இவ்வத்தியாயத்தை ஹேமத்பந்த் ஒரு வேண்டுதலுடன் முடிக்கிறார். "ஓ! சாயி சத்குருவே, பக்தர்களின் கற்பகதருவே! நாங்கள் வேண்டுகிறோம். தங்கள் பாதாம்புஜத்தை மறக்கவோ, காணாமலோ இருக்கக்கூடாது. இச்சம்சார வாழ்க்கையில் பிறப்பு, இறப்புகளால் நாங்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கிறோம். இச்சூழலில் இருந்து எங்களை இப்போது விடுவித்தருளும். எங்களது புலன்கள் ஆசைகளைத்தேடி ஓடுவதிலிருந்து தடுத்தருளி அந்தர்முக ஆத்மதரிசனத்தைப்பெறத் திருப்பிவிடுங்கள். புலன்களும், மனதும் இப்படி வெளியில் ஓடித்திரியும் இயல்பைத் தடுக்காவிடில், தடை செய்யப்படாதவரை, தன்னை உணரும் நல்வாய்ப்பே கிடையாது. மகனோ, மனைவியோ, நண்பனோ இறுதியில் நமக்கு உதவுவது கிடையாது. தாங்கள் மட்டுமே எங்களுக்கு முக்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பீர்கள்.
எங்களது விவாதப் பண்பையும், மற்ற பல கெடுதலான விஷயங்களையும் அறவே அழித்துவிடுங்கள். தங்களது நாமத்தை உச்சரிப்பதில் எங்களது நாவுக்கு ஒரு பேராவல் ஏற்படட்டும். எங்களது நல்ல, கெட்ட எண்ணங்களையெல்லாம் துரத்திவிட்டு எங்களது வீடு, உடல் இவைகளைப்பற்றிய உணர்வை மறக்கச்செய்து, எங்களது 'தான்' என்ற அஹங்காரத்தை அழித்துவிடுங்கள். எப்போதும் தங்கள் நாமத்தை நினைவுகூர்ந்து மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடச் செய்யுங்கள். எங்களது மனச்சலனங்களை அடக்கி அமைதி, சாந்தம் இவைகளை எங்களுக்கு அருளுங்கள். தாங்கள் எங்களைச் சற்றே அரவணைத்தால், எங்கள் அறியாமை இருள் மறைந்து உங்கள் ஒளிபெற்ற மகிழ்வுடன் வாழ்வோம்.
தங்களது நல்லருளினாலும் எங்களது முந்தைய நல்வினைகளாலும் தங்களது லீலாம்ருதத்தை பருகச்செய்து ஆழ்ந்த துயிலிலிருந்து எங்களை எழுப்பிவிட்டீர்கள்".
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment