Sunday, 26 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 7 - பகுதி 6

No comments

குழந்தை கபர்டேயின் பிளேக் வியாதி

பாபாவின் மற்றொரு வியத்தகு லீலையை இப்போது கூறுகிறேன்.  அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி ஷீர்டியில் தன் இளம் புதல்வனுடன் சிலநாட்கள் தங்கியிருந்தாள்.  அப்போது அவளது புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது.  தாயார் பயந்துபோய் மிகவும் மனவேதனையடைந்தாள்.  பின்பு அமராவதிக்குச் செல்ல நினைத்து, பாபா வழக்கமாக மாலையில் சுற்றுவரும்போது, வாதாவுக்கு (சமாதி மந்திர்) அருகில் வந்துகொண்டிருக்கையில் அவரது அனுமதியைப் பெறுவதற்காகப் பக்கத்தில் சென்று நடுங்கும் குரலில் தனது இளம் புத்திரன் பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தாள்.  பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது, அவைகள் உருகி ஓடிவிடும்.  எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார்.  இவ்வாறு கூறிக்கொண்டே தமது கஃப்னி உடையை இடுப்புவரை தூக்கி அங்கு பிரசன்னமாயிருந்த அனைவருக்கும் நன்றாகப் பெரிதாக முட்டை அளவிற்குத் தோன்றியிருந்த பிளேக் கட்டிகளைக் காண்பித்து, "பாருங்கள், எனது அடியவர்களுக்காக நான் எங்கனம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.  அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார்.  

இந்தச் சிறப்பான அசாதாரணச் செயலை (லீலை) மக்கள் கண்ணுற்று, ஞானிகள் தங்கள் அடியவர்களின் துன்பங்களைத் தாங்குகிறார்கள் என்று உறுதியடைந்தனர்.  ஞானிகளின் உள்ளமோ மெளுகைவிட மிருதுவானது.  உள்ளும், புறமும் அது வெண்ணெயைப் போன்று மிருதுவாக இருக்கிறது.  எவ்வித இலாபம் பெரும் நோக்கமின்றியே அவர்கள் தங்கள் அடியவர்களை நேசிக்கிறார்கள். அவர்களை உண்மை உறவினராயும் எண்ணுகின்றனர்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)

No comments :

Post a Comment