இந்த அத்தியாயம் பகவத்கீதையின் ஒரு செய்யுளுக்கு பாபாவின் விளக்கத்தை அளிக்கிறது. பாபாவுக்கு வடமொழி தெரியாது என்றும், பொருள் விளக்கம் நானா சாஹேப் சாந்தோர்கரினுடையது என்றும் சிலர் ஆட்சேபித்ததால், ஹேமத்பந்த் அந்த ஆட்சேபத்தை மறுத்து வாதாடி வேறொரு அத்தியாயம் எழுதினார். ஐம்பதாம் அத்தியாயமும் இதே உட்கிடைப் பொருளை விவரிப்பதால் அதுவும் இந்த அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்னுரை:-
மஹாசமாதி எய்தும்வரை ஸ்ரீ சாயி வாழ்ந்து நடமாடிய ஷீர்டியும், த்வாரமாகாயியும் நற்பேற்றுக்குரியவைகள். யாருக்காக அவர் அத்தனை தூரம் வந்தாரோ, எவருடைய நன்றிக்கடனுக்குத் தம்மை உரியவராக்கிக் கொண்டாரோ, அத்தகைய ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கபப்ட்டவர்கள். முதலில் ஷீர்டி ஒரு குக்கிராமம்தான். ஆனால் அவர்தம் தொடர்பின் காரணமாக பெரும் முக்கியத்துவத்தை எய்திற்று. ஒரு தீர்த்தமாகவும், புனிதப் பயணத்துக்குரிய ஒரு புண்ணிய ஷேத்திரமாகவும் ஆனது. ஷீர்டியின் பெண்மணிகளும் அதே அளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்பால் அவர்கள் கொண்டிருந்த முழுமனதான சிதையாத நம்பிக்கையும் நற்பேற்றுக்குரியது. அவர்கள் குளிக்கும்போதும், சோளத்தை அரைக்கும்போதும், பொடி செய்யும்போதும், மற்ற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் பாபாவின் புகழைப் பாடினார்கள். அவர்களின் அன்பு நற்பேற்றுக்குரியது. ஏனெனில் கேட்போரின், பாடுவோரின் மனங்களில் கொந்தளிப்பை அகற்றி சாந்தப்படுத்தியது. இனிமையான பாடல்களை அவர்கள் பாடினார்கள்.

No comments :
Post a Comment