Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 7 - பகுதி 4

No comments

பாபாவின் எங்கும் நிறை தன்மையும் கருணையும்

எங்கும் நிறைந்திருக்கும் மிகவும் கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக்காண்பிக்கும்   அத்தகைய ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறேன்.  

1910ஆம் ஆண்டில் தீபாவளி விடுமுறையின்போது, பாபா துனிக்கருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.  பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த துனியில் விறகை நுழைத்தார்.  சிறிது நேரத்திற்குப்பின் விறகுகளை நுழைப்பதற்குப் பதில், பாபா தமது கரத்தையே துனி உள்ளே நுழைத்துவிட்டார்.  கரம் உடனே கருகி வெந்துவிட்டது.  இது வேலையாட்கள் மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் உடனே கவனிக்கப்பட்டது.  உடனே அவர்கள் பாபாவிடம் ஓடினார்கள்.  மாதவ்ராவ் தனது கைகளை பாபாவின் இடுப்பில் கொடுத்துச் சேர்த்து, வலிந்து பின்னால் இழுத்து, "தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர்" என்று கேட்டார்.  பின்னர் பாபா தம் உணர்வுவந்து பதில் அளித்தார்.  "தொலை தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில், ஒரு கொல்லனின் மனைவி   உலைக்களத்தில் இருந்த துருத்தியில் வேலை செய்துகொண்டிருந்தாள்.  அப்போது அவளது கணவன், அவளைக் கூப்பிட்டான்.  அவள் தனது இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவசரமாக ஓடினாள்.  அதனால் ஊதுஉலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்துவிட்டது.  நான் உடனே உலைக்களத்தில் கையைவிட்டு குழந்தையைக் காப்பாற்றினேன்.  எனது கரங்கள் வெந்துபோனதைப் பற்றி, நான் பொருட்படுத்தவில்லை.  குழந்தையின் உயிர் காக்கப்பட்டதை எண்ணி நான் மகிழ்வடைகிறேன்."

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment