தாத்யா சாஹேப் குறித்து, ஷீர்டியில் உயிர் நீத்தார் என்று மட்டுமே ஹேமத்பந்த் குறிப்பிட்டுள்ளார். சாயிலீலா சஞ்சிகையில் அவரைப்பற்றி வெளியானதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது. 1909ஆம் ஆண்டு நானா சாஹேப் அங்கு மம்லதராக இருக்கும்போது பண்டரீபுரத்தில் தாத்யா சாஹேப் ஒரு சப்-ஜட்ஜாக இருந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினர். தாத்யா சாஹேப் ஞானிகளை நம்புவதில்லை. ஆனால் நானா சாஹேப் அவர்களை விரும்பினார். சாயிபாபாவின் லீலைகளை நானா சாஹேப் அவருக்குக் கூறினார். ஷீர்டிக்குச் சென்று சாயிபாபாவைப் பார்க்க அவரை வற்புறுத்தினார். முடிவாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் ஷீர்டிக்குப் போகச் சம்மதித்தார்.
(1) ஒரு பிராமண சமையற்காரர் அவருக்குக் கிடைக்கவேண்டும்
(2) அன்பளிப்புக்காக நல்ல நாக்பூர் ஆரஞ்சுகளைப் பெறவேண்டும்
இவ்விரண்டு நிபந்தனைகளும் தெய்வாதீனமாக நிறைவேறின. நானா சாஹேபிடம் சேவைக்காக ஒரு பிராமணர் வந்தார். அவர் தாத்யா சாஹேபிடம் அனுப்பப்பட்டார். தாத்யா சாஹேப் நூறு அழகிய ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய பார்சலைப் பெற்றார். அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை.
நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதால் தாத்யா சாஹேப் ஷீர்டிக்குப் போகவேண்டியதாயிற்று. முதலில் பாபா அவரிடம் மிகவும் கோபாவேஷம் அடைந்தார். ஆனால் படிப்படியாக தாத்யா சாஹேப் தமது அனுபவங்களால் பாபா கடவுள் அவதாரமே என்று உறுதி பெற்றார். பாபாவிடம் அத்தகைய அன்பு பூண்டு தனது மரணம்வரை அங்கேயே தங்கினார். அவருடைய முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும்போது அவரிடம் புனித வேதங்கள் படிக்கப்பட்டன. முடியுந்தறுவாயில் பாபாவின் பாததீர்த்தம் கொண்டுவரப்பட்டு குடிப்பதற்காக அவரிடம் தரப்பட்டது. பாபா அவருடைய மரணத்தைக் கேள்விப்பட்டு, "ஓ! தாத்யா, நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவர் மீண்டும் பிறக்கமாட்டார்" என்றார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)


No comments :
Post a Comment