பாபாவின் பொருள் விளக்கம்:-
பாபாவுக்கு வடமொழி தெரியும் என்பதை ஒருவரும் நம்பவில்லை. ஒருநாள் நானா சாஹேப் சாந்தோர்கருக்குக் கீதையின் ஒரு செய்யுளுக்கு சிறந்த பொருள் விளக்கம் அளித்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினார். இதைப்பற்றிய சுருக்கமான விபரம் B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதாரால் எழுதப்பட்டு, சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7 'ஸ்புதவிஷயா' பக்கம் 563) மராத்தியில் பதிப்பிக்கப்பட்டது.
சகோதரர் B.V.நரசிம்மஸ்வாமி எழுதிய இரு நூல்களான 'சாயிபாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள்' (பக்கம் 61), 'The Wonderous Saint Sai Baba' (page 36) ஆகியவற்றில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இது மேற்குறித்து ஸ்வாமி எழுதிய 'பக்தர்களின் அனுபவங்கள் 3' (பக்கம் 66) இலும் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொருள் குறித்து நானா சாஹேபிடமிருந்தே B.V.தேவ் நேரடித் தகவல் பெற்றாராதலால் அவருடைய கூற்றையே கீழே அளிக்கிறோம்.
நானா சாஹேப் சாந்தோர்கர் வேதாந்தத்தில் ஒரு சிறந்த மாணவர். அவர் கீதையை விளக்கங்களுடன் பயின்று இருக்கிறார். அவைகள் எல்லாவற்றையும் பற்றி தாம் மிகவும் கற்றுச் சிறந்த அறிவாளியெனக் கர்வமடைந்தார். இவைகளைப் பற்றியோ, வடமொழியைப் பற்றியோ பாபாவுக்கு ஒன்றுமே தெரியாது என்று கற்பனை செய்துகொண்டார். எனவே, ஒருநாள் பாபா குட்டை அம்பலப்படுத்தினார்.
இந்நாட்கள் பாபாவிடம் கூட்டம் திரளத் தொடங்குவதற்கு முன்பாகும். அப்போது அத்தகைய அடியவர்களிடம் பாபா தனியாக உரையாடல் நிகழ்த்துவதுண்டு. நானா அவரருகில் பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டு எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.
பாபா: நானா, உனக்குள்ளே என்ன முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாய்?
நானா: வடமொழியிலிருந்து ஒரு ஸ்லோகத்தை நான் ஒப்புவித்துக்கொண்டிருக்கிறேன்.
பாபா: என்ன ஸ்லோகம்?
நானா: பகவத்கீதையிலிருந்து
பாபா: அதைப் பலமாகக் கூறு
நானா: (பகவத்கீதை அத்தியாயம் 4இல், 34வது ஸ்லோகத்தைப் பின்வருமாறு ஒப்பித்தார்)
தத்வித்தி ப்ரணிபாதேனே பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வ தர்ஷின:
பாபா: அது உனக்குப் புரிகிறதா?
நானா: ஆம்
பாபா: அப்படியானால் என்னிடம் அதை விளக்கிக் கூறு.
நானா: சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தும், குருவிடம் கேட்டும், பணிவிடை செய்தும், இந்த ஞானம் என்பது என்ன என்பதை அறிவாயாக. அப்போது உண்மை ஞானத்தின் சத்பொருளை (பிரம்மத்தை) எய்திய அந்த ஞானிகள், ஞானோபதேசத்தை உனக்கு நல்குவார்கள் என்பது அதன் பொருள்.
பாபா: செய்யுள் முழுவதற்குமான இத்தகைய திரள் கருத்து எனக்குத் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் இலக்கணவேகம், பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்.
பின்னர் நானா அதைப் பதம் பதமாக விவரித்தார்.
பாபா: வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால் போதுமா?
நானா: ப்ரணிபாத என்ற சொல்லுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் என்னும் பொருள் தவிர வேறு எப்பொருளும் எனக்குத் தெரியாது.
பாபா: பரிப்ரஷ்னா என்றால் என்ன?
நானா: கேள்வி கேட்டல்
பாபா: ப்ரஷ்னா என்றால் என்ன பொருள்?
நானா: அதுவே (கேட்டல்)
பாபா: பரிப்ரஷ்னாவைப் போல் ப்ரஷ்னாவும் அதே பொருளை உணர்த்தினால் வியாஸர் ஏன் பரி என்னும் அடைமொழியை முன்னால் சேர்த்தார்? வியாஸர் பைத்தியமாய் இருந்தாரா?
நானா: பரிப்ரஷ்னாவுக்கு அதைத்தவிர வேறெந்த பொருளும் எனக்குத் தெரியாது.
பாபா: 'சேவா' அது எத்தகைய சேவையைக் குறிக்கிறது?
நானா: நாங்கள் எப்போதும் செய்துகொண்டிருக்கும் அதையே தான்.
பாபா: அத்தகைய சேவை செய்தால் போதுமா?
நானா: 'சேவை' என்ற சொல் அதைத்தவிர வேறு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியாது.
பாபா: அடுத்த வாக்கியத்தில் 'உபதேஷ்யந்தி தே ஞானம்' என்பதில் ஞானம் என்ற சொல்லுக்கு வேறு எந்த சொல்லையாவது போட்டு அதை அங்ஙனம் படிக்க முடியுமா?
நானா: ஆம்.
பாபா: என்ன சொல்?
நானா: அஞ்ஞானம்
பாபா: இந்தச் சொல்லைக் போட்டு (ஞானத்துக்குப் பதில்) செய்யுளிலிருந்து ஏதாவது பொருள் உணரப்படுகிறதா?
நானா: சங்கரபாஷ்யம் அத்தகைய பொருள் தரும் அமைப்பு எதையும் தரவில்லை.
பாபா: அவர் தராததைப் பற்றி இலட்சியம் செய்யாதே. அஞ்ஞானம் என்ற சொல் என்னும் சிறந்த பொருளை உணர்த்துமென்றால், அதை உபயோகிப்பதற்குத் தடை ஏதும் உண்டா?
நானா: அஞ்ஞானம் என்பதை அதில் வைத்து பொருளை உணர்வது எவ்வாறு என்பது எனக்கு விளங்கவில்லை.
பாபா: கிருஷ்ணர் அர்ஜுனனை ஞானிகளையும், தத்துவ தரிசிகளையும் நாடி அவர்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தத்துவ விசாரணையையும், சேவையையும் செய்யுமாறு ஏன் சொல்கிறார்? கிருஷ்ணர் தாமே ஒரு தத்துவதரிசியும் உண்மையில் ஞானரூபமுமேயல்லவா?
நானா: ஆம். அங்ஙனமேயானால் அவர் அர்ஜுனனிடம் ஞானிகளை அணுகுமாறு ஏன் குறிப்பிட்டார் என்பது எனக்குப் புரியவில்லை?
பாபா: இதை நீ புரிந்துகொள்ளவில்லையா?
நானா செருக்குக் குலைவுற்றார். கர்வம் அழிக்கப்பட்டது. பின்னர் பாபா விவரிக்க ஆரம்பித்தார்.
ஞானிகளின் முன்னால் வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது மட்டும் போதாது. நம் சத்குருவிடம் சர்வவாஸ்வ சரணாகதியடைய (பரிபூரண) சமர்ப்பணம் வேண்டும்.
கேள்வி கேட்டால் மட்டும் போதாது. ஒழுங்கற்றமுறையிலும், குருவை சிக்கலில் மாட்டிவிடும் வகையிலும் கேட்கக்கூடாது. விடைகளிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டவோ அல்லது பயனற்ற ஆர்வத்துடன் கேட்கப்படவோ கூடாது. அது காரிய மனப்பான்மையுடன் ஆன்மிக முன்னேற்றம் அல்லது மோட்சத்தை அடையும் நோக்கத்துடன் இருக்கவேண்டும்.
சேவை என்பது ஏதோ ஒரு பணிசெய்வது அல்ல. தான் செய்ய அல்லது செய்யமறுக்க உரிமையுள்ளவன் என்பது போன்ற உணர்வுகளைத் தன்னுள் இருத்திக்கொண்டு செய்வது சேவையன்று. உடலின் அதிபதி தான் அல்ல என்றும் உடல் குருவுக்கே அர்ப்பணமானது என்றும் அவருக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே உளதாய் இருக்கிறது என்றும் உணரவேண்டும். இதன்படி நடந்தால் முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிட்ட 'ஞானம்' என்பது எதனைக் குறிக்கிறது என்று சத்குரு உணர்த்துவார்.
குரு அஞ்ஞானத்தைப் போதிக்கிறார் என்று கூறுவதன் பொருள் நானாவுக்கு விளங்கவில்லை.
பாபா: எங்ஙனம் ஞானோபதேசம் செயற்படுத்தப்படுகிறது? அறியாமையை அழிப்பதே ஞானம். கீதை அத். 18ல் 66வது ஸ்லோகத்துக்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 1396ல் கூறப்படுவதாவது: "ஓ! அர்ஜுனா, அறியாமையை அகற்றுவது இத்தகையது, அதாவது கனவும், தூக்கமும் மறைந்துவிடுமானால் நீ உன்னுடையவனே. அது அங்ஙனமே", மற்றும் கீதை அத்.5, ஸ்லோகம் 16க்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 83 கூறுவதாவது அறியாமையை அழிப்பது என்பதைத் தவிர ஞானத்தில் மாறுபாடாகவோ தற்சார்புடையதாகவோ வேறு எதுவும் உள்ளதா?! (இல்லையென்பது குறிப்பு). இருளைத் துரத்துவது என்றால் ஒளி எனப்பொருள்.
த்வைதத்தை அழிப்பதென்றால் அத்வைதம் எனப்பொருள். த்வைதத்தை அழிப்பதுபற்றிப் பேசும்போதெல்லாம் நாம் அத்வைதத்தைப்பற்றிப் பேசுகிறோம். இருளை அகற்றுவது பற்றிப் பேசும்போதெல்லாம் ஒளியைப் பற்றிப் பேசுகிறோம். அத்வைத நிலையை நாம் உணர வேண்டுமென்றால், நம் மனதிலுள்ள த்வைத உணர்வை நீக்கவேண்டும். அதுவே அத்வைத நிலையை நாம் உணர்வதாகும். த்வைத நிலையை மனதில் கொண்டுள்ள ஒருவன், அத்வைத நிலையைப்பற்றி எங்ஙனம் பேசமுடியும்? அப்படி ஒருவன் பேசுவானாகில் அதே நிலையை அடைந்தாலொழிய அதை எங்ஙனம் ஒருவன் அறிமுடியம்? உணர முடியும்?
மீண்டும் கூறுமிடத்து சீடனும் சத்குருவைப் போலவே
உண்மையில் ஞானத்தின் பண்புருவமானவன். மனப்பான்மை, மேலான உணர்வு, மிகச்சிறந்த அமானுஷ்ய சத்துவநிலை, ஒப்பற்ற செயலாற்றல், ஐஸ்வர்ய யோகம் (தெய்வீக சக்திகள்) இவைகளிலேயே சீடனுக்கும், குருவுக்குமுள்ள வேறுபாடு நிலவுகிறது. குரு நிர்குணமானவர், சச்சிதானந்தமானவர். உண்மையிலேயே மனித வர்க்கத்தை உயர்த்தி உலகை உய்விப்பதற்கே அவர் மானுட உருவம் எடுக்கிறார். ஆனால் அதன் பொருட்டாக அவரது உண்மையான நிர்குணத்தன்மை எள்ளளவும் பாதிக்கபடுவதில்லை.
அவர்தம் வியாபகம் (அல்லது உளதாயிருக்கும் தன்மை) தெய்வீக சக்தி, ஞானம் முதலியன குறைவதில்லை. சீடனும் அதே ஸ்வரூபத்தில்தான் இருக்கிறான். கணக்கற்ற பிறப்பு, இறப்புக்களுடைய முன்வினைகளின் விளைவானது அறியாமை என்னும் ரூபத்தில் அவன் பார்வையினின்று, தான் சுத்த சைதன்யைன் என்பதை அறியவிடாமல் மறைக்கிறது. (கீதை: அத். 5, சுலோகம். 15) இங்ஙனமே மேலே கூறப்பட்டவிதமாக அவன் 'நான் ஜீவன்' தான் ஒரு தாழ்வான பரிதாபமான ஜீவன் என்று எண்ணுகிறான். அறியாமையாகிய இவ்வேர்களை குரு கிள்ளியெறிந்து அவனுக்கு உபதேசம் அல்லது அறிவுரை அளிக்கவேண்டும்.
தாழ்வான ஈனமான எல்லையற்ற பிறவிகளை எடுத்து பல முடிவில்லாத பிறப்புகளினால் திக்பிரமை அடைந்துள்ள சீடனுக்கு குரு நூற்றுக்கணக்கான பிறப்புகளில் "நீ கடவுள், நீ வலிமையுள்ளவன், நீ செல்வமுள்ளவன்" என்று உபதேசித்து அறிவுறுத்துகிறார். பின்னர் தானே உண்மையில் கடவுள் என்பதை சிறிதளவு உணர்கிறான்.
சீடன் உழன்றுகொண்டிருப்பதான மாயத்தோற்றமானது யாதெனின் - தானே உடலென்றும், தானே ஜீவனென்றும் (அஹங்காரம்), பரமாத்மாவாகிய கடவுளும், உலகமும் தன்னிலிருந்து வேறுபட்டவைகள் என்பதுமாகும். இது கணக்கற்ற முற்பிறவிகளில் அவன் மரபுரிமையாகப் பெற்ற பிழையானதொரு கருத்தாகும். அந்த மாயையின் அடிப்படையிலான செயல்களால் மகிழ்ச்சி - துயரம் இரண்டையும் கலந்து அனுபவிக்கிறான். இம்மாயையை, இப்பிழையை, இந்த அறியாமையின் வேரை அகற்றுவதற்கு அவன் விசாரணை செய்யத் தொடங்கவேண்டும். எங்ஙனம் இந்த அறியாமை உண்டாகிறது? அது எங்கு உள்ளது? இதை அவனுக்கு உணர்த்துவதுதான் குரு உபதேசம்.
அஞ்ஞானம் என்பது கீழ்க்கண்டவையே:
1. நான் ஒரு ஜீவன் (ஜந்து)
2. உடம்பே ஆத்மா (நானே உடல்)
3. கடவுள், உலகம், ஜீவன் இவை எல்லாம் வேறானவை
4. நான் கடவுளல்ல
5. உடல், ஆத்மா அன்று என்பதை அறியாமலிருத்தல்
6. கடவுள், உலகம், ஜீவன் இவைகள் எல்லாம் ஒன்று
என்பதை அறியாமலிருத்தல்
இப்பிழைகளெல்லாம் அவனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலன்றி ஜீவன், உலகம், உடம்பு இவைகளெல்லாம் என்ன?! அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவா!, ஒன்றுக்கொன்று மாறுபாடானவையா! அல்லது அனைத்தும் ஒன்றேதானா என்பதை சீடன் அறிந்துகொள்ள முடியாது.
இவைகளை அவனுக்குப் போதித்து, அவனது அறியாமையை அழிப்பதே இந்த ஞானம், அஞ்ஞானம் இவைகளின் போதனைகளாகும். ஞானமூர்த்தியாகிய ஜீவனுக்கு ஏன் இந்த ஞானம் போதிக்கப்படவேண்டும்? உபதேசம் என்பது அவரது தவறைச் சுட்டிக்காட்டி அறியாமையை அழிக்கவேயாகும்.
பாபா தொடர்ந்தார்: 'ப்ரணிபாத' என்பது சரணாகதி - உடலால், உள்ளத்தால், செல்வங்களுடன் சரணாகதியடையவேண்டும் - ஏன் கிருஷ்ணர் அர்ஜுனனை வேறு ஞானிகளைக் கேட்கும்படி கூறுகிறார்?
நல்ல பக்தன் யாவற்றையும் வாசுதேவன் எனக்கொள்கிறான். (கீதை அத்.7, சுலோகம் 9)
எந்த குருவும் அடியவருக்குக் கிருஷ்ணராகிறார். குரு, சீடனை வாசுதேவனாக நினைக்கிறார். இவர்கள் இருவரையும் கிருஷ்ணர் தம்முடைய பிராணனும், ஆத்மனுமாக்கிக்கொள்கிறார். (கீதை அத். 7, சுலோகம் 18 ஞானதேவரின் விளக்கம்) அத்தகைய பக்தர்களும், குருவும் இருப்பதைக் கிருஷ்ணர் அறிந்திருப்பதால் அவர்களின் பெருமை உயர்ந்து திகழுதற்பொருட்டாகவும், அனைவரும் அறிதற்பொருட்டாகவும் அர்ஜுனனிடம் அவர்களைப்பற்றிச் சொல்கிறார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment