செங்கல் உடைதல்:-
பாபா இறுதிவிடை பெறவிருந்த சில தினங்களுக்கு முன்பாக இது குறித்து முன்கூட்டியே ஒரு சகுனம் ஏற்பட்டது. மசூதியில் பாபா கைவைத்து அமரும் ஒரு பழைய செங்கல் இருந்தது. இரவில் அதன் மீது சாய்ந்துகொண்டு இருக்கையில் அமர்வார். இது பல ஆண்டுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் பாபா இல்லாதபோது தரையைக் கூட்டிக்கொண்டிருந்த ஒரு பையன் தனது கையில் அதை எடுத்தான். துரதிர்ஷ்டவசமாக கைதவறிக் கீழே விழுந்து அது இரண்டாகியது.
பாபா இதைத் தெரிந்துகொண்டதும் அவர் அதன் இழப்பைக் குறித்து வெகுவாகக் கவலை அடைந்து "உடைந்தது செங்கல் அல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் ஸ்பரிசத்துடன் நான் எப்போதும் ஆத்மதியானம் செய்தேன். அது என் உயிரைப்போன்று அவ்வளவு பிரியமானது. இன்று அது என்னைவிட்டு நீங்கிவிட்டது" எனப் புலம்பி அழுதார். செங்கல்லைப் போன்ற ஒரு ஜடப்பொருளுக்கு பாபா ஏன் இவ்வளவு வருந்தவேண்டும்? என்று சிலர் கேட்கலாம். இதற்கு ஹேமத்பந்த், "ஞானிகள் இவ்வுலகில் ஆதரவற்றோரைக் காப்பது என்ற முக்கிய நோக்கத்துக்காகவே அவதரிக்கிறார்கள். அவதரித்த உருவில் மக்களுடன் கலந்து அம்மக்களைப் போலவே வெளிப்படையாகச் சிரித்தல், விளையாடுதல், அழுதல் ஆகியவற்றைச் செய்தாலும் தமக்குள்ளே அவர்கள் தமது கடமைகளையும், பிறவியெடுத்த நோக்கத்தையும் பற்றி முழுதும் விழிப்பாய் இருக்கிறார்கள்" என பதிலளித்திருக்கிறார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment