாதவரானால் நான் ஏன் சீர்டிக்குப் போகவேண்டும்?” இம்மாதிரியாக எண்ணமிட்டு எனது சீர்டி விஜயத்தை ஒத்திப்போட்டேன். ஆயினும், தடுக்கமுடியாதது நிறைவேறியே தீரவேண்டும். அஃது என் விசயத்தில் பின்வருமாறு நடந்தது.

     பிராந்திய ஆபிசர் திரு.நானாஸாஹேப் சாந்தோர்கர் பஸ்ஸீனுக்கு சுற்றுலா போய்க்கொண்டிருந்தார். தாணாவிலிருந்து தாதருக்கு வந்து பஸ்ஸீனுக்குச் செல்லும் வண்டிக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இடையில் பாந்த்ராவுக்கு செல்லும் ஒரு வண்டி வந்தது. அதில் அவர் ஏறியமர்ந்து பாந்த்ராவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் சீர்டி விஜயத்தைக் கைவிட்டது குறித்து என்னைக் கடிந்தார். எனது சீர்டி பயணத்தைப் பற்றி நானாவின் வாக்குவாதங்கள் திருப்தியளிக்கக் கூடியதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருந்தன. எனவே, நான் அன்றிரவே சீர்டி புறப்படத்திட்டமிட்டேன். என்னுடைய சாமான்களைக் கட்டி முடித்து சீர்டிக்குப் புறப்பட்டேன். தாதருக்குப் போய் அங்கிருந்து மன்மாட் போகும் வண்டியைப் பிடிக்கத் திட்டமிட்டு தாதருக்குப் பயணச் சீட்டு பெற்று வண்டியில் அமர்ந்திருந்தேன். வண்டி புறப்பட இருக்கும் போது ஒரு முஸ்லீம் பெரியவர் விரைவாக எனது பெட்டிக்கு வந்தார். எனது மூட்டை முடிச்சுகளைப் பார்த்துவிட்டு “போகும் இடம் என்ன?” என்று கேட்டார். நான் எனது திட்டத்தைக் கூறினேன். பின்னர் அவர் என்னைத் தாதரில் நிற்காமல் போரிபந்தருக்கே நேராகப் போகும்படியும், ஏனெனில் மன்மாட்மெயில் தாதரில் நிற்காது என்றும் அறிவுறுத்தினார். இவ்வற்புதம் நிகழ்ந்திராவிடின் சீர்டிக்குத் திட்டமிட்டபடி அடுத்த நாளே போய்ச் சேர்ந்திருக்கமாட்டேன். பல ஐயங்கள் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கக் கூடும். ஆயினும், அடுத்த நாள் காலை 9-10 மணிக்குள்ளாகவே சீர்டியை அடைந்தேன். திரு.பாவ்ஸாஹேப் (காகா) எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இது 1910ல் நிகழ்ந்தது. யாத்ரீக அடியார்களுக்கு ஒரே ஒரு தங்குமிடம் தான் இருந்தது. அது ”ஸாடேயினுடைய வாடா”வாகும். குதிரை வண்டியிலிருந்து இறங்கிய பின்னர் பாபாவின் தரிசனம் பெற ஆவலாய் ஏங்கியிருந்தேன். மசூதியினின்று திரும்பிவந்த பெரும் அடியவரான தாத்யாஸாஹேப் நூல்கர், ஸாயிபாபா வாடாவின் மூலையில் இருக்கிறார், முதலில் ஒரு முன்னோடி தரிசனம் செய்துவிட்டு, குளித்தபின் சாவகாசமாகப் பார்க்கலாம் என்று கூறினார். இதைக் கேட்டவுடனே நான் பாபாவிடம் ஓடி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நானாஸாஹேப் சாந்தோர்கர் என்னிடம் கூறியதற்கு அதிகமாகவே கண்டேன். என்னுடைய புலன்களெல்லாம் திருப்தியடைந்தன. நான் பசி தாகத்தை மறந்தேன். ஸாயிபாபாவின் பாதங்களைத் தொட்டவுடனே நான் வாழ்க்கையில் அதிக புத்துணர்ச்சி கொண்டவனாக மாறினேன். என்னை இச்செயலில் இடைவிடாமல் தூண்டி ஸாயிபாபாவின் தரிசனத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு கடமைப்பட்டதைக் கருதினேன். அவர்களை உண்மை உறவினர்களாக நினைக்கிறேன். அவர்களுடைய கடனை நான் திருப்பித் தரமுடியாது. அவர்களை நினைக்கிறேன், அவர்கள் முன் விழுந்து வணங்குகிறேன். ஸாயிபாபாவின் தரிசனத்திலுள்ள நூதனமானது நான் கண்டவாறு, நம்முடைய எண்ணங்கள் மாறுகின்றன. முன்னைக் கருமங்களின் வலிமை அழிக்கப்படுகின்றன. அல்லது பற்றற்ற நிலை அதிகரிக்கிறது. முன்னைப் பிறவிகளில் செய்த பல நற்கருமங்களால் அத்தகைய சுபதரிசனம் அடையப்படுகிறது. நீங்கள் ஸாயிபாபாவை கண்டுவிட்டீர்களானால் புறவுலகு எல்லாம் ஸாயிபாபாவாகத் தோற்றமளிக்கிறது.


சூடான விவாதம்

     குருவின் தேவையைப் பற்றி எனக்கும், பாலாஸாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம் நான் சீர்டிக்கு வந்த தினத்தன்று நடைபெற்றது. “நம் சுதந்திரத்தை நாம் ஏன் இழக்க வேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்” என்று நான் விவாதித்தேன். ”நாம் நம்முடைய கடமையைச் செய்யவேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார்? ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சோம்பேறியாகத் தூங்குவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்?” இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன். திரு.பாடே கருமத்து (அன்றி தலைவிதி)க்காக வாதாடிக் கூறியதாவது, ”நடப்பது நடந்தே தீரும். பெரியோர்கள் எல்லாம் தோல்வியுற்றிருக்கிறார்கள். மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் வேறுவழியில் செயல்படுகிறது. உம்முடைய புத்தி சாதுர்யத்தை தள்ளி விடுக. பெருமையும், அஹங்காரமும் உமக்கு உதவாது.” கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றும் வழக்கம் போல ஒரு முடிவும் காணப்படவில்லை. நாங்கள் களைப்படைந்துவிட்டதால் முடிவாக நான் மனஅமைதியை இழந்தேன். வலிவான “சரீர அபிமானம்”, அஹங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையெனக் கண்டேன். அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம்.
     பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகாஸாஹேப் தீக்ஷித்தை, பாபா பின்வருமாறு வினவினார். ‘ஸாடே வாதாவில் என்ன நடந்து கொண்டிருந்தது? விவாதம் எதைப் பற்றியது? என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, ”ஹேமாட்பந்த் என்ன கூறுகிறார்?”, இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாதேவாடாவானது மசூதியினின்று நல்ல தூரத்திலிருக்கிறது. சர்வ வியாபியாயும், அகத்திருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?

முக்கியமானதும் ஞானமிளிர்வதுமான பட்டம்

     ஸாயிபாபா என்னை ஏன் ’ஹேமாட்பந்த்’ என்னும் பெயரால் அழைக்கவேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன். இச்சொல் ‘ஹேமத்திரியபந்த்’ என்ற வார்த்தையிலிருந்து திருத்தப்பட்டதாகும். இந்த ‘ஹேமத்திரியபந்த்’ யாதவ அரச வம்சத்தைச் சேர்ந்த ராமதேவ், மகாதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ்பெற்ற மந்திரியாவார். கல்வி, கேள்வி நிரம்பப் பெற்று, நற்பண்புகள் நிறையப் பெற்ற அவர். ஆன்மீக விஷயங்கள் அடங்கிய சதுர்வர்க்க சிந்தாமணி மற்றும் ராஜ்யப்ரசஸ்தி போன்ற பல உயர்ந்த நூல்களின் ஆசிரியருமாவார். கணக்குப் பேரேடுகளில் புதிய முறைகளைக் கண்டுபிடித்துப் புகுத்தியவரும் மற்றும் மராத்தியச் சுருக்கெழுத்தின் கர்த்தாவுமாவார். ஆனால் நான் முற்றிலும் மாறுபட்டவன், அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர எண்ணத்தோன். எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்காகச் சூட்டப்பட்டது என்பது விளங்கவில்லை. ஆனாலும் அதைக் குறித்து தீவிரமாகச் சிந்தித்து அது என் அகங்காரத்தை அழித்து பணிவாகவும், அடக்கமுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது என நினைத்தேன். விவாதத்தில் எனக்குள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப்பட்டதாகும்.
     
    எதிர்கால நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில் பாபாவினது சொற்கள் (திரு. தபோல்கரை ஹேமாட்பந்த் என அழைத்தது) முக்கியமானதும் தீர்க்க தரிசனம் நிறைந்ததும் ஆகும் ஏனெனில் மிகவும் புத்திசாலித்தனமாக ஸாயிஸமஸ்தானத்தின் நிர்வாகங்களை கவனித்து எல்லாக் கணக்குகளையும் நன்றாக வைத்திருந்தது, முக்கியமானதும் ஆத்மார்த்த விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை, ’நான்’ தன்மையைச் சரணமிடுதல், தன்னையுணர்தல் போன்றவற்றைக் குறிக்கும் ’ஸாயி ஸத் சரித்திரம்’ என்ற அத்தகைய சிறப்பான நூலின் ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------

குருவின் தேவையைப்பற்றி

      ஹேமாட்பந்த், பாபா இவ்விஷயத்தைப் பற்றி என்ன சொன்னார் என்பன பற்றி எவ்விதக் குறிப்பும் விட்டுவைக்கவில்லை. ஆனால் காகாஸாஹேப் தீக்ஷித் இவ்விஷயத்தைப் பற்றித் தனது குறிப்புகளைப் பதிப்பித்துள்ளார். ஹேமாட்பந்தின் ஸாயிபாபா சந்திப்பின் அடுத்த நாளில் பாபாவிடம் காகாஸாஹேப் தீக்ஷித் சென்று தான் சீர்டியை விட்டுப் போக வேண்டுமா எனக் கேட்டார். பாபா “ஆம்” என்றார். பிறகு “எங்கே போவது” என யாரோ கேட்டார். பாபா ‘உயரே மேலே’ என்று கூறினார். அம்மனிதர் “வழி எப்படிப்பட்டது” என பாபாவிடம் வினவினார். பாபா கூறினார், அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன. இங்கு இருந்தும்(சீர்டியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது. பாதை கடினமானது. புலிகளும், ஓநாய்களும் வழியிலுள்ள காடுகளில் உள்ளன. நான்(காகாஸாஹேப் தீக்ஷித்) கேட்டேன் “ஒரு வழிகாட்டியை நாம் அழைத்துச் சென்றால் என்ன?” அதற்கு பாபா கூறினார் : அப்போது கடினம் இல்லை. புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார். வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம். அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது”. இந்நிகழ்ச்சியின் போது திரு.தபோல்கரும் (ஹேமாட்பந்த்) அறை அருகே இருந்தார். இதுவே குருவின் அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார். ஒரு மனிதன் சுதந்திரமானவனா, அல்லது கட்டுப்பட்டவனா என்னும் விவாதம் ஆன்ம விஷயங்களில் உபயோகமில்லை என்றும், இவ்வத்தியாயத்தின் மராத்தி மூலப் பதிப்பில் விளக்கப்பட்டபடி பெரிய அவதாரங்களான  ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் முதலியோர் வாழ்க்கையில் தமது குருக்களான வஸிஷ்டர், ஸாந்தீபனி முதலியோரிடமும் தன்னையறிவதற்காக சரணமடைந்தார்கள் என்றும் குருவினுடைய உபதேசத்தினாலேயே பரமார்த்திகம் அடையப்படுவது என்றும், நம்பிக்கையும், பொறுமையுமே அத்தகைய முன்னேற்றத்திற்குத் தேவையான நற்பண்புகளாம் என்பதுமே பாபாவின் திருக்குறிப்பாம்.


ஸ்ரீசாயியைப் பணிக, அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்

---







Thursday, 9 February 2017

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 1

No comments
நமஸ்காரங்கள்
கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதன் தத்துவ உட்கருத்தும்


புராதனமானதும், மிக்க மரியாதை உள்ளதுமான வழக்கத்தின்படி, ஹேமாட்பந்த், இந்த ஸாயி சரித்திரத்தைப் பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.
1. முதலில் எல்லாவித இடையூறுகளையும் நீக்குதற் பொருட்டாகவும், தன் பணி வெற்றியுறவும் “ஐந்து கரத்தனை யானை முகத்தனை” மிக்க பணிவுடன் தலை தாழ்த்தி வணங்குகிறார். ஸ்ரீ சீர்டி ஸாயியே, கணபதி என்றும் கூறுகிறார்.
2. பின்னர் தன் மனத்திலே உதித்த எண்ணங்களை உயர்த்தி உணர்வூட்ட தம் தாய் சரஸ்வதியை நமஸ்கரிக்கின்றார். ஸ்ரீ ஸாயி ’அறிவின் தெய்வமே’ என்றும். அவரே தன் வாழ்க்கை கீதத்தை அழகுடன் பாடுகிறார் என்றும் கூறுகிறார்.
3. ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலையும் முறையே நிகழ்த்தும் பிரம்மா, விஸ்ணு, சங்கரர் ஆகியோரையும் வணங்கி சாயிநாதர் அவர்களுடன் ஒன்றானவர் என்றும், சம்சாரம் எனும் மாபெரும் ஆற்றினைத் தாண்டி நம்மை சுமந்து செல்லவல்ல மாபெரும் ஸத்குரு என்றும் விளம்பி,
4. பின்னர் பரசுராமரால் கடலினின்று உயர்த்தப்பட்ட கொங்கண தேசத்தில் அவதரித்துத் தம்மைக் காக்கும் தம் குல தெய்வமான ‘நாராயண ஆதிநாத்’தையும் குடும்பத்தின் ஆதி புருஷரையும் நமஸ்கரித்து,
5. பின்னர் தனது கோத்திரத்தில் அவதரித்த பாரத்வாஜ முனிவரையும், பல்வேறு ரிஷிகளான யாக்ஞவல்க்யர், பிருகு, பராசரர், நாரதர், வேதவியாஸர், ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், சுகர், சௌனகர், விசுவாமித்திரர், வஸிஷ்டர், வால்மீகி, வாமதேவர், ஜைமினி, வைசம்பாயனர், நவயோகீந்திரர் முதலியவரையும் நவீன மகான்களாகிய நிவிருத்தி, ஞானேச்வர், ஸோபான், முக்தாபாய், ஜனார்த்தனர், ஏக்நாத், நாமதேவர், துக்காராம், கனகர், நரஹரி முதலானோரையும் பணிந்து தலைவணங்கி நமஸ்கரித்து,
6. பிறகு தனது தாத்தாவான ஸதாசிவரையும் தகப்பனாரான ரகுநாதரையும், தன்னை இளம்வயதில் பிரிந்த அன்னை தந்தைக்கு நிகரான அத்தை, தன் அன்பிற்குரிய அண்ணன் ஆகியோரையும் வணங்கி,
7. பின்னர் படிப்பவர்களையும் வணங்கி, தனது பணிக்கு முழுஅன்பும் மனமும் சிதையாத கவனத்தையும் நினைப்பையும்  கொடுத்தருள வேண்டிக்கொண்டும்,
8. கடைசியாக தனது ஒரே அடைக்கலமும், பிரம்மமே மெய்ப்பொருள், பாரனைத்தும் மாயத்தோற்றம் என்று தனக்கு உணர்விக்கின்ற ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீஸத்குரு சீர்டி பாபா அவர்களை நமஸ்கரித்து அங்ஙனமே எம்பெருமான் வசியும் எல்லா ஜீவராசிகளையும் வணங்கித் துதிக்கின்றார்.
பராசரர், வியாசர், சாண்டில்யர் முதலியோரது கருத்தின்படி ’பக்தியால் பலகாலும்’ துதித்தவற்றைச் சுருக்கமாகக் கூறிய பின்பு ஆசிரியர் பின் வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்.
     1910-ஆம் ஆண்டிற்குப்பின், எப்போதோ ஒரு நல்ல நாள் காலை நேரத்தில் மசூதிக்கு ஸாயிபாபாவை தரிசிப்பதற்காகச் சென்றிருந்தேன். பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன். தன் முகம், வாய் இவற்றைக் கழுவிய பின்பு, ஸாயிபாபா கோதுமை மாவு அரைக்கத் தயார் படுவதில் முனைந்தார். ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து, பின் தம் கஃனியின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு, கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார். திருகையைச் சுற்றி, கோதுமையை அரைக்கத் தொடங்கினார், பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய வேலையென்ன என்று நினைத்தேன். அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள். ஆயினும், ஒருவருக்கும் பாபா என்ன செய்கிறார் என்று கேட்கத் துணிவு வரவில்லை. பாபா மாவரைக்கும் இச்செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும் பெண்களும் பாபாவின் செய்கையைக் காண பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர். கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய வந்து நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, வலிய குச்சியைக் கைப்பற்றி, பாபாவின் லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர். முதலில் பாபா கடுங்கோபம் அடைந்தார். ஆயினும், அந்தப் பெண்மணிகளின் அன்பையும் பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார். அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் ”பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வாழ்ந்தார் ஆதலாலும் அவருக்கு ரொட்டி, பிரட் செய்ய கோதுமை மாவு தேவையில்லை, எனவே இவ்வளவு கோதுமை மாவை என்ன செய்வார்? ஒருவேளை பாபா அன்பாயிருக்கும், காரணத்தால், இம்மாவை நமக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவார்” என்றவாறு எண்ணமிட்டபடி பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து, ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார்கள். இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பாபா, கோபமடைந்து, "பெண்களே, உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கிறீர்கள்? நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடன் கடன் பட்டிருக்கிறேனா என்ன? தயவு செய்து இப்போது இதைச் செய்யுங்கள்; ”இம்மாவை எடுத்துச் சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார். இதைக் கேட்டபின், அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா சொன்னபடியே அங்கே மாவைப் பரப்பிவிட்டார்கள்.
     பாபா செய்த இவைகளெல்லாம் என்னவென்று சீர்டி மக்களை வினவினேன். காலரா நோய் கிராமத்தில் பரவிக் கொண்டு இருப்பதாயும், இது அதை எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர். கோதுமை மாவு அரைக்கப்படவில்லை. காலராவே அரைக்கப்பட்டு கொட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர். நானும் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்தது. "காலராவுக்கும் கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாது? சாதாரணமாக அவைகளுக்கு உள்ள உறவு என்ன? அவை இரண்டையும் எங்ஙனம் இணைக்கமுடியும்? இந்நிகழ்ச்சி விவரிக்க இயலாததாய் இருக்கிறது. நான் இதைப்பற்றிச் சிறிது எழுதி என் மனம் நிறைவடையும்வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்”. இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக எண்ணமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இங்ஙனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறான ‘ஸத் சரித்திரத்தை’ எழுத உணர்ச்சியூட்டப்பட்டேன்.
     பாபாவின் அருளுடனும் ஆசியுடனும் இப்பணி செவ்வனே வெற்றிகரமாகச் செய்யப்பட்டது என்பதையும் நாம் அறிவோம்.

மாவரைத்ததன் தத்துவ உட்கருத்து

     சீர்டி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைத்த காரணத்தைத் தவிர வேறு ஒரு தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஸாயிபாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் சீர்டியில் வாழ்ந்தார். இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார். கோதுமையை மாத்திரமன்று, பாவங்களையும், உள்ளம், உடல் ஆகியவற்றின் துன்பங்களையும் கணக்கில்லாத் தன் அடியவர்களின் தொல்லைகளையும் அரைத்துத் தீர்த்தார். கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்தது. முன்னது கீழ்க்கல்லாகும் பின்னது மேற்கல்லாகும். பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானமாகும். சத்துவ, ராஜச, தாமச என்ற முக்குணங்களை சேர்ந்த நமது எல்லா உணர்ச்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகளந்துகளாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி ஞானம் அல்லது தன்னை உணர்தல் என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும். இக்குணங்களை தள்ளிவிடுவது அத்தகைய கடினமானது. ஏனெனில், அவைகள் அவ்வளவு நுட்பமானவை.
     கபீரின் ஒரு நிகழ்ச்சியை இது     ஞாபகமூட்டுகிறது. ஒரு பெண்மணி சோளத்தை அரைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர் தன் குரு நிபதிரஞ்சனரிடம், “திருகையில் இடப்பட்ட சோளத்தைப் போன்று இவ்வுலக வாழ்க்கை எனும் திருகையாலே நசுக்கப்படும் போது நான் அஞ்சுவதனால் அழுகிறேன்” என்று கூறினார். நிபதிரஞ்ஜனர் “பயப்படாதே, நான் செய்வது போல் இத்திருகையில் உள்ள ஞானமெனும் பிடியைப் பிடித்துக்கொள். அதிலிருந்து நெடுந்தூரம் சென்று திரியாதே. எனவே, உட்புறமாகத் திரும்பு அப்போது நீ காப்பாற்றப்படுவது நிச்சயம்” என்று பதிலளித்தாராம்.

ஸ்ரீஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்


(தொடரும்...)