Thursday, 9 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 23 - பகுதி 3

No comments
பாம்புக் கடியினின்று குணமாகுதல்:-

இக்கதையைத் தொடங்கும் முன்பாக ஹேமத்பந்த், ஜீவனைக் கிளிக்கு மிக நன்றாக ஒப்பிடலாம் என்றும், ஒன்று உடம்பினுள்ளும் மற்றொன்று கூண்டினுள்ளுமாக இரண்டுமே கட்டுண்டிருக்கின்றன என்றும், கட்டுண்டுகிடக்கும் அவைகளது தற்போதைய நிலையே அவைகளுக்கு ஏற்ற நன்மையானது என்று அவைகள் கருதுவதாகவும் கூறுகிறார்.  உதவியாளர் ஒருவர் அதாவது குரு வரும்போது கடவுளருளால் அவைகளின் கண்ணைத் திறந்து, அவைகளின் கட்டுக்களினின்று அவைகளை விடுவிக்கும்போது மட்டுமே அவைகளின் கண்கள், இன்னும் பெரியதும் சிறந்ததுமான வாழ்க்கைக்குத் திறந்துவிடப்படுகிறது.  இத்துடன் அவர்கள் முன்னைய வரையறையை உடைய வாழ்க்கையை ஒப்பிட்டால் அது சூன்யமே ஆகும். 

கடந்த அத்தியாயத்தில் மிரீகருக்கு நேரிடவிருந்த பேராபத்தினை எங்ஙனம் பாபா அறிந்திருந்தார் என்பதையும், அதிலிருந்து எங்ஙனம் அவரைக் காப்பாற்றினார் என்பதையும் கண்டோம்.  இதைவிடச் சிறப்பான கதை ஒன்றினை இப்போது வாசகர்கள் கேட்பார்களாக!

ஒருமுறை ஷாமாவை நச்சுப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது.  அவரது கையிலுள்ள சுண்டு விரலில் கடிபட்டு விஷம் உடம்பு முழுக்கப் பரவத்தொடங்கியது.  ஷாமாவும் தாம் இறந்துவிடுவோமேன்று என்று எண்ணுமளவிற்கு வலியும் அவ்வளவு தீவிரமாக இருந்தது.  அந்த மாதியான விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி அனுப்பப்படும் விட்டோபா கடவுளிடம் அவரது நண்பர்கள் அவரை எடுத்துச் செல்ல விரும்பினர்.

ஆனால் ஷாமா, மசூதிக்குத் தமது விட்டோபாவிடம் (சாயிபாபா) ஓடிவந்தார்.  அவரைப் பார்த்ததும், பாபா திட்டவும், கண்டிக்கவும் தொடங்கினார்.  அவர் மூர்க்கமடைந்து "ஓ! இழிந்த பதுர்த்யா! (பூசாரியே) மேலே ஏறாதே.  அங்ஙனம் ஏறினாயோ ஜாக்கிரதை" என்று கர்ஜித்தார்.  பின்பு "போ, அப்பாலே போ! கீழிறங்கு" என்றார்.  இங்ஙனம் பாபா சீற்றத்தினால் சிவந்து இருப்பதைப் பார்த்த ஷாமா பெரிதும் குழப்பமடைந்து ஏமாற்றமடைந்தார்.  அவர் மசூதியே தமது வீடு என்றும், சாயிபாபாவே தமது ஒரே அடைக்கலம் என்றும் எண்ணியிருந்தார்.  ஆனால் இங்ஙனம் விரப்பட்டால் அவர் எங்கே செல்வார்?  உயிர் வாழ்வதின் நம்பிக்கை அனைத்தையும் இழந்து அமைதியாய் இருந்தார்.  சிறிது நேரத்திற்குப் பின் பாபா சாதாரணமாகவும், அமைதியாகவும் ஆனார்.  அப்போது ஷாமா மேலே சென்று அவர் அருகில் அமர்ந்தார்.

பின்னர் பாபா அவரிடம், "பயப்படாதே, எள்ளளவும் கவலைப்படாதே!  கருணையுள்ள பக்கிரி உன்னைக் காப்பாற்றுவார்.  போய் வீட்டில் அமைதியாக அமர்ந்திரு, வெளியில் செல்லாதே.  என்னை நம்பு.  பயப்படாமல் இரு, கவலைப்படாதே" என்று கூறினார்.  பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.  அதன் பின்னர் ஷாமா எதை விரும்புகிறாரோ, அதை உண்ணவேண்டுமென்றும், வீட்டில் நடையுடையாக இருக்கவேண்டும் என்றும், ஆனால் படுத்து உறங்கவே கூடாது என்றும் குறிப்புக்களுடன் தாத்யா பாடீலையும், காகா சாஹேப் தீஷித்தையும் உடனேயே பாபா அனுப்பினார்.  இவ்வுரைகள் பின்பற்றப்பட்டன என்றும், சிறிது நேரத்தில் ஷாமா குணப்படுத்தப்பட்டார் என்றும் கூறவும் வேண்டுமா!

இது சம்பந்தமாக நினைவில் வைக்கவேண்டியது ஒன்றுதான்.  பாபாவின் மொழிகள் ( போ, அப்பாலே ஓடு!, 'கீழிறங்கு' என்னும் ஐந்தெழுத்து மந்திரம்) மேலெழுந்தவாரியாக அது காணப்பட்டாற்போல் ஷாமாவை நோக்கிக் கூறப்பட்டதல்ல.  அவை ஷாமாவின் உடலினுள் புகுந்து இரத்த ஓட்டத்துடன் கலக்க வேண்டாமென்று பாம்புக்கும், அதன் விஷத்துக்கும் இடப்பட்ட நேரடிக் கட்டளைகளாகும்.  மந்திர சாஸ்திரத்தில், நல்லறிவுத் திறமுடைய பிறர்களைப் போன்று எவ்வித மந்திர உச்சாடனமிடப்பட்ட அரிசியையோ, தண்ணீரையோ உபயோகிக்க வேண்டியிருந்ததில்லை.  அவர்தம் சொற்களே ஷாமாவின் உயிரைக் காப்பதில் மிகச்சிறந்த பயனுள்ளனவாய் இருந்தன.

இக்கதைகளையும் அதைப் போன்றவற்றையும் கேட்கும் எவனும் சாயிபாபாவின் பாதங்களில் உறுதியான நம்பிக்கை அடையப் பெறுவான்.  மாயை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு பாபாவின் பாதங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பதே ஒரே வழியாகும்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                (தொடரும்…)


No comments :

Post a Comment