Friday, 17 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 33 - பகுதி 2

No comments

உதி:- 
பாபா அனைவரிடமிருந்தும் தஷிணையைப் பெற்றார்.  இவ்வாறாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து அவர் பெருமளவு தர்மத்திற்கும், மீதியை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார்.  அவர் எப்போதும் எரியவிட்டுக்கொண்டிருந்த துனி என்ற புனித நெருப்பில் விறகை இட்டார்.  இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பலானது 'உதி' என்று அழைக்கப்பட்டது.  பக்தர்கள் ஷீர்டியைவிட்டுப் புறப்படும் சமயத்தில் இந்த உதியானது தாராளமாக வினியோகிக்கப்பட்டது.

இந்த உதியினால் பாபா குறிப்பிடுவது அல்லது உபதேசிப்பது என்ன?  இப்பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சாம்பலைப் போன்று நிலையற்ற பொருள் என்பதே.  பஞ்ச பூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து முடித்து ஓய்ந்த பின்னர் சாம்பலாக்கப்படும்.  அவர்களின் உடல் சாம்பலாக்கப்படும் என்ற உண்மையை பக்தர்களுக்கு நினைவூட்டவே பாபா உதியை வழங்குகிறார்.  பிரம்மம் ஒன்றே மெய்ப்பொருள் என்பதையும், பிரபஞ்சம் நிலையற்றது என்றும் தந்தை, தாய், மகன் இவர்கள் யாவரும் உண்மையில் நம்முடையவர் அல்ல என்றும் இதனால் உபதேசித்தார்.  இவ்வுலகத்துக்கு நாம் தனியாக வந்தோம்.  தனியாகவே உலகைவிட்டுப் போகவேண்டும்.  உதி பலவிதாமான உடல்-மன நோய்களைக் குணப்படுத்தியது என்பது அறியப்பட்டது.  இப்போதும் கூட அறியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், மற்றும் அநித்ய வஸ்துக்களில் பற்றின்மை முதலியதான தத்துவங்களை பாபா அவரது உதி, தஷிணையின் மூலம் அடியவர்களின் காதுகளில் ஓத விரும்பினார்.  முன்னது (உதி) விவேகத்தையும், பின்னது (தஷிணை) பற்றின்மையையும் நமக்கு அறிவுறுத்தியது.  இவ்விரண்டும் நம்மிடத்தில் இருந்தாலொழிய நாம் இச்சம்சார சாகரத்தைக் கடக்க முடியாது.  எனவே பாபா தஷிணையைக் கேட்டுப் பெற்றார்.  அவர்கள் விடைபெறும்போது உதியைப் பிரசாதமாக அளித்து அதை அவர்கள் நெற்றியிலிட்டுத் தமது வரம் நல்கும் கரத்தை அவர்கள் தலைமீது வைத்தார்.  பாபா மகிழ்வான மனநிலையில் இருக்கும்போது ஆனதமாகப் பாடுவார்.  அத்தகைய ஒரு பாட்டு, உதியைப் பற்றியதாகும்.  உதி பாடலின் பல்லவி இவ்வாறானது.

ரமதே ராம் ஆவோஜி! ஆவோஜி! 

உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி! 

ஓ! விளையாட்டு ராமா, வாரும்! வாரும்!

பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில் பாடுவது வழக்கம். 

உதியைப் பற்றி ஆன்மிகக் குறிப்பாகச் சொல்லப்பட்ட பொருள் இவ்வளவே.  அதற்குத் தன்னுடையதான லௌகிக தனிமுறைச் சிறப்பும்கூட உண்டு.  உதி ஆரோக்கியம், சுபிட்சம், கவலைகளினின்று விடுதலை மற்றும் பல லோகாயத லாபங்களை அளித்தது.  உதி பற்றிய கதைகளை நாம் இப்போது தொடங்குவோம்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment