நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணியில் காகாஜி வைத்யா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் அங்கே சப்தஷ்ரிங்கிதேவி உபாசகர். சாதகமற்ற சூழ்நிலைகளாலும், துயரங்களாலும் அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார். இத்தகைய சூழ்நிலையில் ஒருநாள் மாலை தேவியின் கோவிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளிலிருந்து மீட்குமாறு மிகவும் பக்திபூர்வமாக, மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். தேவி அவரது பக்தியால் மிகவும் மகிழ்ந்து அதேநாள் இரவு கனவில் தோன்றி அவரிடம் கூறினாள், "பாபாவிடம் நீ செல்வாயாக, பின் உன் மனம் அமைதியடையும்". இந்த பாபா யார் என்று அவளிடமிருந்து அறிவதில் காகாஜி ஆர்வமுற்றார். ஆனால் எவ்வித விளக்கமும் பெறும்முன்னரே தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார். தேவி, தன்னைக் காணுமாறு பணித்த இந்த பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார்.
எப்போது ஷீர்டிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் இப்போதைய கேள்வியாக இருந்தது. ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். உண்மையில் 'ஸந்த்'தும் (ஞானி), 'அனந்த்'தும் (கடவுள்) ஒருவரே. எள்ளளவும் அவர்களிடையே வேறுபாடு இல்லை. ஒரு ஞானியைப் பார்க்க அவனாகவே செல்கிறான் என்று ஒருவன் நினைத்தால் அது வெறும் டம்பமேயாகும். ஞானியின் அருளின்றி எவரே அவரை அணுகித் தரிசிக்க இயலும்?! மரத்தின் இலைகூட அவன் ஆணையின்றி அசைவதில்லை. ஞானியிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் கவலையுள்ளவனாக இருக்கிறானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறானோ, அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும். யாரையாவது விருந்துக்கு அழைக்கும் ஒருவன் அவரை வரவேற்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்கிறான். காகாஜி சம்பந்தப்பட்ட விஷயமும் அங்ஙனமே நடந்தது.
ஷாமாவின் வேண்டுதல்கள்:-
ஷீர்டிக்கு தமது விஷயத்தைப் பற்றி காகாஜி நினைத்துக்கொண்டிருக்கையில் அவரை அழைத்துச்செல்ல ஒருவர் அவர் இருப்பிடத்திற்கே வந்தார். அவர் வேறு யாருமல்ல, பாபாவின் மிக்க நெருங்கிய பழக்கமுள்ள அடியவரான ஷாமாவே ஆவார். இத்தருணத்தில் அவர் வணிக்கு எங்ஙனம் வந்தார் என்பதைத் தற்போது கவனிக்கலாம். ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். அவரது தாயார் அவர்களின் குலதெய்வமான வணியில் உள்ள சப்தஷ்ரிங்கிதேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்.
தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள். அத்தருணத்தில் தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள். இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன. அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்து அவரது கவனத்தை ஈர்ந்து அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள். சிலநாட்களுக்குப் பின்னர் ஷாமா இவ்வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார். இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்தன.
இத்தருணத்தில் ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் ஷீர்டிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார். ஸ்ரீமான் பூட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின. அனைவரும் மகிழ்ந்தனர். ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார். அப்போது அவரது தாயாரின் வேண்டுதல்களை அவரின் அண்ணன் அவளின் மரணப்படுக்கையில் நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே கடவுள் அவர்கள்மீது மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறினார். பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவர் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார். மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் ஆபத்தானது என எண்ணி ஒரு பொற்கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்கச் சொன்னார்.
பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவர் முன்னர் இரண்டு வெள்ளி ஸ்தனங்களையும் வைத்து ஏற்றுக்கொண்டு தம்மை வேண்டுதல்களினின்று விடுவிக்கும்படி (ஏனெனில், பாபாவே ஷாமாவுக்கு சப்தஷ்ரிங்கி தெய்வம்) வேண்டிக்கொண்டார். சப்தஷ்ரிங்கி கோவிலுக்கு அவரையே போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில் அவரையே சமர்ப்பிக்கும்படியும் பாபா வற்புறுத்தினார். பாபாவின் அனுமதியையும், உதியையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார். அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார். காகாஜி அப்போதுதான் பாபாவைப் பார்க்க மிக்க கவலையுள்ளவராக இருந்தார். அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார். எத்தகைய வியத்தகு ஒற்றுமை இது!
காகாஜி அவரை யார் அவர் என்றும் எப்போது அவர் வந்தார் என்றும் விசாரித்தார். அவர் ஷீர்டியிலிருந்து வந்திருக்கிறார் என்றறிந்தவுடன் உடனே அவரைக் கட்டியணைத்துக்கொண்டார். அன்பால் அவர் அந்த அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர்கள் சாயியின் லீலைகளைப் பற்றிப் பேசினர். ஷாமாவின் வேண்டுதல்களை நிறைவேற்றியபின்னர் இருவரும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். காகாஜி மசூதிக்குச் சென்று பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார். உடனே அவர் கண்கள் குளமாயின. அவர் அமைதியுற்றார்.
தேவியின் காட்சியின்படியே பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாயும், அடக்கமாகவும் ஆயிற்று. தமது மனதில் காகாஜி கீழ்கண்டவாறு எண்ண ஆரம்பித்தார், "என்ன வியத்தகு சக்தி இது! பாபா ஒன்றும் பேசவில்லை. எவ்விதக் கேள்வி பதிலும் இல்லை. ஆசீர்வதிக்கவில்லை. வெறும் தரிசனம் ஒன்றே இவ்விதமாக மகிழ்ச்சிக்கு அடிகோலுகிறது. எனவே அமைதியின்மை அவரது வெறும் தரிசனத்தாலேயே மறைந்து 'இன்ப உணர்வு' எனக்கு வந்திருக்கிறது. இதுவே 'தரிசனத்தின் பெருமை' எனப்படுவது". அவரது பார்வை சாயியின் பாதங்களில் நிலைகொண்டது. அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலவில்லை. பாபாவின் லீலைகளைக் கேட்டு கரைகாணா மகிழ்ச்சியடைந்தார். பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார். கலப்பற்ற இன்பத்தை அவர் எய்தினார். அங்கு அவர் பன்னிரெண்டு நாட்கள் தங்கி இருந்தார். பாபாவிடம் விடைபெற்று உதி, ஆசீர்வாதம் இவைகளுடன் வீடு திரும்பினார்.

No comments :
Post a Comment