ஹரிபாவ் கர்ணிக்:-
1917 ஆம் ஆண்டில் தாணே ஜில்லாவைச் சேர்ந்த ஹரிபாவ் கர்ணிக் ஷீர்டிக்குக் குருபூர்ணிமா தினத்தன்று (ஆவணி மாதம்) வந்து உரிய சம்பிரதாயங்களுடன் பாபாவை வணங்கினார். உடைகளையும், தஷிணையையும் அவர் சமர்ப்பித்தார். ஷாமா மூலமாக பாபாவிடம் விடைபெற்ற பிறகு மசூதியின் படிகளில் இருந்து இறங்கினார். பிறகு இன்னுமொரு ரூபாய் பாபாவுக்குத் தஷிணை கொடுக்க எண்ணினார். எனவே அவர் சற்றே திரும்பி, திரும்பவும் படிகளில் ஏற முயற்சித்தார். ஆனால் அவர் பாபாவின் விடையைப் பெற்றுக்கொண்டதால் போகும்படியும், திரும்பி வரவேண்டாம் என்றும் ஷாமா ஜாடை காண்பித்தார். எனவே அவர் வீட்டுக்குக் கிளம்பினார். திரும்புகையில் நாசிக்கில் காலாராமரின் கோவிலுக்குத் தரிசனத்துக்குச் சென்றார். கோவிலின் பெரிய கதவுக்கு சிறிதே உட்புறம் அமரும் நரசிங்க மஹராஜ் என்ற ஞானி தமது அடியவர்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஹரிபாவிடம் வந்து, அவரின் மணிக்கட்டைப் பிடித்து "எனது ஒரு ரூபாயைக் கொடு" என்றார். கர்ணிக் வியப்படைந்தார். மிகுந்த இஷ்டத்துடன் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்தார். சாயிபாபா எங்ஙனம் தான் கொடுக்க இஷ்டப்பட்டிருந்த ரூபாயை நாசிக்கைச் சேர்ந்த நரசிங்க மஹராஜ் வழியாக வாங்கினார் என்று எண்ணினார்.
இக்கதை ஞானிகள் அனைவரும் ஒன்றே என்ற உண்மையையும், எங்ஙனம் அவர்கள் ஒத்திசைவுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

No comments :
Post a Comment