இரண்டு பல்லிகள்:
இரண்டு சிறிய பல்லிகளின் கதையுடன் இவ்வத்தியாயத்தை முடிப்போம். ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தார். ஒரு பக்தரும் அவர் முன்னர் அமர்ந்திருந்தார். ஒரு பல்லி, 'டிக்!.. டிக்!... " துடிப்பை விளைவித்தது. ஆச்சரியத்தால் உந்தப்பட்ட அடியவர், பல்லியின் இத்துடிப்பு, ஏதேனும் பின்விளைவு காட்டுதல் குறித்ததா? அது நல்ல அடையாளமா அல்லது தீய சகுனமா என்று பாபாவைக் கேட்டார். அப்பல்லியின் சகோதரி அதனைப் பார்க்க ஓளரங்காபாத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாயும், அதனால் அப்பல்லி மிகவும் மகிழ்ச்சியுற்றிருக்கிறது என்றும் பாபா கூறினார். பாபா சொல்லுவதன் அர்த்தம் புரியாமல் அவர் மௌனமாய் அமர்ந்து இருந்தார். உடனேயே ஓளரங்காபாத்திலிருந்து குதிரையில் ஒரு பெருந்தகை பாபாவைப் பார்க்க வந்தார்.
அவர் மேற்கொண்டு பயணத்தைத் தொடர விரும்பினார். ஆனால் அவரது குதிரை பசியாய் இருந்தபடியால், நகர்வதாக இல்லை. அதற்குக் கொள்ளு தேவைப்பட்டது. கொள்ளு கொண்டு வருவதற்காகத் தனது தோளில் இருந்து ஒரு பையை எடுத்தார். தூசியைப் போக்குவதற்காகத் தரையில் அடித்தார். அதிலிருந்து ஒரு பல்லி விழுந்தது.
எல்லோர் முன்னிலையிலும் அது சுவரில் ஏறியது. கேள்விகேட்ட பக்தரிடம் அப்பல்லியை நன்றாகக் கவனிக்கும்படி பாபா கூறினார். அது உடனே தனது பெருமையான நடையுடன் தன் சகோதரியை நோக்கிச் சென்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர் இரண்டும் சந்தித்தன. ஒன்றையொன்று முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கொண்டன. சுற்றிச்சுற்றி ஓடி வந்து அன்பால் நடனம் ஆடின. ஷீர்டி எங்கே இருக்கிறது? ஓளரங்காபாத் எங்கே இருக்கிறது? குதிரையிலிருந்த மனிதர் எங்ஙனம் ஓளரங்காபாத்திலிருந்து வந்தார்? இரண்டு சகோதரிகள் சந்திக்கப்போவதை எங்ஙனம் பாபா முன்னாலேயே தீர்க்க தரிசனம் செய்தார்? இவையெல்லாம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானதும், பாபாவின் எங்குநிறை பேரறிவையும், அனைத்தையும் உணரும் ஆற்றலையும் மெய்ப்பிப்பதுமாகும்.
பிற்சேர்க்கை:
எவரொருவர் இவ்வத்தியாயத்தை பக்தியுடன் படிக்கிறாரோ அல்லது தினமும் கருத்தூன்றிப் பயில்கிறாரோ, சத்குரு சாயிபாபாவின் அருளால் அவரது அனைத்து ஆழ்துயர் நிலைகளும் அகற்றப்படும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment