Wednesday, 15 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 30 - பகுதி 1

No comments
இவ்வத்தியாயத்தில் ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட இன்னும் இரண்டு அடியவர்களைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.
முன்னுரை:-
கருணையின் இருப்பிடமாம் ஷீர்டி சாயிராம், தம் அடியவர்களிடம் பாசமும், அளவில்லா நேசமும் காட்டி அவருடைய வெறும் தரிசனத்தாலேயே இச்சம்சார வாழ்க்கையில் அவர்களுக்குள்ள பயத்தைப் போக்குகிறார்.  அவர்களின் பெருங்கேடுகளை அழிக்கிறார்.  அவர் முதலில் அருவமாய் இருந்தார்.  ஆயின் தம் அடியவர்களின் பக்தியின் பொருட்டு ஓர் உருவத்தை எடுக்க வேண்டியவரானார்.  ஞானிகளின் வருகையின் காரணம் அடியவர்களுக்கு 'விடுதலை' - 'தன்னையறிதல்' அளிப்பதேயாகும்.  அவர்களில் ஸ்ரேஷ்டரான சாயிக்கு அக்காரணம் தவிக்க இயலாதது.  எவர், அவர்தம் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோ, அவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது.  அவர்தம் பாதாரவிந்தங்களை நினைத்துக்கொண்டு பிராமணர்கள் புனித க்ஷேத்திரங்களினின்றும், வந்து அவர்தம் சன்னிதானத்தில் வேதங்களை ஓதுகிறார்கள்.  காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள்.  பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் 'பக்தி' என்றால் என்ன என்பதை அறியோம்.  ஆனால் மற்றெல்லோரும் கைவிட்டபோதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம்.  யாரை அவர் ஆச்சீர்வதிக்கிறாரோ அவர்கள் எல்லையற்ற வலிமைபெற்று, மெய் - பொய் ஆகியவற்றைப் பகுத்துணரும் ஞானம் எய்துகிறார்கள்.      

தம் அடியவர்களின் ஆசையை சாயி முழுமையாக அறிகிறார்.  அவைகளை நிறைவேற்றுகிறார்.  எனவே அவர்கள் விரும்பியதைப் பெற்று நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்.  எனவே அவரைப் பிரார்த்திக்கிறோம்.  அவர்முன் வீழ்ந்து வணங்குகிறோம்.  நமது குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக்கொண்டு கவலைகளினின்றும் நம்மை அவர் விடுவிக்கட்டும்.  பெருந்துயரங்களால் அவதியுற்றுக்கொண்டிருப்பவன் சாயியை இங்ஙனம் நினைத்துத் தியானிக்கிறான்.  அவரது அருளாலே அவன் மனம் அமைதியடைகிறது.

இந்த சாயி கருணைக்கடல், தம்மீது அவர் கருணை பொழிந்ததன் விழைவே இந்த சத்சரிதம் என்கிறார் ஹேமத்பந்த்.  அல்லாவிடில் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது!  யார்தான் இவ்வேலையை மேற்கொள்ள இயலும்!  ஆனால் சாயி எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதால் ஹேமத்பந்த் எவ்வித பாரத்தையும் உணரவில்லை.  இது குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை.  அவரது பேச்சையும், பேனாவையும் உணர்வூட்ட ஆற்றல் மிக்க ஞானஒளி இருக்கும்போது அவர் ஏன் சந்தேகம் கொள்ளவேண்டும்?  அல்லது ஏன் எவ்விதக் கவலையும் கொள்ளவேண்டும்?  இது அவர்தம் முன்வினைப் புண்ணியவசத்தால் ஸ்ரீசாயி அவர்கள் இச்சேவைக்குத் தம்மை ஆட்படுத்தி, ஆசீர்வதித்த அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்கிறார்.

இந்தப் பின்வரும் நிகழ்ச்சி ஓர் சுவையான கதை மட்டுமன்று, புனிதமான அமுதமுமாகும்.  இதைப் பருகுபவன் சாயியின் பெருமையையும் அவர்தம் எங்கும்நிறை தன்மையையும் உணர்வான்.  விவாதிக்க, விமர்சிக்க விரும்புவோர் இந்தக் கதைகளுக்குச் செல்லக்கூடாது.  இங்கு தேவையாய் உள்ளது விவாதமல்ல.  அளவற்ற அன்பும், பக்தியுமேயாம்.  கற்றறிந்தோர், பக்தியுடையோர், உண்மையுடன் நம்பிக்கை கொண்டுள்ளோர் மட்டுமின்றி ஞானிகளின் சேவகர் என்று தம்மைக் கருதுவோர்களும் இக்கதைகளை விரும்பிப் பாராட்டுவர். 

மற்றவர்கள் அவைகளைக் கற்பனைக் கதைகள் என்றுகொள்வர்.  சாயியின் அதிர்ஷ்டம் வாய்ந்த அடியார்கள் சாயி லீலைகளைக் கற்பகதருவாகக் கருதுவர்.  இந்த சாயி லீலைகளின் அமிர்தத்தைப் பருகுவது அறியாமையில் மூழ்கியுள்ள ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும்.  இல்லறத்தார்க்கு மனநிறைவளிக்கும்.  இலட்சியவாதிகளுக்குச் சாதனை கைகூடும். இது பற்றிய கதையைக் கவனிப்போம். 

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                (தொடரும்…)


No comments :

Post a Comment