மூவரின் படுக்கையிடம்
எவர்களின் உள்ளத்தில் வாசுதேவர் உறைகிறாரோ, அந்த ஞானிகள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அத்தகைய ஞானிகளின் கூட்டுறவைப் பெறும் அதிஷ்டமுடைய பக்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தாத்யா கோதே பாடீல், பகத் மஹல்ஸாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயிபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார். இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினர். தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களைப்பற்றி அரட்டையடித்துக்கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் நள்ளிரவு நெடுநேரம்வரை படுத்திருப்பர்.
அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பிவிடவேண்டும். உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மஹல்ஸாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார். இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் தனது வீட்டிலுள்ள பெற்றோரை விட்டுவிட்டுத் தாத்யா மசூதியில் தூங்கினார். எத்துணை மகிழ்ச்சியும், மறக்க இயலாததுமான அத்தகைய நாட்கள்! அவ்வன்பை எவ்வாறு அளப்பது?! பாபாவின் ஆசியை எங்ஙனம் மதிப்பிடுவது?! தனது தந்தை காலமானதும் தாத்யா குடும்பப் பொறுப்பை ஏற்றார். பின்பு தமது வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment