Friday, 10 February 2017

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 2

No comments
இப்பணியைச் செய்வதன் நோக்கம் – இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும் துணிவின்மையும் – காரசார விவாதம் – குறிப்பிடக்கூடியதும் முனிவருடைய பட்டமுமான 'ஹேமாட்பந்தை' வழங்குதல் – குருவின் அவசியம்




        கடைசி அத்யாயத்தில் தம்முடைய மராத்தி மூல நூலில், இப்பணியைச் செய்வதற்கு அடிகோலிய காரணங்கள், இதைப் படிப்பதற்குத் தகுதியுடையந்தவர்கள் முதலிய வேறுபல அம்சங்களையும் எடுத்துச் சொன்னார். இந்த அத்தியாயத்திலும் அதையே குறிப்பிடத் தொடங்குகிறார்.

இதை எழுதுவதன் காரணம்

     முதலாம் அத்தியாயத்தில் கோதுமை மாவரைத்து, அதை கிராம எல்லைகளில் தூவிவிட்டதன் மூலம் காலரா தொற்று வியாதியைத் தடுத்து அழித்ததான ஸாயிபாபாவின் அற்புதத்தைக் கண்டோம். நான் ஸாயிபாபாவின் பல அற்புத லீலைகளைப் பெரும் உள்ளக் கிளர்ச்சியுடன் கேட்டிருக்கிறேன். அக்கிளர்ச்சியே இவ்வழகான பணியாகப் பொங்கி உருவெடுத்தது, ஸாயிபாபாவின் பெருமையுடைய அற்புதங்களை வரைதலானது, அவருடைய அடியவர்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும் அறிவுறுத்துவதாகவும் இருப்பதுடன், அவர்களின் பாவங்களையும் நீக்குமாதலினால்தான் நான் ஸாயிபாபாவின் புனித வரலாற்றையும் அவருடைய அறிவுரைகளையும் வரையத் தொடங்கினேன். ஞானியின் வரலாறு என்பது தர்க்க சாஸ்த்திரத்திற்கோ பட்டிமன்றத்துக்கோ உரியது அன்று. அஃது உண்மையும் பெரியதுமான வழியையே காண்பிக்கின்றது.

பணியைச் செய்யத் திறமையின்மையும், துணிவின்மையும்

      தாம் இப்பணியைச் செய்யத் தகுதியுடையவர் அல்ல என்று ஹேமாட்பந்த் நினைத்தார் “எனக்கு நெருங்கிய நண்பனின் வாழ்க்கையே தெரியாது. அப்படியே எனது மனதையும் நான் அறியேன். இவ்வாறிருக்கையில் வேதங்களால் கூறவியலாத ஒரு ஞானியின் வரலாற்றையோ அல்லது அவதாரத்தின் குணங்களையோ நான் எங்ஙனம் எழுதுவேன்? ஒரு ஞானியின் வாழ்க்கையை விவரிக்கும் ஒருவனும் ஞானியாகவே இருக்கவேண்டும். எனவே, நான் எங்ஙனம் அவர்தம் புகழை விவரிக்க இயலும்? ஞானியின் வாழ்க்கையை வரைவதென்பது மிக்க கடினமானதாகும். ஒருவன் ஏழ்கடல் ஆழத்தையும் அளவிட்டு விடலாம். துணி ஜோடனைகளால் ஆகாயத்தையும் அலங்கரித்து விடலாம். இது தீரமிக்க செயலாகும் என்று நான் அறிவேன். இது என்னைப் பார்த்துப் பிறர் நகைக்க இடம் கொடுத்துவிடும்” என நான் ஸாயிபாபாவின் அருளை நாடினேன்.
     அடியவர்கள் விரும்பும் , வெற்றிகரமாய் முடிவுபெறும் இப்பணியை மேற்கொள்வதற்கு ஞானியர் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோர்களை கடவுள் விரும்புகிறார் என்று  மஹாராஷ்ட்டிரத்தைச் சேர்ந்த முன்னோடி கவியும் ஞானியுமான ஸ்ரீஞானேச்வர் மஹாராஜ் என்பவர் எடுத்தியம்பியிருக்கிறார். இப்பணியை ஞானிகள் சங்கல்ப்பிக்கிறார்கள். அடியவன், அம்முடிவை அடைய மறைமுக காரணமாகின்றான். அல்லது கருவியாகின்றான். உதாரணமாக சக வருடம் 1700ல் கவிமஹிபதி ஞானிகளின் வாழ்க்கையை எழுத உயர் நோக்கங் கொண்டார். ஞானிகள் அவரைச் சங்கல்பித்து பணியை நிறைவேற்றி வைத்தார்கள். அம்மாதிரியே சகவருடம் 1800ல் தாஸ்கணுவின் சேவையும் அங்கீகரிக்கப்பட்டது. முன்னவர் பக்தவிஜயம், ஸந்தவிஜயம், பக்த லீலாமிருத், ஸந்த லீலாமிருத் என்னும் நான்கு நூல்களையும் பின்னவர் நவீன ஞானியரைப் பற்றி விவரிக்கப்பட்ட பக்த லீலாமிருத், ஸந்த கதாமிருத் என்ற நூல்களையும் இயற்றினர்.
     பக்த லீலாமிருத்தின் 31, 32, 33 அத்தியாயங்களிலும், ஸந்த கதாமிருத்தின் 57ஆம் அத்தியாயத்திலும் ஸாயிபாபாவின் சுவையான வாழ்க்கையும் அவரின் அறவுரைகளும் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் ஸாயிலீலா பத்திரிக்கை 11,12 தொகுப்பு 17 ஆகியவற்றில் தனியாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. படிப்பவர்கள் இவ்வத்தியாயங்களைப் படிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அங்ஙனமே பாந்திராவைச் சேர்ந்த திருமதி சாவித்திரிபாய் ரகுநாத் தெண்டுல்கர் பதிப்பித்துள்ள ஸ்ரீஸாயிநாத் பஜனமாலா என்ற சிறிய அடக்கமான புத்தகத்திலும் ஸாயிபாபாவின் அற்புத லீலைகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. தாஸ்கணு மஹாராஜும் பல்வேறு இனிய பாடல்களை ஸாயிபாபா மீது எழுதியிருக்கிறார். குஜராத்தில் அமிதாஸ்பவானி மேதா என்னும் சீர்டியைச் சேர்ந்த ஓர் அடியவர் ஸாயிபாபாவின் சில நிகழ்ச்சிகளைப் பதிப்பித்துள்ளார். தஷிணபிட்ஷா ஸான்ஸ்த்தாவும் ’ஸாயிநாத்பிரபா’வை சில பதிப்புகள் செய்தனர். இவ்வாறு ஸாயிபாபாவைப் பற்றி பல நூல்கள் இருக்கும் போது இந்த ஸத்சரித்திரம் ஏன் எழுதப்படவேண்டும், அதற்கான தேவையென்ன என்றும் எதிர்ப்புக் கேள்விகள் வருகின்றன.
     விடை தெளிவானதும், எளியதும் ஆகும். அகன்று ஆழ்ந்த எல்லையற்ற ஓர் பெருங்கடல் போன்று ஸாயிபாபாவின் வரலாறு உள்ளது. அனைவரும் அதனுள் ஆழ்ந்து மூழ்கி விலைமதிப்பற்ற ஞானம், பக்தி என்ற முத்துக்களை எடுக்கலாம். நல்லுணர்வில் ஊறிக் கிடக்கும் மக்களுக்கு அவற்றைக் கொடுக்கலாம். ஸாயிபாபாவின் கதைகள், சிறுகதைகள், அறிவுரைகள் ஆகியவை மிகவும் அற்புதமானவை. இவ்வுலக வாழ்க்கையினுடைய துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் ஆகியவர்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன. வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும் அறிவூட்டுவதுமான ஸாயிபாபாவின் இவ்வறிவுரைகளெல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அடியவர்கள் கோரும் “பிரம்மத்துடன் ஐக்கியமாதல்”, “அஷ்டாங்கயோகம்”, “தியானப்பேரின்பம்” முதலியவற்றைப் பெறுவர். எனவே இந்நிகழ்ச்சிகளைப் பொறுக்கி எடுக்க எண்ணங் கொண்டேன். அதுவே எனது சிறந்த வழிபாடு ஆகும் என்பதாதலின், ஸாயிபாபாவின் தரிசனத்துக்கு கொடுத்து வைக்காத இந்த எளிய ஆன்மாக்களின் கண்களுக்கு இந்நிகழ்ச்சித் தொகுப்புகள் பேருவுவகையாக இருக்கும். எனவே நான் ஸாயிபாபாவின் அறவுரைகளையும், இயற்கையானதும் எல்லையற்றதுமான தன்னுணர்வுக் கருத்துக்களையும் சேகரிக்க முற்பட்டேன். இப்பணியில் பாபாவே என் உள்ளுணர்வைக் கிளப்பிவிட்டார். உண்மையில் என்னுடைய அஹங்காரத்தை அவர்தம் பாதத்தடியில் சம்ர்பித்து இம்மை, மறுமை இரண்டிலும் என்னைப் பூரண சந்தோஷமாக்குவார் என்று எண்ணினேன்.
     இப்பணிக்கு நானே, எனக்கு அனுமதி அளிக்கும்படி ஸாயிபாபாவைக் கேட்கமுடியவில்லை. பாபாவின் நெருங்கிய அடியவரான திரு.மாதவ்ராவ் தேச்பாண்டே என்ற சாமாவிடம், சென்று எனக்காக பாபாவிடம் கேட்கும்படி நான் வேண்டிக்கொண்டேன். அவர் எனது எண்ணத்திற்காக பாபாவிடம் வாதாடினார். “இந்த அண்ணா சாஹேப் தங்கள் வரலாற்றை எழுத விரும்புகிறார். அதற்கு நான் ஓர் ஏழைப் பக்கிரி என்று  கூறாதீர்கள். ஆயின் நீங்கள் சம்மதித்து அவருக்கு உதவியளிப்பதாகக் கூறினால் அவர் எழுதுவார், அன்றி தங்கள் திருவடிக்கருணையே இப்பணியை நிறைவேற்றிவிடும். தங்கள் அருள் துணையின்றி எதுவும் வெற்றிகரமாகச் செய்ய இயலாது. ஸாயிபாபா இவ்வேண்டுகோளைத் திருச்செவிமடுத்தவுடன் உருகி, உதி என்னும் திருநீறளித்து ஆசீர்வதித்து தன்னுடைய வரம் நல்கும் கரத்தை என்தலைமேல் வைத்து, ”இவர் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றைத் தொகுத்து, குறிப்புகள் வைத்துக்கொள்ளட்டும். நான் இவருக்கு உதவி செய்வேன். அவர் ஒரு புறக்கருவியே ஆவார். என்னுடைய வரலாற்றை நானே எழுதி என்னுடைய அடியவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யவேண்டும். அவர்தம் அஹங்காரத்தை அறவே களைந்து என் பாதங்களில் சமர்பித்துவிடட்டும். வாழ்க்கையில் இங்ஙனம் செய்பவனுக்கே நான் உதவிபுரிகிறேன். என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றி எண்ண நான் அவருடைய வீட்டில் “ஒல்லும் வகையெல்லாம் ஓவாதே” பணிபுரிகின்றேன். அவருடைய அஹங்காரம் சிறுதுளியும் எஞ்சியிராமல் அறவே அழிக்கப்பட்டுவிட்டால், நானே அவருட் புகுந்து என் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நானே எழுதுகிறேன். அடியவர்தம் உள்ளங்களில் எனது நிகழ்ச்சிகள், அறிவுரைகள் நம்பிக்கையூட்டும். எளிதில் தன்னை உணரலாம். பேரானந்தப் பெருநிலையையும் அவர்கள் எளிதில் பெறுவார்கள். ஆயின் ”ஒருவரது சொந்தக் கருத்தையே நிலைப்படுத்தல், மற்றவர் கருத்தை மறுக்கச் செய்யும் முயற்சிகள், ஒரு பொருளின் நன்மை தீமைகள் பற்றிய விவாதங்கள் இருத்தல் கூடாது” என்று பகர்ந்தருளினார்.
     ”விவாதம்” என்னும் சொல்லானது ஹேமாட்பந்த் என்னும் பட்டத்தை நான் பெற்ற நிகழ்ச்சியை விவரிக்க நான் கொடுத்து இருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டுகிறது. அதையே இப்போது கூறுகிறேன். காகாஸாஹேப் தீக்‌ஷித், நானாஸாஹேப் சாந்தோர்க்கர் ஆகியவர்களுடன் நான் நெருங்கிய நட்போடிருந்தேன். அவர்கள் என்னை சீர்டிக்குப் போய் பாபாவின் தரிசனத்தைப் பெறும்படி வலியுறுத்தினார்கள். ஆயினும் இடையில் கிளம்பிய ஏதோ ஒன்று என்னை சீர்டிக்குப் போகவிடாமல் தடுத்தது. லோனாவாலாவில் உள்ள எனது நண்பனின் புதல்வன் காய்ச்சல் அடைந்தான். எனது நண்பன், வைத்தியமுறை, வேண்டுதல் முறைகளில் உள்ள எல்லா வழிகளிலும் முயன்றார். ஆயினும் காய்ச்சல் குறையவில்லை. முடிவாகத் தனது குருவை தன் மகனின் படுக்கைக்குப் பக்கத்தில் அமரவைத்தான். இதுவும் கூட பலனளிக்கவில்லை. இதைக் கேள்வியுற்றதும் “என் நண்பனின் பையனைக் காப்பாற்ற முடியாத குருவால் யாது பயன்? குரு நமக்கு எதையுமே செய்ய இயலாதவரானால் நான் ஏன் சீர்டிக்குப் போகவேண்டும்?” இம்மாதிரியாக எண்ணமிட்டு எனது சீர்டி விஜயத்தை ஒத்திப்போட்டேன். ஆயினும், தடுக்கமுடியாதது நிறைவேறியே தீரவேண்டும். அஃது என் விசயத்தில் பின்வருமாறு நடந்தது.

     பிராந்திய ஆபிசர் திரு.நானாஸாஹேப் சாந்தோர்கர் பஸ்ஸீனுக்கு சுற்றுலா போய்க்கொண்டிருந்தார். தாணாவிலிருந்து தாதருக்கு வந்து பஸ்ஸீனுக்குச் செல்லும் வண்டிக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இடையில் பாந்த்ராவுக்கு செல்லும் ஒரு வண்டி வந்தது. அதில் அவர் ஏறியமர்ந்து பாந்த்ராவுக்கு வந்து என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் சீர்டி விஜயத்தைக் கைவிட்டது குறித்து என்னைக் கடிந்தார். எனது சீர்டி பயணத்தைப் பற்றி நானாவின் வாக்குவாதங்கள் திருப்தியளிக்கக் கூடியதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருந்தன. எனவே, நான் அன்றிரவே சீர்டி புறப்படத்திட்டமிட்டேன். என்னுடைய சாமான்களைக் கட்டி முடித்து சீர்டிக்குப் புறப்பட்டேன். தாதருக்குப் போய் அங்கிருந்து மன்மாட் போகும் வண்டியைப் பிடிக்கத் திட்டமிட்டு தாதருக்குப் பயணச் சீட்டு பெற்று வண்டியில் அமர்ந்திருந்தேன். வண்டி புறப்பட இருக்கும் போது ஒரு முஸ்லீம் பெரியவர் விரைவாக எனது பெட்டிக்கு வந்தார். எனது மூட்டை முடிச்சுகளைப் பார்த்துவிட்டு “போகும் இடம் என்ன?” என்று கேட்டார். நான் எனது திட்டத்தைக் கூறினேன். பின்னர் அவர் என்னைத் தாதரில் நிற்காமல் போரிபந்தருக்கே நேராகப் போகும்படியும், ஏனெனில் மன்மாட்மெயில் தாதரில் நிற்காது என்றும் அறிவுறுத்தினார். இவ்வற்புதம் நிகழ்ந்திராவிடின் சீர்டிக்குத் திட்டமிட்டபடி அடுத்த நாளே போய்ச் சேர்ந்திருக்கமாட்டேன். பல ஐயங்கள் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கக் கூடும். ஆயினும், அடுத்த நாள் காலை 9-10 மணிக்குள்ளாகவே சீர்டியை அடைந்தேன். திரு.பாவ்ஸாஹேப் (காகா) எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இது 1910ல் நிகழ்ந்தது. யாத்ரீக அடியார்களுக்கு ஒரே ஒரு தங்குமிடம் தான் இருந்தது. அது ”ஸாடேயினுடைய வாடா”வாகும். குதிரை வண்டியிலிருந்து இறங்கிய பின்னர் பாபாவின் தரிசனம் பெற ஆவலாய் ஏங்கியிருந்தேன். மசூதியினின்று திரும்பிவந்த பெரும் அடியவரான தாத்யாஸாஹேப் நூல்கர், ஸாயிபாபா வாடாவின் மூலையில் இருக்கிறார், முதலில் ஒரு முன்னோடி தரிசனம் செய்துவிட்டு, குளித்தபின் சாவகாசமாகப் பார்க்கலாம் என்று கூறினார். இதைக் கேட்டவுடனே நான் பாபாவிடம் ஓடி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நானாஸாஹேப் சாந்தோர்கர் என்னிடம் கூறியதற்கு அதிகமாகவே கண்டேன். என்னுடைய புலன்களெல்லாம் திருப்தியடைந்தன. நான் பசி தாகத்தை மறந்தேன். ஸாயிபாபாவின் பாதங்களைத் தொட்டவுடனே நான் வாழ்க்கையில் அதிக புத்துணர்ச்சி கொண்டவனாக மாறினேன். என்னை இச்செயலில் இடைவிடாமல் தூண்டி ஸாயிபாபாவின் தரிசனத்திற்கு உதவி புரிந்தவர்களுக்கு கடமைப்பட்டதைக் கருதினேன். அவர்களை உண்மை உறவினர்களாக நினைக்கிறேன். அவர்களுடைய கடனை நான் திருப்பித் தரமுடியாது. அவர்களை நினைக்கிறேன், அவர்கள் முன் விழுந்து வணங்குகிறேன். ஸாயிபாபாவின் தரிசனத்திலுள்ள நூதனமானது நான் கண்டவாறு, நம்முடைய எண்ணங்கள் மாறுகின்றன. முன்னைக் கருமங்களின் வலிமை அழிக்கப்படுகின்றன. அல்லது பற்றற்ற நிலை அதிகரிக்கிறது. முன்னைப் பிறவிகளில் செய்த பல நற்கருமங்களால் அத்தகைய சுபதரிசனம் அடையப்படுகிறது. நீங்கள் ஸாயிபாபாவை கண்டுவிட்டீர்களானால் புறவுலகு எல்லாம் ஸாயிபாபாவாகத் தோற்றமளிக்கிறது.


சூடான விவாதம்

     குருவின் தேவையைப் பற்றி எனக்கும், பாலாஸாஹேப் பாடேக்கும் இடையில் ஓர் சூடான விவாதம் நான் சீர்டிக்கு வந்த தினத்தன்று நடைபெற்றது. “நம் சுதந்திரத்தை நாம் ஏன் இழக்க வேண்டும், மற்றவர்களிடம் ஏன் சரணாகதி அடைய வேண்டும்” என்று நான் விவாதித்தேன். ”நாம் நம்முடைய கடமையைச் செய்யவேண்டியிருக்கையில் ஏன் குரு தேவைப்படுகிறார்? ஒருவன் தன்னாலான முயற்சிகளைச் செய்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சோம்பேறியாகத் தூங்குவதைத் தவிர வேறெதையும் செய்யாத ஒருவனுக்கு குரு என்ன செய்துவிட முடியும்?” இங்ஙனம் நான் சுதந்திர எண்ணத்திற்கு வாதாடினேன். திரு.பாடே கருமத்து (அன்றி தலைவிதி)க்காக வாதாடிக் கூறியதாவது, ”நடப்பது நடந்தே தீரும். பெரியோர்கள் எல்லாம் தோல்வியுற்றிருக்கிறார்கள். மனிதன் ஒருவழியில் நினைக்க, தெய்வம் வேறுவழியில் செயல்படுகிறது. உம்முடைய புத்தி சாதுர்யத்தை தள்ளி விடுக. பெருமையும், அஹங்காரமும் உமக்கு உதவாது.” கொள்கைகள், மாறுபாடுகள் இவற்றுடன் இவ்விவாதம் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றும் வழக்கம் போல ஒரு முடிவும் காணப்படவில்லை. நாங்கள் களைப்படைந்துவிட்டதால் முடிவாக நான் மனஅமைதியை இழந்தேன். வலிவான “சரீர அபிமானம்”, அஹங்காரம் இவை இல்லாவிடில் விவாதமே இல்லையெனக் கண்டேன். அஹங்காரமே விவாதத்தை வளர்க்கிறது என்று கூறலாம்.
     பிறகு நாங்கள் மசூதிக்கு மற்றவர்களுடன் சென்றபோது காகாஸாஹேப் தீக்ஷித்தை, பாபா பின்வருமாறு வினவினார். ‘ஸாடே வாதாவில் என்ன நடந்து கொண்டிருந்தது? விவாதம் எதைப் பற்றியது? என்று கூறி என்னை உற்று நோக்கி மேலும் வினவியதாவது, ”ஹேமாட்பந்த் என்ன கூறுகிறார்?”, இவ்வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் தங்கியிருந்ததும் விவாதம் நடந்ததுமான சாதேவாடாவானது மசூதியினின்று நல்ல தூரத்திலிருக்கிறது. சர்வ வியாபியாயும், அகத்திருந்து ஆட்டிவைப்பவராகவும் இல்லாவிடில் எங்களது விவாதத்தை பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?

முக்கியமானதும் ஞானமிளிர்வதுமான பட்டம்

     ஸாயிபாபா என்னை ஏன் ’ஹேமாட்பந்த்’ என்னும் பெயரால் அழைக்கவேண்டும் என்று நான் எண்ணமிட ஆரம்பித்தேன். இச்சொல் ‘ஹேமத்திரியபந்த்’ என்ற வார்த்தையிலிருந்து திருத்தப்பட்டதாகும். இந்த ‘ஹேமத்திரியபந்த்’ யாதவ அரச வம்சத்தைச் சேர்ந்த ராமதேவ், மகாதேவ் என்ற தேவகிரி அரசர்களின் புகழ்பெற்ற மந்திரியாவார். கல்வி, கேள்வி நிரம்பப் பெற்று, நற்பண்புகள் நிறையப் பெற்ற அவர். ஆன்மீக விஷயங்கள் அடங்கிய சதுர்வர்க்க சிந்தாமணி மற்றும் ராஜ்யப்ரசஸ்தி போன்ற பல உயர்ந்த நூல்களின் ஆசிரியருமாவார். கணக்குப் பேரேடுகளில் புதிய முறைகளைக் கண்டுபிடித்துப் புகுத்தியவரும் மற்றும் மராத்தியச் சுருக்கெழுத்தின் கர்த்தாவுமாவார். ஆனால் நான் முற்றிலும் மாறுபட்டவன், அறிவற்ற, ஓட்டமற்ற நடுத்தர எண்ணத்தோன். எனவே அந்தப் பட்டம் எனக்கு எதற்காகச் சூட்டப்பட்டது என்பது விளங்கவில்லை. ஆனாலும் அதைக் குறித்து தீவிரமாகச் சிந்தித்து அது என் அகங்காரத்தை அழித்து பணிவாகவும், அடக்கமுடனும் இருக்கவேண்டும் என்பதற்காகவே அளிக்கப்பட்டது என நினைத்தேன். விவாதத்தில் எனக்குள்ள புத்தி சாதுர்யத்துக்காகவும் அது எனக்கு வழங்கப்பட்டதாகும்.
     
    எதிர்கால நிகழ்ச்சிகளை உற்றுநோக்கில் பாபாவினது சொற்கள் (திரு. தபோல்கரை ஹேமாட்பந்த் என அழைத்தது) முக்கியமானதும் தீர்க்க தரிசனம் நிறைந்ததும் ஆகும் ஏனெனில் மிகவும் புத்திசாலித்தனமாக ஸாயிஸமஸ்தானத்தின் நிர்வாகங்களை கவனித்து எல்லாக் கணக்குகளையும் நன்றாக வைத்திருந்தது, முக்கியமானதும் ஆத்மார்த்த விஷயங்களான ஞானம், பக்தி, அவாவின்மை, ’நான்’ தன்மையைச் சரணமிடுதல், தன்னையுணர்தல் போன்றவற்றைக் குறிக்கும் ’ஸாயி ஸத் சரித்திரம்’ என்ற அத்தகைய சிறப்பான நூலின் ஆசிரியராகவும் இருந்ததைக் காண்கிறோம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------

குருவின் தேவையைப்பற்றி

      ஹேமாட்பந்த், பாபா இவ்விஷயத்தைப் பற்றி என்ன சொன்னார் என்பன பற்றி எவ்விதக் குறிப்பும் விட்டுவைக்கவில்லை. ஆனால் காகாஸாஹேப் தீக்ஷித் இவ்விஷயத்தைப் பற்றித் தனது குறிப்புகளைப் பதிப்பித்துள்ளார். ஹேமாட்பந்தின் ஸாயிபாபா சந்திப்பின் அடுத்த நாளில் பாபாவிடம் காகாஸாஹேப் தீக்ஷித் சென்று தான் சீர்டியை விட்டுப் போக வேண்டுமா எனக் கேட்டார். பாபா “ஆம்” என்றார். பிறகு “எங்கே போவது” என யாரோ கேட்டார். பாபா ‘உயரே மேலே’ என்று கூறினார். அம்மனிதர் “வழி எப்படிப்பட்டது” என பாபாவிடம் வினவினார். பாபா கூறினார், அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன. இங்கு இருந்தும்(சீர்டியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது. பாதை கடினமானது. புலிகளும், ஓநாய்களும் வழியிலுள்ள காடுகளில் உள்ளன. நான்(காகாஸாஹேப் தீக்ஷித்) கேட்டேன் “ஒரு வழிகாட்டியை நாம் அழைத்துச் சென்றால் என்ன?” அதற்கு பாபா கூறினார் : அப்போது கடினம் இல்லை. புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார். வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம். அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது”. இந்நிகழ்ச்சியின் போது திரு.தபோல்கரும் (ஹேமாட்பந்த்) அறை அருகே இருந்தார். இதுவே குருவின் அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார். ஒரு மனிதன் சுதந்திரமானவனா, அல்லது கட்டுப்பட்டவனா என்னும் விவாதம் ஆன்ம விஷயங்களில் உபயோகமில்லை என்றும், இவ்வத்தியாயத்தின் மராத்தி மூலப் பதிப்பில் விளக்கப்பட்டபடி பெரிய அவதாரங்களான  ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் முதலியோர் வாழ்க்கையில் தமது குருக்களான வஸிஷ்டர், ஸாந்தீபனி முதலியோரிடமும் தன்னையறிவதற்காக சரணமடைந்தார்கள் என்றும் குருவினுடைய உபதேசத்தினாலேயே பரமார்த்திகம் அடையப்படுவது என்றும், நம்பிக்கையும், பொறுமையுமே அத்தகைய முன்னேற்றத்திற்குத் தேவையான நற்பண்புகளாம் என்பதுமே பாபாவின் திருக்குறிப்பாம்.


ஸ்ரீசாயியைப் பணிக, அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்

---







No comments :

Post a Comment