தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூ மம்லதார் திரு B.V.தேவ், அவரது தாயார் 25 - 30 விதமான பிரார்த்தனைகளை அனுஷ்டித்ததன் முடிவாக ஒரு உத்யாபன் (பூர்த்தி) விழாவை நடத்த இருந்தார். நூறு அல்லது இருநூறு அந்தணர்களுக்கு உணவளிப்பதும் இவ்விழாவுடன் சேர்ந்தவொரு அம்சமாகும். தேவ், விழாவுக்கு ஒரு நாளை நிச்சயித்தார். சாயிபாபாவின் விஜயத்தாலன்றி விழா உரியமுறையில் பூர்த்தி அடையாதாகையால், விழா விருந்தில் கலந்துகொள்ள அவரின் சார்பில் பாபாவை வேண்டிக்கொள்ளுமாறு பாபு சாஹேப் ஜோகிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பாபாவிடம் பாபு சாஹேப் ஜோக் அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார். பாபா, தேவின் தூய்மையான, உள்ளபூர்வமான அழைப்பினை கவனத்துடன் கருத்திற்கொண்டு கூறினார், "என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன். நம்மில் மூன்றுபேர் (மூவர்) நான், நீ, மற்றும் ஒருவன் சென்று அவ்விழாவில் கலந்துகொள்வதாக அவருக்கு ஒரு மகிழ்வான பதில் எழுது" என்றார்.
ஜோக், பாபா கூறியதை தேவிடம் தெரியப்படுத்தினார். பின்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராயினும், பாபா தாமே நேரிடையாக ராஹதா, ரூய், நீம்காவன் முதலிய இடங்களைத் தவிர வேறு இடங்களுக்குச் சென்றதில்லை என்று அவருக்குத் தெரியும். பாபா சர்வவியாபியாய் இருப்பதால் அவரால் இயலாதது ஒன்றும் இல்லை என்றும், அவர் விரும்பினால் எந்த ரூபத்திலும் திடீரென்று வந்து தமது சொற்களை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினார்.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர் வங்காள உடையிலுள்ள ஒரு சந்நியாசி, பசுக்களைப் பாதுகாத்தாலே தனது குறிக்கோள் எனக் கூறிக்கொண்டு டஹாணு ஸ்டேஷன் மாஸ்டரிடம் நிதி வசூலிக்க வந்தார். பின்னவர் அவரை ஊருக்குள் சென்று மம்லதார் தேவ்வைப் பார்த்து அவரின் உதவியால் நிதி சேகரிக்கச் சொன்னார். அத்தருணம் மம்லதார் அங்குவர நேர்ந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் சந்நியாசியை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இருவரும் மேடையில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
தேவ், வேறு தர்மத்திற்காக ஒரு நிதி வசூல் ஏற்கனவே ராவ் சாஹேப் நரோத்தம் ஷெட்டி என்ற பெரிய மனிதர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பிறிதொரு நிதி வசூலைத் தற்போது ஆரம்பிப்பது நன்றல்லவென்றும் அவர் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவ்விடத்துக்கு விஜயம் செய்தால் நல்லதென்றும் அவரிடம் கூறினார். இதைக்கேட்டு அத்துறவி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
ஒரு மாதத்திற்குப் பின்னர் அத்துறவி ஒரு குதிரை வண்டியில் காலை சுமார் 10 மணியளவில் வந்து தேவ்வின் வீட்டின்முன் நின்றார். தேவ் அவர் நிதிக்காக வந்திருப்பதாக நினைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அத்துறவி தாம் பணத்துக்காக வரவில்லையென்றும் உணவிற்காக அங்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
தேவ்: மிக்க நன்று. மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு நல்வரவு. இவ்வீடு தங்களுடையது.
துறவி: என்னுடன் மற்றும் இருவர் இருக்கிறார்கள்.
தேவ்: நல்லது, அவர்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.
விருந்து நடைபெற இன்னும் இரண்டு மணிநேரம் இருந்ததால், எங்கு சென்று அவர்களை அழைத்து வரவேண்டுமென தேவ் கேட்டார். "அது தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்தில் நானே அவர்களுடன் வருவேன்" என்றார். தேவ் அவரை நடுப்பகலில் வரும்படி கூறினார். சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு அம்மூவரும் வந்து விருந்தில் பங்கேற்று, விருந்து உண்டபின் சென்றுவிட்டனர்.
விழா முடிந்ததும் தேவ், பாபாவின் வாக்குறுதி மீறலைக் குறித்து வருந்தி பாபு சாஹேப் ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். ஜோக் பாபாவிடம் அக்கடிதத்துடன் சென்று அதைத் திறக்கும் முன்னரே பாபா, "ஆ! நான் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவன் கூறுகிறான். விருந்துக்கு நான் மற்ற இருவருடன் செல்லவே செய்தேன். ஆனால் அவன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. பின்னர் எதற்காக என்னை அழைக்கவேண்டும்? சந்நியாசி நிதி கேட்க அவனிடம் வந்திருப்பதாக அவன் எண்ணினான். அதுபற்றி அவனது ஐயத்தை நான் நீக்கவில்லையா? மற்றும் இருவருடன் வருவதாக நான் கூறவில்லையா? மூவரும் உரிய நேரத்தில் வந்து உணவு உட்கொள்ளவில்லையா?
பார், எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன். எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்" என்றார். இப்பதில் ஜோக்கின் உள்ளத்தை மகிழ்வடையச் செய்தது. இவை அனைத்தையும் தேவ்வுக்குத் தெரிவித்தார்.
அதை அவர் படித்தவுடனே ஆனந்தக் கண்ணீர் விட்டார். வீணாக பாபாவைக் குற்றம் கூறியதற்காக தம்மைத்தாமே கடிந்துகொண்டார். துறவியின் முந்தைய வருகையினால், தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பதையும், உணவுக்காக தாம் இருவருடன் வருவதாகக் கூறிய துறவியின் கூற்றிலுள்ள குறிப்பை தான் எங்ஙனம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்பதையும் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அடியவர்கள் தாங்களே முழுமையாக சத்குருவிடம் சரணாகதி அடையும்போது, அவர்தம் வீட்டில் நடைபெறும் மதச்சடங்குகள் உரியமுறையில், தேவையான சம்பிரதாயங்களுடன் நடத்தப்படுகின்றனவா என்று அவர் கவனிக்கிறார் என்பதை இக்கதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

No comments :
Post a Comment