சந்நியாசி விஜயானந்த்:-
சென்னையைச் சேர்ந்த விஜயானந்த் என்ற ஞானி மானஸரோவருக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். வழியில் பாபாவின் புகழைக் கேள்வியுற்று ஷீர்டியில் தங்கினார். அங்கு ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமியைச் சந்தித்தார். மானஸரோவர் பயணத்தைப்பற்றி அவரிடம் விசாரித்தார். கங்கோத்ரிக்கு மேல் மானஸரோவர் 500மைல் உயரத்திலுள்ளது என்றும் ஏராளமான பனி, 50 காத தூரத்திற்கு ஒருமுறை மொழிமாற்றம், வழியில் யாத்ரீகர்களுக்கு ஏராளமாக தொல்லை கொடுக்கும் பூட்டான் மக்களின் சந்தேக குணங்கள் போன்ற யாத்திரையிலுள்ள கஷ்டங்களை விவரித்தார்.
இதைச் செவிமடுத்த துறவி மனந்தளர்வுற்றார். தமது விஜயத்தை இரத்துச் செய்தார். அவர் பாபாவிடம் சென்று சாஷ்டாங்கமாகப் பணிந்தபோது பாபா கோபாவேஷம் அடைந்து கூறினார், "அந்த உபயோகமற்ற துறவியைத் துரத்துங்கள், அவரின் நட்பு பயனற்றது".
பாபாவின் குணத்தை அத்துறவி அறியார். ஆயினும் அங்கு அமர்ந்து அங்கே நடந்துகொண்டிருந்த நிகழ்சிகளை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார். அது காலைநேர தர்பார். மசூதியில் கூட்டம் அதிகமாய் இருந்தது. பாபா பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டார். சிலர் அவரின் கால்களைக் கழுவிக்கொண்டிருந்தனர். சிலர் அவர் கால் கட்டைவிரலினின்று புனிதநீரை எடுத்து மனநிறைவுடன் குடித்துக்கொண்டிருந்தனர். சிலர் சந்தனம் பூசினர். சிலர் அவர்தம் புனிதமேனிக்கு நறுமணம் தடவினர். குலம், ஆசாரம் இவற்றை மறந்து அனைவரும் வழிபாடு செய்தனர். பாபா அத்துறவியின் மேல் கோபம் கொண்டவராய் இருந்தாலும் அவர் பாபாவின்பால் பாசம் நிரம்பியவராய் மசூதியைவிட்டுப் போகவில்லை.
ஷீர்டியில் அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். சென்னையிலிருந்து அப்போது அவருடைய தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருக்குக் கடிதம் வந்தது. அவர் மிகவும் மனம் தளர்ந்து, தமது தாயார் அருகில் செல்ல விரும்பினார். ஆனால் அவரால் பாபாவின் அனுமதியின்றிச் செல்ல முடியாது. எனவே தமது கரத்தில் கடிதத்துடன் பாபாவைக்கண்டு வீடு திரும்ப அனுமதி கேட்டார். வருங்காலத்தை அறிந்த எங்கும்நிறை பாபா அவரிடம் "உன்னுடைய தாயாரை நீ இவ்வளவு நேசிக்கும்போது ஏன் துறவியானாய்? சொந்தபந்தங்களும், ஆபாசங்களும் காவி உடைக்கு ஒத்துவராது. உன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று அமைதியாக அமர்ந்து பொறுமையுடன் சில நாட்கள் காத்திரு. வாதாவில் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். உனது கதவுகளை நன்றாகத் தாழிடு. அதிக ஜாக்கிரதையாக இரு. திருடர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவர். செல்வமும், சுபிட்சமும் நிலையற்றவை. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. இதை உணர்ந்து இம்மை - மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடைமையைச் செய். இவ்வாறாகச் செய்து, எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவினின்றும் விடுபட்டு 'பேரானந்தப் பெருநிலை' எய்துகிறான். அன்புடனும், பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ, பரமாத்மா அவனுக்கு ஓடிச்சென்று உதவி புரிகிறார். உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம். எனவே நீ இங்கு வந்துள்ளாய். இப்போது நான் சொல்வதைக் கவனி, உனது அந்திம வாழ்க்கையை உணர். ஆசைகளற்று நாளைமுதல் பாகவதத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கு. மூன்றுமுறை சப்தாஹம் செய். அதாவது பக்தி பூர்வமாக மூன்றுவாரம் மூன்றுமுறை பாராயணம் செய்க. பரமாத்மா உன்னிடம் மகிழ்வெய்தி நினது கவலைகளை அழிப்பார். உனது துயர் நிலை மறைந்து நீ அமைதியுறுவாய்" என்று கூறினார்.
அவரது முடிவு நெருங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து பாபா இந்த சிகிச்சையை தேர்ந்தளித்தார். மரணத் தெய்வமான எமனை மகிழ்விக்கும் 'ராம விஜயம்' படிக்கும்படி செய்தார். அடுத்தநாள் காலை குளித்து மற்ற தூய சம்பிரதாயங்களைச் செய்த பிறகு லெண்டித் தோட்டத்திலுள்ள ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று பாகவதம் படிக்கத் தொடங்கினார். இரண்டுமுறை பாகவதப் பாராயணம் செய்தார். அதன் பின்னர் மிகச் சோர்வடைந்தார். வாதாவிற்குத் திரும்பினார். இரண்டு நாட்கள் தமது இருப்பிடத்தில் தங்கினார்.
மூறாவது நாள் 'பக்கீர் பாபா' என்ற படேபாபாவின் மடியில் உயிர் துறந்தார். பாபா அவரது உடலை ஒருநாளைக்கு ஒரு நல்ல காரணம் கருதி பாதுகாக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். பின்னர் போலீஸ் வந்து உரிய விசாரணை செய்து, உடலை அடக்கம் செய்யும்படி அனுமதி அளித்தனர். உரிய இடத்தில் தக்க மரியாதையுடன் அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக பாபா துறவிக்கு உதவி அளித்து, அவருக்கு நற்கதியளித்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment