வேதங்களும், புராணங்களும் பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது. அவ்வாறெனின் ஏதுமறியாதவர்களாகிய நாம் எங்ஙனம் நமது சத்குரு, சாயிபாபாவை விவரிக்க இயலும்? இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகிறோம். உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும். ஆனால் சாயிபாபாவினது நல்ல பண்புகள் மௌன விரதத்தை மறக்கச்செய்து நம்மைப் பேசுமாறு ஊக்குவிக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள் இவர்களும் நம்மோடு இருந்து உண்ணவில்லையாயின் நல்ல ருசியான உணவுகூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை. ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து உண்பார்களானால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன. சாயி லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயி லீலாம்ருதமும் இது போன்றதே. அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ணமுடியாது. நண்பர்களும், சகோதரர்களும் நம்முடன் சேரவேண்டும். எவ்வளவு அதிகமோ அவ்வளவு நலம்.
இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும் தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும் சாயிபாபா அவர்களேயாகும். பரிபூரண சரணாகதியடைவதும், தியானிப்பதும் மட்டுமே நமது கடமை. க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும்விட தவமிருத்தல் நல்லது. தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம். இவையெல்லாவற்றையும் விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது.
ஆகவே சாயியின் நாமத்தை ஸ்மரணம் செய்து அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக. சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை. மேலே கூறியவாறு நமது கடமையைச் செய்தோமானால் சாயி நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர். இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்.

No comments :
Post a Comment