அமீர் ஷக்கர்:-
அமீர் ஷக்கரின் சொந்த ஊர் கொபர்காவன் தாலுக்காவைச் சேர்ந்த கொரலா என்னும் கிராமமாகும். அவர் இறைச்சி விற்கும் ஜாதியைச் சேர்ந்தவர். அவர் பாந்த்ராவில் கமிஷன் ஏஜண்டாக வேலை பார்த்தார். அங்கு மிகவும் பிரசித்தமானவர். அவர் ஒருமுறை கீழ்வாதத்தால் கஷ்டப்பட்டார். அது அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது. அப்போது அவர் கடவுளை நினைவுகூர்ந்தார். தனது தொழிலை விட்டுவிட்டு ஷீர்டிக்கு வந்து தனது பிணியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பாபாவை வேண்டிக்கொண்டார். பாபா அவருக்கு சாவடியில் தங்க இடம் அமர்த்திக்கொடுத்தர்.
சாவடி ஈரம் நிரம்பியதாகவும், சுகாதாரமற்ற இடமாகவும், அத்தகைய நோயாளி தங்குவதற்கு ஏற்றதாய் இல்லாமலும் இருந்தது. கிராமத்திலுள்ள மற்ற எந்த இடமும் அல்லது கொரலா கிராமமே கூட அவர் தங்குவதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பாபாவின் மொழிகளே இதைத் தீர்மானிக்கின்ற காரணக்கூறும், ஸ்ரேஷ்டமான மருந்துமாகும். பாபா அவரை மசூதிக்கு வர அனுமதிக்கவில்லை. ஆனால் சாவடியிலேயே நிலைநிறுத்தித் தங்கவைத்தார். அங்கே அவருக்குப் பெரும் நன்மை விளைந்தது. பாபா சாவடி வழியாக ஒவ்வொருநாள் காலையும், மாலையும் கடந்து சென்றார். ஒருநாள் விட்டு ஒருநாள் ஊர்வலமாகச் சென்று அங்கு துயின்றார். எனவே அமீர், பாபாவின் தொடர்பை மிகவும் எளிதாக அடுத்தடுத்துப் பெற்றார்.
அமீர் ஒன்பது மாதங்கள் முழுமையாகத் தங்கியிருந்தார். பின்னர் எப்படியோ அவ்விடத்தில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. எனவே ஒருநாள் ஒருவரும் அறியாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றார். கோபர்காவனுக்கு வந்து அங்கு தர்மசாலையில் தங்கினார். அப்போது முதுமையான, இறந்துகொண்டிருக்கும் பக்கீர் ஒருவர் அவரிடம் தண்ணீர் கேட்டார். அமீர் அதைக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். அவர் அதை அருந்திய உடனேயே மரணம் அடைந்தார். அமீர் இக்கட்டான நிலையை அடைந்தார். அவர் சென்று அதிகாரிகளிடம் இதுபற்றித் தெரிவிப்பாரேயாகில், அவரே முதல் தகவல் அளித்தவராதலாலும், தகவலும் அவருடையது மட்டுமேயானதாலும் அதுகுறித்து அவர் சிறிதளவாவது அறிந்திருப்பதனாலும் அவரே மரணத்துக்குப் பொறுப்பாக்கப்படுவார் என்று நினைத்தார். பாபாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் ஷீர்டியை விட்டு வந்ததைப்பற்றி தமது செய்கைக்காக அவர் நனியிரங்கி, பாபாவை வேண்டிக்கொண்டார். அவர் பின்னர் ஷீர்டிக்குத் திரும்பத் தீர்மானித்தார்.
அதே இரவு வழிநெடுக பாபாவின் பெயரை நினைவு கூர்ந்துகொண்டும், உச்சரித்துகொண்டும் பொழுது விடிவதற்குள் ஷீர்டிக்குத் திரும்ப ஓடி வந்துவிட்டார். கவலையிலிருந்து விடுபட்டவரானார். பாபாவின் பரிபூரண விருப்பத்திற்கும் ஆணைகளுக்குமிணங்க சாவடியிலேயே தங்கியிருந்தார். குணப்படுத்தவும்பட்டார். ஒருநாள் நள்ளிரவு பாபா, "ஓ! அப்துல், ஏதோ ஒரு பிசாசு ஜந்து என் படுக்கையின் பக்கங்களில் மோதிக்கொண்டு இருக்கிறது" என்று சொன்னார்.
அப்துல் விளக்குடன் வந்தான். பாபாவின் படுக்கையைச் சோதித்தான். ஆனால் அவன் ஒன்றையும் காணவில்லை. பாபா அவனை எல்லா இடங்களையும் கவனத்துடன் பார்க்கும்படி கூறி தமது சட்காவைத் தரையை நோக்கி அடிக்கத் தொடங்கினார். இந்த லீலையைக் கண்டு ஏதாவது பாம்பு அங்கே வந்திருப்பதாக பாபா சந்தேகப்பட்டிருக்க வேண்டுமென்று அமீர் நினைத்தார். நீண்ட நாள் பழக்கத்தின் காரணமாக பாபாவின் மொழிகட்கும், செயல்களுக்கும் அமீர் பொருள் தெரிந்துகொள்ள வல்லவராயிருந்தார். பாபா அமீரின் மெத்தைக்கு அருகில் ஏதோ அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்துல்லை விளக்கைக் கொணரும்படி சொன்னார். அவன் அதைக் கொணர்ந்ததும் அங்கு ஒரு பாம்பு தன் தலையை மேலும், கீழும் அசைத்துக்கொண்டு, சுருட்டிக்கொண்டு கிடப்பதைக் கண்டான். அதன் பின்னர் பாம்பு உடனே அடித்துக் கொல்லப்பட்டது. இவ்வாறாக பாபா குறித்த நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து அமீரைக் காப்பாற்றினார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)
No comments :
Post a Comment