பின்னுரை:
B.V.தேவ் என்பவர் ஓய்வுபெற்ற மம்லதாரும், பாபாவின் பெரும் அடியவர்களுள் ஒருவரும் ஆவார். அவர் சாயிலீலா சஞ்சிகையில் (தொகுப்பு 7, எண். 25, பக்கம் 26) தட்ஷிணையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"பாபா எல்லோரிடமிருந்தும் தட்ஷிணை கேட்கவில்லை. கேட்காமலேயே சிலர் தட்ஷிணை அளித்தால் அவர் அதைச் சிலசமயங்களில் ஏற்றுக்கொண்டார். மற்ற நேரங்களில் மறுத்துவிட்டார். சில குறிப்பிட்ட அடியவர்களிடமே அவர் அதைக் கேட்டார். பாபா தங்களிடம் அதற்காகக் கேட்கவேண்டும், அப்போதே தாம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவர்களிடம் அவர் கேட்டதேயில்லை. பாபாவின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் அதைச் சமர்ப்பித்தால், அவர் தொடுவதில்லை. அந்த அடியவர் அஃதை அங்கேயே வைத்திருந்தாள், அதை அப்பால் எடுத்துக்கொள்ளும்படி பாபா அவரைக் கேட்டார். பக்தர்களின் விருப்பம், பக்தி, சௌகர்யம் இவைகளுக்கேற்றவாறு அவர் சிறிய, பெரிய தொகைகளைக் கேட்டார். எல்லாச் செல்வந்தர்களையும் கேட்கவில்லை. அன்றி எல்லா ஏழைகளிடமும் கேட்கவுமில்லை.
தட்ஷிணை கேட்டு கொடுக்காதவர்களிடம் பாபா கோபம் அடைந்ததே இல்லை. யாரேனும் நண்பன் மூலம் தட்ஷிணை அனுப்பப்பட்டு, அவன் அதை பாபாவிடம் கொடுக்க மறந்துவிட்டானாயின், அவர் அவனுக்கு அதை எப்படியோ ஞாபகமூட்டி அவனைக் கொடுக்கும்படி செய்தார். சில சந்தர்ப்பங்களில் தட்ஷிணையாகக் கொடுத்த பணத்தில் கொஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதைப் பாதுகாக்கும்படியோ அல்லது வழிபாட்டிற்காக அவரது பூஜை அறையில் வைக்கும்படியோ கேட்டுகொள்வார்.
இம்முறையானது பணம் அளித்தவருக்கோ அல்லது அந்த பக்தருக்கோ எல்லையற்ற அளவு நன்மையளித்தது. தான் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாக யாரேனும் கொடுத்தால், அவர் அதிகப்படியான மீதமுள்ள தொகையைத் திரும்ப அளித்துவிடுவார். சிலரிடம் தாங்கள் முதலில் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாகவும், அப்படி அவர்களிடம் பணம் இல்லையானால் மற்றவர்களிடம் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ அளிக்கச் சொன்னார். சிலரிடம் அவர் ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தட்ஷிணை கேட்டார்.
தட்ஷிணையாகச் சேர்ந்த பணத்திலிருந்து அவர் தமக்காக மிகவும் கொஞ்சமே செலவழித்தார். அதாவது சில்லிம் என்ற புகைக் குழாய் வாங்குவதற்கும், துனி என்ற புனித அடுப்புக்கு எரிபொருள் வாங்குவதற்கும் செலவழித்து மிச்சமனைத்தையும் பல்வேறு மனிதர்களுக்கு வேறுபடும் விகிதங்களில் தர்மமாகப் பகிர்ந்து அளித்தார். ஷீர்டி சமஸ்தானத்தின் சிறுசிறு பொருட்களெல்லாம் அப்போது இருந்த பணக்கார அடியவர்களால் ராதாகிருஷ்ணமாயின் வேண்டுகோள், யோசனையின் பேரில் வாங்கி அளிக்கப்பட்டவை. விலைமதிப்புள்ள, செல்வமிகு பொருட்களை யாரேனும் கொணர்ந்தால் பாபா சீற்றமடைந்து அவர்களைக் கடிந்துகொள்வார். நானா சாஹேப் சாந்தோர்கரிடம் தமது உடைமைகள் ஒரு கௌபீனம், ஒரு துண்டு, ஒரு கஃப்னி, ஒரு தகரக்குவளை என்றும் அவரைப் பலர் தேவையற்ற, பயனற்ற விலையுயர்ந்த பொருட்களெல்லாம் கொண்டுவந்து தொல்லைப்படுத்துவதாகவும் கூறினார்.
நமது பரமார்த்திக வாழ்வில் இருக்கும் இரு பெரிய தடங்கல்கள் பெண்ணும், செல்வமும். பாபா ஷீர்டியில் இரண்டு நிலையான அமைப்புமுறைகளை ஏற்படுத்தினார். அதாவது தட்ஷணையும், ராதாகிருஷ்ணமாயியும் ஆகும். எனவே பக்தர்கள் அவரிடம் வந்தபோதெல்லாம் அவர்களிடம் தட்ஷணை கேட்டார். பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னார். பள்ளிக்கூடமென்பது ராதாகிருஷ்ணமாயியின் வீடு. அவர்கள் இவ்விரண்டு சோதனைகளில் நன்றாகத் தேறினார்களேயானால், அதாவது செல்வத்துக்கும், பெண்ணுக்குமுள்ள பற்றுக்களிலிருந்து விடுபட்டவர்கள் என்று தெளிவுபடுத்துவார்களேயானால் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் துரிதமானது. பாபாவின் அருளாலும், ஆசிகளாலும் உறுதியளிக்கப்பட்டது.
தேவ், கீதை உபநிஷதங்களிளிருந்து புண்ணிய க்ஷேத்திரத்தில் புண்ணிய ஆத்மாவுக்குக் கொடுக்கப்பட்ட தர்மமானது கொடுத்தவருக்கு அதிக பலன் அளிக்கிறது என்பதை ஸ்லோகங்கள் மூலம் எடுத்துக் காண்பித்து இருக்கிறார். ஷீர்டியில் அதில் உறையும் தெய்வவுமான சாயிபாபாவையும் தவிர புனிதமானது என்ன இருக்க முடியும்?!
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment