கேப்டன் ஹாடே:-
பிகானீரில் தங்கியிருந்த கேப்டன் ஹாடே என்பவர் பாபாவின் மிகப்பெரும் பக்தர். ஒருமுறை அவரது கனவில் பாபா தோன்றி "என்னை மறந்துவிட்டாயா?" என்று கேட்டார். ஹாடே உடனே பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, "தனது தாயைக் குழந்தை மறந்துவிட்டால் அது எங்ஙனம் காப்பாற்றப்படும்?" என்றார்.
பின்னர் ஹாடே தோட்டத்துக்குச் சென்று அவரைக்காய் பறித்து ஒரு விருந்துக்கும், தஷிணைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, இவைகளை எல்லாம் பாபாவுக்குச் சமர்ப்பிக்க இருந்தபோது விழித்துக்கொண்டார். சிலநாட்களுக்குப்பின் அவர் குவாலியர் வந்தவுடன் ஒரு நண்பருக்கு ரூ.12ஐ மணியார்டர் மூலம் அனுப்பி ரூ.2ஐ ஷிதா (மளிகை) பொருட்களுக்கும், காய்கறிகளுக்கும் ரூ.10ஐ பாபாவுக்குத் தஷிணையாக அளிக்கும் குறிப்பையும் அனுப்பியிருந்தார். அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று குறிப்பிடப்பட்ட சாமாங்களையெல்லாம் வாங்கினார். ஆனால் காய்கறிகள் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் தலையில் சுமந்துகொண்டு ஒரு கூடைக்காரி வீதியில் எதிப்பட்டாள். வியப்பிற்கேற்ப அந்தக் கூடையில் வேண்டிய அவரைக்காய் கிடைத்தது. அது வாங்கப்பட்டு மற்றெல்லாப் பொருட்களுடன் சேர்த்து கேப்டன் ஹாடேயின் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
நிமோண்கர் அடுத்த நாள் நைவேத்யம் (சோறும், காய்கறியும்) தயார் செய்து பாபாவுக்கு, கேப்டன் ஹாடேயின் சார்பில் சமர்ப்பித்தார். சாப்பிடும்போது அவரைக்காயையே பாபா முதலில் எடுத்துச் சாப்பிட்டதையும், சாதம் முதலியவற்றைத் தொடாதது கண்டும் அனைவரும் அதிசயப்பட்டனர். இதைத் தன் நண்பன் மூலமாகக் கேட்டறிந்த ஹடேயின் மகிழ்ச்சி கரைகாணாது போயிற்று.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment