நாராயண்ராவ்:-
பக்தர் நாராயண்ராவ் (தந்தை பெயரும், உபபெயரும் தரப்படவில்லை) பாபா வாழ்ந்திருக்கும்போது இரண்டுமுறை அவரைச் சந்திக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தார். பாபா காலமான 1918க்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் ஷீர்டிக்கு வர விரும்பினார். ஆனால் வர இயலவில்லை. பாபாவின் மஹாசமாதியான ஓர் ஆண்டிற்குள் அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் அவதியுற்றார். எல்லாவிதமான சாதாரண சிகிச்சைகளும் அவருக்குப் பலன் அளிக்கவில்லை. எனவே பாபாவை அல்லும், பகலும் தியானித்தார். ஒரு நாளிரவு கனவில் அவர் ஓர் காட்சி கண்டார்.
பாபா நிலவறை ஒன்றிலிருந்து வெளிவந்து அவருக்கு ஆறுதலளித்து, "கவலைப்படாதே, நாளையிலிருந்து நீ குணமடைவாய். ஒரு வாரத்திற்குள் நன்றாக நடமாடுவாய்" என்று கூறினார். கனவில் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் நாராயண்ராவ் பூரண குணமடைந்தார். இப்போது கருத்தில் கொள்ளவேண்டிய அம்சம் இதுதான்.
"உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்துகொண்டிருந்தார். உடலை விட்டுவிட்டதனால் இறந்துவிட்டாரா? இல்லை. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் 'பிறப்பு - இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் முழுமத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார்."
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment