பம்பாயைச் சேர்ந்த பாலாபுவா சுதார் என்னும் அருட்தொண்டர், அவர்தம் கடவுள்பற்று, பக்தி மற்றும் பஜனை முதலியவற்றால் நவீன துகாராம் என்று அழைக்கப்பட்டார். அவர் முதல்முறையாக 1917ல் ஷீர்டிக்கு வந்தார். பாபாவின் முன்னால் நமஸ்கரித்தபோது பாபா, "இம்மனிதரை நான் நான்கு ஆண்டுகளாக அறிவேன்" என்றார். பாலாபுவா ஆச்சரியப்பட்டு, இதுவே தமது முதல் ஷீர்டி விஜயமாதலால், அஃதெங்கனம் இருக்கமுடியும் என்று எண்ணினார்.
ஆனால் அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபோது நான்காண்டுகளுக்கு முன்னர் பம்பாயில் பாபாவின் படத்தின் முன்னர் வீழ்ந்து நமஸ்கரித்தது நினைவிற்கு வந்தது. தனக்குள் அவர், ஞானிகள் எத்தகைய நிறைபேரறிவு உடையவர்களாகவும், சர்வவியாபிகளாகவும் இருக்கிறார்கள். தமது அடியவர்களிடம் அவர்கள் எத்தகைய அன்புடன் விளங்குகின்றனர். அவர்தம் புகைப்படத்தின் முன்னர் நான் பணிந்தேன். இவ்வுண்மை பாபாவால் கவனிக்கப்பட்டது. உரிய தருணத்தில் தமது படத்தைக் காண்பது நேரில் தம்மைக் காண்பதற்குச் சமமாகும் என்பதை அவர் உணரும்படி செய்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment