Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 3

No comments

ஐரோப்பிய பெருந்தகை

ஷீர்டிக்கு ஒருமுறை ஒரு ஐரோப்பியப் பெருந்தகை, ஏதோ ஒரு குறிக்கோளுடன், நானா சாஹேபின் அறிமுகக் குறிப்புடன் வந்தார்.  ஒரு கூடாரத்தில் சௌகரியமாகத் தங்கவைக்கப்பட்டார்.  அவர் பாபாவின் முன் மண்டியிட்டு பாபாவின் கையை முத்தமிட விரும்பினார்.  எனவே அவர் மூன்றுமுறை மசூதிக்குள் நுழைய முயன்றார்.  ஆனால் அவர் அப்படிச் செய்வதை பாபா தடுத்துவிட்டார்.  கீழேயுள்ள திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து, பாபாவின் தரிசனத்தைச் செய்யும்படி கேட்கப்பட்டார்.  தமக்கு அழிக்கப்பட்ட வரவேற்பைக்கண்டு மகிழாத ஐரோப்பியர், ஷீர்டியைவிட்டு உடனே புறப்படவிரும்பி விடைபெறுவதற்காக வந்தார்.  பாபா அவரை அடுத்தநாள் போகும்படியும், அவசரப்பட வேண்டாம் என்றும் கூறினார்.  மக்களும் அவரை பாபாவின் அறிவுரையின்படியே செய்ய வேண்டிக்கொண்டனர்.

இவற்றையெல்லாம் செவிமடுக்காது, அவர் ஒரு குதிரை வண்டியில் ஷீர்டியைவிட்டுப் புறப்பட்டார்.  முதலில் குதிரைகள் ஒழுங்காக ஓடின.  ஆனால்  ஸாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியதும், எதிரில் ஒரு சைக்கிள் வந்தது.  இதைக்கண்டு குதிரைகள் மிரண்டு வேகமாக ஓடின.  குதிரைவண்டி தலைகீழாகக் கவிழ்ந்து, அந்தப் பெருந்தகை கீழே விழுந்து சிறிது தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டார்.  உடனேயே அவர் காப்பாற்றப்பட்டார் என்றாலும், தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்காக கோபர்காவன் மருத்துவமனைக்குச் சென்று படுக்க வேண்டியதாயிற்று.  இத்தகைய அனுபவங்கள் கணக்கில் அடங்கா.  பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் ஏதோ ஒரு விதத்தில் விபத்துக்குள்ளானார்கள் என்றும் அவைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களோ பத்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர் என்றும் எல்லா மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment