Monday, 26 August 2019

சர்வம் கிருஷ்ணார்பணம்

No comments




அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.

அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி.

''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!'' என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.

சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலையுயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினான்.

முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார். இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது.
அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.

அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்து விடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.

செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.

யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.

இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார்.
அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல்.

சந்தோஷ மிகுதியால் 'சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார். அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன்
திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.

அர்ஜுனன் கண்ணனிடம், ''வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான்.

கண்ணன் சிரித்துக்கொண்டே… ''இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல், மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம்
தங்கவில்லை. இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார். பொது நலமுள்ளவர்களுக்கே லட்சுமி கடாட்சம் கிடைக்கும்,'' என்றார்.

சர்வம் கிருஷ்ணார்பனம்!!!!

Sunday, 18 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 3

No comments
மற்ற ஞானிகளுடன் தொடர்பு


ஸாயிபாபா மசூதியில் தங்கத் துவங்கினார். தேவிதாஸ் எனற ஓரு ஞானி பாபா வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சீர்டியில் தங்கியிருந்தார். பாபா அவர்தம் நட்பை விரும்பினார் அவருடன் மாருதி கோயிலிலும், சாவடியிலும் தங்கியிருந்தார். சில சமயங்களில் தனியாகவும் இருந்தார். பிறகு ஜான்கிதாஸ் என்று மற்றொரு ஞானியும் வந்தார். பாபா அவருடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தார் அன்றி ஜான்கிதாஸ் பாபா தங்கியிருந்த இடத்திற்குச் செல்வார் அங்ஙனமே புண்தாம்பேயினின்று இல்லறத்திலிருந்து வைசிய ஞானியான கங்காகீர் எப்போதும் சீர்டிக்கு வந்தார். ஸாயிபாபா தம் இரு கைளாலும் தண்ணீர் குடத்தைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக எடுத்துச் சென்ற போது முதன்முதலாக அவரைக் கண்ட கங்காகீர் ஆச்சரியப் பட்டு வியந்து கூறியதாவது “சிர்டி ஆசிர்வதிக்கப்பட்டது. அது மதிக்க முடியாத வைரத்தைப் பெற்றிருக்கிறது. இம்மனிதர் இன்று தண்ணீர் சுமந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் சாதாரண மனிதர் அல்ல. இந்நிலம் (சீர்டி) அதிர்ஷ்டமும் புண்ணியமும் உடைத்ததாலின் ௮ஃது ஓர் வைரத்தைப்  பெற்றது” யேவலா மடத்தைச் சேர்ந்த ஆனந்த்நாத் என்பவர் புகழ்பெற்ற ஞானியும், அக்கல்கோட் மஹாராஜின் சீடரும் ஆவார். அவர் சீர்டி மக்கள் சிலருடன் சீர்டிக்கு வந்திருந்தார். அவர் ஸாயிபாபாவைத் தம்முன் கண்டபோது வெளிப்படையாகப் பின்வருமாறு கூறினார். "இது உண்மையில் விலைமதிக்க முடியாத இரத்தினமாகும். அவர் ஒரு சாதாரண மனிதர் போன்று தோன்றினாலும். அவர் ஒருசாதாரணக் கல் அல்ல. ஒரு வைரக்கல், கூடிய விரைவில் நீங்கள் இதை உணர்வீர்கள்". இதைக்கூறிய பின்னர் அவர் யேவலாவுக்குத் திரும்பிவிட்டார்.  இது ஸாயிபாபா இனளஞனாய் இருக்கும் போது சொல்லப்பட்டது.


ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.



                                                            (தொடரும்...)






Friday, 16 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 2

No comments
ஸாயி என்னும் பெயரை பக்கிரி எப்படி அடைந்தார்?




கல்யாணக் கும்பல் சீர்டியை அடைந்ததும் கண்டோபா கோயிலுக்கு அருகிலுள்ள ஓர் ஆலமரத்தடியில் வந்து தங்கினர். கண்டோபா கோயிலின் பரந்த வெளியில் வண்டிகள் அவிழ்ந்து விடப்பட்டன. கோஷ்டியில் உள்ளவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக இறங்கின .பக்கிரியும் கீழே இறங்கினார்.இளம் பக்கிரி இறங்கிக் கொண்டிருப்பதை பகத் மஹால்ஸ்பதி கண்ணுற்றார். உடனே “யா ஸாயி” (ஸாயி வர வேண்டும்) என்று அழைத்தார்கள். அதிலிருந்து அவர் “ஸாயிபாபா” என்னும் பெயரால் அறியப்பட்டார்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.



                                                            (தொடரும்...)


Monday, 12 August 2019

குருவின் வேலை என்ன ?

No comments




#குரு என்பவா் உங்கள் அருகிலேயே இருந்து இறுதி காலம் வரை உங்களை வழி நடத்துபவா் அல்ல .

நீங்களும் ஒரு குரு தான் என்று உங்களை உணர வைப்பவரே குரு

#குருவின் சக்திகளை காண்பித்து உங்களை பிரம்பிக்க வைப்பவா் குரு அல்ல

உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை உங்கள் மூலமாகவே வெளிக்கொணர வைப்பவா் .

#உங்கள் கா்ம வினைகளை எல்லாம் ஏற்று கொள்பவா் குரு அல்ல

கா்ம வினைகளின் நன்மை தீமைகளை நீங்களே அறிந்து உணர வைத்து கடைத்தேற வழிகாட்டுபவா் .

#உங்களிடம் பணம் பொருள் கேட்பவா் அல்ல குரு .

தன் ஞானத்தை உங்களிடம் வழங்கி உங்களையும் ஞானவானாக மாற்றுபவரே குரு .

#தன்னை வழிபடு என்று கூறுபவா் குரு அல்ல

உன்னுள் இருக்கும் இறை ஆற்றலை உன் மூலமாகவே வெளிப்படுத்தி உன்னை இறைவனாகவே மாற்றுபவரே குரு .

மொத்தத்தில் பக்குவமில்லாத உன்னை பக்குவ படுத்தி இறை ஆற்றலை சுவைக்க செய்து உன்னையும் இறை நிலைக்கு உயா்த்தி உன் மூலமாக பலரை பக்குவநிலைக்கு கொண்டு வருவதே குருவின் செயல் .

உண்மையான குரு என்பவாிடம் பணம் பொருள் ஆடம்பரம் எதுவுமே இருக்காது

Monday, 5 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 1

No comments

சாந்த்பாடீல் பாபா சந்திப்பு




சென்ற அத்தியாயத்தில்  குறிப்பிட்டபடி நான் இப்போது முதலில் ஸாயிபாபா காணாமற்போன பிறகு சீர்டிக்கு எங்ஙனம் திரும்பி வந்தார் என்பதை விவரிக்கிறேன்

நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஓளரங்கபாத் ஜில்லாவிலுள்ள தூப் என்கிற கிராமத்தில் சாந்த்பாடீல் என்ற வசதியுள்ள முகமதியப் பெருந்தகை ஒருவர் இருந்தார். அவர் ஓளரங்காபாத்துக்குப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு பெண் குதிரையைத் தொலைத்து விட்டார். இரண்டு மாதங்கள் பிரயாசையுடன் தேடினார். ஆனாலும் காணாமல் போன அக்குதிரையைப் பற்றிக் கொஞ்சமும் தகவல் பெற இயலவில்லை. ஏமாற்றத்துடன்  குதிரைச் சேணத்தை தன் தோளில் போட்டுக் கொண்டு ஓளரங்கபாத்திலிருந்து திருப்பிக் கொண்டிருந்தார். நாலரைக் காத தூரம் பிரயாணம் செய்த பின்னர் ஒரு மாமரத்தினடியில் வந்தார். அதன் அடியில் ஒரு ரத்ன (விசித்ர மனிதர்) உட்கார்ந்து இருந்தார். அவரது தலையில் ஒரு குல்லாய் இருந்தது. கஃப்னி என்னும் நீண்ட ஆடை தரித்திருந்தார். கமக்கட்டில் ஸட்கா என்னும் குட்டையான பருமனான ஒரு தடி வைத்திருந்தார்.

ஹூக்கா குடிப்பதற்குத் தயார் செய்து கொண்டிருந்தார். சாந்த்பாடீல் அவ்வழியே போவதைக் கண்டு அவரது தன்னிடத்திற்குக் கூப்பிட்டுப் புகை பிடிக்கவும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளவும் சொன்னார். அவ்விசித்ர மனிதர் அல்லது பக்கிரி குதிரைச் சேணத்தைப் பற்றி வினவினார். சாந்த்பாடீல் தனது தொலைந்து போன குதிரையில் மீதிருந்த சேணம் அது என்று கூறினார். அதற்கு அவர் அவரிடம் அருகாமையிலுள்ள சோலையொன்றில்  தேடும் படி கேட்டுக்கொண்டார். அவர் அங்கே சென்றார்.ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! அவர் தன்னுடைய குதிரையைக் கண்டுபிடித்துவிட்டார். அந்த பக்கிரி ஓர் சாதாரண மனிதரல்ல. ஆனால் ஓர் அவலியா (பெரும் ஞானி) என்று எண்ணினார். குதிரையுடன் பக்கிரியிடம் திரும்பி வந்தார். ஹூக்கா குடிப்பதற்குத் தயாராகியது. ஆனாலும் இரண்டு பொருட்கள்  தேவைப்பட்டன.(1)குழாயைப் பற்ற வைப்பதற்கு நெருப்பு,(2)சாபி (புகை இழுக்கப்படும் ஒரு துண்டுத் துணி)யை நனைப்பதற்கு வேண்டிய தண்ணீர். பக்கிரி தனது கத்தியை எடுத்து அதை வலிய நிலத்தில் நுழைத்தார். அதிலிருந்து எரியும் ஒரு நிலக்கரி நெருப்புத்  துண்டம்  வந்தது. அதை அவர் குழாய் வழி இட்டார். பிறகு தமது ஸட்காவைத் தரையில் அடித்தார்.  அவ்விடத்திலிருந்து நீர் கசியத் தொடங்கியது. சாபி நனைக்கப்பட்டது.

பிறகு பிழியப்பட்டுக் குழாயில் சுற்றப்பட்டது. இங்ஙனம் எல்லாம் முடிந்த பின்னர் பக்கிரி ஹூக்கா குடித்து விட்டு சாந்த் பாடீலுக்கும் புகை குடிக்கக் கொடுத்தார். இவற்றையெல்லாம் கண்ணுற்ற சாந்த்பாடீல்  வியப்புற்றார். பின்பு அவர் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து தனது விருந்தோம்பலை எற்றுக் கொள்ளும் படிச்சொன்னார். மறுநாள் அவர் பாடீல் வீட்டிற்குச் சென்று சிலநாள் தங்கியிருந்தார். பாடீல், தூப் கிராமத்தின் அதிகாரி. அவருடைய மனைவியின் சகோதரரது புதல்வன் கல்யாணம் செய்யப்படவிருந்தன. சீரடியிலிருந்து மணப்பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். எனவே சீரடிக்குப் புறப்படுவதற்கு பாடீல் ஆயத்தங்கள் செய்யத் துவங்கினார். பக்கிரியும் கல்யாண கோஷ்டியுடன்கூட வந்தார். கல்யாணமும் எவ்விதச் சிரமமும் இன்றி முடிவடைந்து. கோஷ்டியும் தூப்பிற்கு திரும்பியது, ஆனால் பக்கிரி மாத்திரம் சீர்டியிலேயே இருந்தார். பின்னர் அங்கேயே எப்போதும் இருந்தார்.

ஸ்ரீஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.


(தொடரும்...)



Friday, 2 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 4 - பகுதி 7

No comments

மூன்று  வாடாக்கள்


வேப்பமரம் இருக்குமிடமும், அதைச் சுற்றியுள்ள இடமும் திரு.ஹரிவிநாயக் ஸாடே அவர்களால் வாங்கப்பட்டு “ஸாடே”யின் வாடா என்ற பெயரில் ஒரு பெரும் கட்டிடமும் எழுப்பப்பட்டது. அங்கு திரண்ட புனித யாத்ரீகர்களுக்கு அது ஒன்றே தங்கும் இடமாய் இருந்தது. ஒரு “பார்” (மேடை) வேப்பமரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டது. தங்கும் இடமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டது. படிக்கட்டுகளின்  அடியில் ஒரு இருப்பிடம் இருக்கிறது. பக்தர்கள் அம்மேடையில் வடக்கு நோக்கி அமர்கிறார்கள். வியாழன் ,வெள்ளிக் கிழமை மாலை நேரங்களில் அங்கு வாசனைப் பொருள்களை எரிப்பவர்கள் கடவுள் கிருபையால் மகிழ்ச்சியுடன் இருப்பர். இந்த வாடா பழமையானது. உதிர்ந்து கொட்டும் தன்மை உடையதாகவும், பழுது பார்க்க வேண்டியதாகவும் இருந்தது. தற்போது தேவையுள்ள பழுது பார்க்க வேண்டியவைகள், சேர்க்க வேண்டியவைகள், மாறுபாடுகள் எல்லாம் ஸமஸ்தானத்தால் செய்யப்பட்டன (2) சில ஆண்டுகளுக்குப் பின் தீக்ஷித் என்ற பம்பாய் வக்கீல் இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கு நேரிட்ட ஒரு விபத்தில் தனது காலை முறித்துக் கொண்டார். இக்காயம் எந்த விதத்திலும் குணப்படும் வழியைக்  காணவில்லை .நானாஸாஹேப் சாந்தோர்கர், ஸாயிபாபாவிடம் முயற்சிக்கும்படி அறிவுறுத்தினார். எனவே அவர் 1909-இல் ஸாயிபாபாவைக் கண்டு தனது கால் ஊனத்தைவிட, தனது மன ஊனத்தை குணம் ஆக்கும்படி வேண்டிக் கொண்டார் ஸாயிபாபாவின் தரிசனத்தால் மகிழ்ச்சியுற்று சீர்டியிலேயே தங்கி விட முடிவு செய்தார். எனவே தனக்காகவும், அடியவர்களுக்காகவும் ஒரு வாடாவை எழுப்பினார். 10-12-1910 இல் அக்கட்டிடத்திற்கு அஸ்திவாரம் இடப்பட்டது. இந்த நாளில் மற்ற இரு முக்கிய சம்பவங்கள்  நிகழ்ந்தன.(1) திரு.தாதா ஸாஹேப் காபர்டே தனது வீடு திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டார்.(2) சாவடியில் இரவு ஆரத்தி தொடங்கியது. இந்த வாடா கட்டி முடிக்கப்பட்டு 1911-இல் ஸ்ரீ ராமநவமி தினத்தில் உரிய மரியாதைகளுடனும் ,சம்பிரதாயங்களுடனும் பிரவேசம் செய்யப்பட்டது.(3)நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற லட்சாதிபதியான திரு.புட்டி அவர்களால் மற்றொரு வாடா அல்லது அரண்மனை மாளிகையும் எழுப்பப்பட்டது. ஏராளமாக பணம் இக்கட்டிடத் திற்கு செலவிடப்பட்டது .ஏனெனில், ஸாயிபாபாவின் உடல் இவ்விடத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இது தற்போது சமாதி கோயில் (சமாதி மந்திர்) என வழங்கப்படுகிறது. இவ்விடத்தில் முன்னர் பாபா தண்ணீர் விட்டு கவனித்து வந்த ஓர் தோட்டம் இருந்தது. முன்னர் ஒன்றுமே இல்லாத இடத்தில் மூன்று வாதாக்கள் எழுப்பின. இவை எல்லாவற்றிலும் ஆரம்ப காலத்தில் அனைவருக்கும் ஸாடேவின் வாடாவே நிரம்பப் பயன்பட்டது. வாமன் தாத்யாவின் உதவியுடன் ஸாயிபாபா கவனித்த தோட்டத்தின் கதை, ஸாயிபாபா சீர்டியில் தற்காலிகமாக இல்லாதிருந்து, சாந்த்பாடீலின் கல்யாண ஊர்வலத்துடன் மீண்டும் வருகை ,தேவீதாஸ் ,ஜானகிதாஸ், கங்காகீர் இவர்களின் பழக்கம், மொஹித்தின் தாம்போலியுடன் பாபாவின் மல்யுத்தப் போட்டி, மசூதியில் இருப்பிடம், திரு.டேங்க்லே மற்ற அடியவர்களின் அன்பு மற்ற விஷயங்களும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்

ஸ்ரீஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்...)

Thursday, 1 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 4 - பகுதி 6

No comments

ஸாயிபாபாவின் அயோனி ஜன்மமும் அவரின் முதல் சீர்டி விஜயமும்



ஸாயிபாபாவின் பெற்றோர், பிறந்த இடம் இவற்றைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது. பல விசாரணைகள் செய்யப்பட்டன. பாபாவிடமும் மற்றவர்களிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் திருப்தியான பதிலோ செய்திகளோ இதுவரை  கிடைக்கவில்லை. வழக்கத்தில் இவைகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. சாதாரண மனிதர்களையொப்ப நாமதேவர், கபீர் முதலியோர் பிறக்கவில்லை. அவர்கள் சிசுக்களாக ,முத்துக்களின் தாயினிடத்தில் (ஆற்றில்) காணப்பட்டார்கள். நாமதேவ் கோணாயியால் பீமரதி ஆற்றிலும் கபீர், தமால் என்பவரால்  பாகீரதி ஆற்றிலும் கண்டெடுக்கப்பட்டார்கள். ஸாயிபாபாவின் விஷயமும் அதையொத்ததாகும். பக்தர்களுக்காக ஒரு வேப்ப மரத்தடியில் 16 வயது இளைஞனாகத் தாமே முதலில் தோன்றினார். அப்போதே பிரம்ம ஞானத்தால் நிரம்பியவராகக் காணப்பட்டார். கனவிலும் இவ்வுலகப் பொருள்களின் ஆசை அவருக்கு இல்லை. மாயையை அவர் உதைத்து தள்ளினார். முக்தி அவர் தம் காலடியில் பணி செய்தது. சீரடியைச் சேர்ந்தவரும் நாநாசோப்தாரின் தாயாருமாகிய ஒரு பாட்டி அவரைக் கீழ்கண்டவிதமாக வர்ணிக்கிறார். அழகும், சுறுசுறுப்பும், மிகுந்த சுந்தரமும் உடைய இவ்விளைஞன் முதலில் வேப்ப மரத்தின் அடியில் ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு காணப்பட்டார். அக்கிராமத்து மக்கள், இத்தகைய இளம் வயது உடையபவன் வெப்பத்தையோ குளிரையோ பொருட்படுத்தாது அத்தகைய கடினப் பயிற்சி பழகுவதைக் கண்ணுற்ற ஆச்சரியத்தால் தாக்கப்பட்டனர். பகலில் ஒருவருடனும் பழகுவதில்லை .இரவில் ஒருவருக்கும் அஞ்சுவதில்லை. இவ்விளைஞன் எங்கிருந்து வந்தான் என்று மக்கள் ஆச்சர்யப்பட்டுக் கேட்டுக் கொண்டனர். ஒரு சாதாரண கவனிப்பே, அவன்மீது எல்லோரும் அன்பு கொள்ளும் அளவிற்கு அவனுடைய உருவாம்சங்களெல்லாம் அத்தகைய சுந்தரம் பொருந்தியதாக இருந்தது. அவன் ஒருவர் வீட்டிற்கும் செல்வதில்லை. எப்போதும் வேப்பமரத்தடியிலேயே  உட்கார்ந்திருந்தான். வெளிதோற்றத்திற்கு இளைஞனாகக் காணப்பட்டான். ஆயினும் அவன் செய்கைகள் அவன் உண்மையிலேயே ஒரு “பரமாத்மா” என்பதை வெளியிட்டன. .அவன் வேண்டுதல் வேண்டாமை – யின்மையின் பருப் பொருளாகவும் அனைவருக்கும் ஓர் மர்மமாகவும் இருந்தான் .ஒருநாள் கண்டோபா கடவுள் ஒரு அடியவனிடம் ’சாமி’ பிடித்தது. ஜனங்கள் அவரை, ‘தெய்வமே இவ்விளைஞனின் தந்தை யார்?அவன் எப்போது வந்தான் என்பதை நீர் தயவு செய்து விசாரியும் எனக் கேட்கத் துவங்கினர். கண்டோபா அவர்களை ஒரு மண் வெட்டி கொணரச் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தை தோண்டச் சொன்னார். அங்ஙனமே தோண்டப்பட்ட போது செங்கற்கள் காணப்பட்டன. அதற்கடியில் சமதளகல் ஒன்றும் இருந்தது. இந்தக்கல் அப்புறப்படுத்தப்பட்டதும்  ஒரு நிலைக் கதவு தெரிந்தது. அதில்  நான்கு சமயி(விளக்குகள்) எரிந்து கொண்டிருந்தன. அது ஒரு நிலவறைக்கு அழைத்துச் சென்றன. அதில் பசுமுக உருவத்தில் ஜபம் செய்யும் பைகள், மரப்பலகைகள், ஜபமாலைகள் முதலியவை காணப்பட்டன . கண்டோபா கடவுள் கூறியதாவது, “இவ்விளைஞன் இங்கு 12 ஆண்டுகளாகப் பயிற்சி செய்தான்”, பிறகு ஜனங்கள் அவ்விளைஞனிடம் இதைப்பற்றி கேட்கத் துவங்கினர். அவன் அவர்களை திசைதிருப்பி ,அது தன்னுடைய குருவின் இடம் என்றும் அவருடைய புனிதமான ”வதன்“ என்றும் அதை நன்றாகப் பாதுகாக்கும் படியும் வேண்டிக் கொண்டான். ஜனங்கள் அப்போது கதவை முன்பிருந்தபடியே  மூடவிட்டனர். அரச மரமும், அத்தி மரமும் புனிதமாய் இருப்பது போல் பாபா வேப்ப மரத்தையும் அதே அளவில் புனிதமாகக் கருதி, அதையே பெரிதும் விரும்பினார். மஹால்ஸாபதியும் மற்ற அடியவர்களும் இவ்விடத்தை பாபாவின் குருநாதனர் சமாதியடைந்த இடமாகக் கருதி ஸாஷ்டாங்க சரணம் செய்தனர்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.


(தொடரும்...)