ஷாமாவின் மைத்துனி:-
ஷாமாவின் தம்பியான பாபாஜி ஸாவ்லிவிஹீர் கிராமத்துக்கு அருகில் தங்கியிருந்தார். ஒருமுறை அவர் மனைவி கட்டிகளுள்ள பிளேக் வியாதியால் தாக்கப்பட்டாள். அவளுக்கு அதிகமான ஜூரமும், அடிவயிற்றில் இரு கட்டிகளும் ஏற்பட்டன. பாபாஜி ஷீர்டிக்கு ஷாமாவிடம் ஓடிவந்து உதவிசெய்யும்படி கூறினார். ஷாமா பீதி அடைந்தார். ஆனால் தமது வழக்கப்படி பாபாவிடம் சென்று அவர் திருமுன் வீழ்ந்துபணிந்து அவருடைய உதவியைக் கோரி வியாதியைக் குணமாக்கும்படி கேட்டுக்கொண்டார். தன் தம்பியின் வீட்டிற்குப் போகவும் அவருடைய உத்தரவை வேண்டி நின்றார். பாபா "அங்கே இந்தப் பின்னிரவு நேரத்தில் செல்லவேண்டாம். அவளுக்கு உதியை அனுப்புக. ஜூரத்தைப் பற்றியும், கட்டியைப் பற்றியும், ஏன் கவலைப்பட வேண்டும்? கடவுளே நமக்குத் தந்தையும், எஜமானருமாவார். எளிதில் அவள் குணமடைவாள். இப்போது போகாதே. நாளை காலையில் போய் உடனே திரும்பிவிடு" என்றார்.
பாபாவின் உதியில் ஷாமாவுக்குப் பூரண நம்பிக்கை உண்டு. அது பாபாஜியிடம் அனுப்பப்பட்டது. கட்டிகளின் மீது அது தடவப்பட்டது. சிறிது தண்ணீரில் கரைக்கப்பட்டு குடிக்கக்கொடுக்கப்பட்டது. அதை உட்கொண்டதுதான் தாமதம், பெருமளவில் வேர்த்துக்கொட்டி ஜூரம் விட்டது. நோயாளிக்கு நல்ல தூக்கம் கிடைத்தது. அடுத்தநாள் காலை பாபாஜி தமது மனைவியின் உடல்நிலை தேறிவிட்டதையும், ஜூரம், கட்டிகள் நீங்கி புதுவலுவூட்டப் பெற்றதையும் கண்டு அதிசயப்பட்டார். ஷாமா அவ்விடத்திற்கு அடுத்தநாள் சென்றபோது அப்பெண்மணி அடுப்பருகில் அமர்ந்து தேநீர் தயாரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தம்பியைக் கேட்டதும் பாபாவின் உதி அவளை முழுவதுமாக ஒரே இரவில் குணமாக்கிவிட்டது என்று கூறினார். "காலையில் சென்று உடனே திரும்பு" என்னும் பாபாவின் மொழிகளிலுள்ள குறிப்பு நுட்பத்தை அப்போது ஷாமா புரிந்து கொண்டார்.
தேநீர் உட்கொண்டதும் ஷாமா திரும்பினார். பாபாவை வணங்கிய பின், "தேவா! தங்களது திருவிளையாடல்தான் என்ன? தாங்கள் முதலில் புயலை எழுப்பி எங்களை நிலைகுலையச் செய்கிறீர்கள். பின்னர் அதை அமைதிப்படுத்தி ஆசுவாசப்படுத்துகிறீர்கள்" என்றார். பாபா "நடவடிக்கைகளின் வழி விளங்காப் புதிர்நிலையாக உள்ளது. நான் எதையும் செய்யவில்லையாயினும், ஊழ்வினையின் காரணமாக நிகழும் செயல்களுக்கெல்லாம் அவர்கள் என்னைப் பொறுப்பாளியாக்குகிறார்கள். நான் அவர்களின் சாட்சி மாத்திரமே. கடவுள் ஒருவரே ஒரே செயலாளர். அகத்தூண்டுவிப்பாளர். மேலும் அவர் மிகவும் கருணையுள்ளவர். நான் கடவுளோ, பரமாத்மாவோ அல்ல. அவரின் பணிவுள்ள ஒரு வேலைக்காரனும் அவரை அடிக்கடி நினைவில் இருத்திக்கொள்பவனும் மட்டுமே. எவனொருவன் தனது அஹங்காரத்தை ஒதுக்கித்தள்ளி அவருக்கு நன்றி செலுத்தி அவரை முழுமையாக நம்புகிறானோ அவனது பந்தங்கள் அறுபட்டுப் போகின்றன. அவன் முக்தியடைகிறான்" என்றார்.

No comments :
Post a Comment