பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்?
ஒருமுறை திருமதி தர்கட் ஷீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார். மதியஉணவு தயாராகி பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்குவந்து குரைக்கத் தொடங்கியது. திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்துண்டை விட்டெறியவும், அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது. பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது சாயிபாபா அவளிடம், "அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவுபெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில் வைக்கும். இம்மசூதியில் அமர்ந்துகொண்டு பொய் பேசவே மாட்டேன். என்னிடம் இவ்விதமாக இரக்கங்கொள்வாய்.
முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்து, பின் நீ உண்பாயாக. இதை நன்றாகக் கவனித்துக்கொள்", என்று கூறினார். முதலில் அவளால் அதன் பொருளை உணர இயலவில்லை. எனவே அவள், "எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்? நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்", எனக் கூறினாள். இதற்கு பாபா, "அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன். நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு வேலைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும். நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன். எனவே த்வைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப்போல் எனக்குச் சேவை செய்", என்று கூறினார். இவ்வமிர்தத்தினை நிகர் மொழிகளைக் கேட்டு அவள் உருகி, அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது.
நீதி
'கடவுளை எல்லாப் படைப்புயிர்களிலும் காண்பாயாக' என்பதே இவ்வத்தியாயத்தின் நீதியாகும். உபநிஷதங்கள், பகவத்கீதை, பாகவதம் இவைகளெல்லாம் ஜீவராசிகள் அனைத்திலும் கடவுள் அல்லது தெய்வீகத்தைக் காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன. இவ்வத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்ட நிகழ்சியாலும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும், உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்று சாயிபாபா விளக்கிக் காட்டியிருக்கிறார். இவ்வாறாக சாயிபாபா உபநிஷத்தின் விரிவுரையாளராக அல்லது குருவாக இருந்தருளினார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment