குருபக்திக்குக் கடுமையான சோதனை:-
இரண்டாவது காலராக் கட்டளை பாபாவினால் எங்ஙனம் செயல்படுத்தப்பட்டது என்பதைத் தற்போது காண்போம். கட்டளை அமுலில் இருக்கையில் யாரோ ஒருவர் மசூதிக்கு ஒரு ஆட்டைக் கொண்டுவந்தார். அது பலவீனமாயும், மூப்புடனும் இறக்கபோகும் தருவாயிலும் இருந்தது. இத்தருணத்தில் மாலிகானைச் சேர்ந்த ஃபக்கீர் பீர் முஹமது என்ற படேபாபா அருகில் இருந்தார்.
சாயிபாபா அவரை அதை ஒரே வெட்டில் வெட்டிப் பலியிட்டுச் சமர்ப்பிக்கும்படி கேட்டார். இந்த படேபாபா என்பவர் சாயி பாபாவால் மிகவும் மதிக்கப்பட்டவர். சாயிபாபாவின் வலதுபுறத்திலேயே அவர் எப்போதும் அமர்ந்திருந்தார். ஹூக்காவை அவர் முதலில் குடித்தபின்பு அது பாபாவுக்கும் பிறருக்கும் அளிக்கப்படும். மத்தியான உணவுவேளையின் போது கறிவகைகள் எல்லாம் பரிமாறப்பட்டபின்பு பாபா, படேபாபாவை மரியாதையுடன் கூப்பிட்டுத் தமது இடப்பக்கத்தில் அமர்த்திய பின்பு எல்லோரும் உண்டனர். தட்ஷிணையாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்தும் பாபா அவருக்கு தினசரி ரூ.50 அளித்து வந்தார். அவர் போகும்போது பாபாவும் நூறு அடி தூரம்வரை அவருடன் கூடச் செல்வார். பாபாவிடம் அவருக்கிருந்த அந்தஸ்து அத்தகையது.
ஆட்டை வெட்டும்படி பாபா அவரிடம் கேட்டபோது அவர் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். "எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்படவேண்டும்?" என்று அவர் கேட்டார். பின்னர் பாபா ஷாமாவை அதனைக் கொல்லும்படி கேட்டுக்கொண்டார். ராதாகிருஷ்ணமாயிடம் சென்று கத்தி ஒன்றை அவளிடமிருந்து வாங்கிவந்து அதை பாபாவின் முன்னால் வைத்தார். கத்தி எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த ராதாகிருஷ்ணமாயி அதைத் திருப்பி எடுத்துக்கொண்டாள்.
பின்னர் ஷாமா மற்றொரு கத்தியைப் பெறுவதற்காகச் சென்று உடனே திரும்பிவராமல் காகா சாஹேப் தீஷித்தின் வாதாவில் தங்கிவிட்டார். அப்போது காகா சாஹேபின் முறை வந்தது. அவர் 'நல்ல தங்கம்' தான் என்பதில் ஐயமில்லை என்றாலும் பரீட்சிக்கப்படவேண்டும். கத்தியை வாங்கி வந்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார். அவர் சாதேவின் வாதாவுக்குச் சென்று ஒரு கத்தியுடன் திரும்பிவந்தார். பாபா ஏவியதும் கொல்லுவதற்குத் தயாராக அவர் இருந்தார். தூய பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்குத் தமது வாழ்க்கையில் கொலையைப் பற்றியே தெரியாது. ஹிம்சைச் செயலுக்கு முற்றும் அவர் எதிரானபோதும் ஆட்டைக் கொல்வதற்குத் தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டார்.
முஹமதியரான படேபாபா அதைக் கொல்வதற்கு விருப்பமற்றவராய் இருப்பதையும், இந்த தூய பிராமணர் அதைக் கொல்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதையும் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தன் வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு கையைக் கத்தியுடன் தூக்கிக்கொண்டு பாபாவின் முடிவான அனுமதிக் குறிப்புக்காக அவரைப் பார்த்தார். பாபா "எதை நினைத்துக் கொண்டு இருக்கிறாய், உம்! வெட்டு" என்றார்.
பின்னர் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா, "நிறுத்து, நீ எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாயிருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார். காகா சாஹேப் கீழ்ப்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார். "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம். இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம். கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை. பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் குருவின் கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்."
பின்னர் பாபா, காகா சாஹேபிடம் தாமே பலியிடுதலையும், வெட்டும் வேலையையும் செய்துவிடுவதாகக் கூறினார். ஃபக்கீர்கள் அமரும் தகியா என்னும் இடத்தில் ஆட்டை வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஆடு அவ்விடத்துக்குக் கொண்டுசெல்லபடுகையில் வழியிலேயே இறந்து விழுந்தது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)
No comments :
Post a Comment