பாபாவின் குணாதிசயம் - பக்தர்களின்பால் அவரின் சார்பு:-
பாபாவின் அடியவர்கள் அவரர்வர்களுக்குரிய வழியிலேயே அவருக்குச் சேவைசெய்ய அவர் அனுமதித்திருந்தார். இதில் பிறர் தலையிடுவதை அவர் விரும்பவில்லை. உதாரணமாக இதே மௌஷிபாஜி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாபாவின் அடிவயிற்றைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள். அவள் உபயோகித்த கடுமையையும், வேகத்தையும் கண்டு மற்ற அடியவர்களெல்லாம் மனந்தளர்ந்து கவலை கொண்டவரானார்கள். அவர்கள் "ஓ! அம்மா இன்னும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்படு. அல்லாவிடில் பாபாவின் இரத்தக்குழாய், நரம்பு இவைளை உடைத்துவிடுவாய்" என்று அவளிடம் கூறினார்கள்.
இதன் பேரில் பாபா உடனே தன் இருக்கையை விட்டு எழுந்தார். தமது சட்காவைத் தரையில் ஓங்கி அடித்தார். அவர் கோபாவேசம் அடைந்தார். அவரது கண்கள் நெருப்புத் துண்டம் போலாயின. ஒருவருக்கும் அவர் முன் நிற்கவோ, பேசவோ தைரியம் இல்லை. பின்னர் அவர் சட்காவின் ஒரு முனையைத் தன் இரு கைகளாலும் எடுத்துக்கொண்டு, வயிற்றிலுள்ள தொப்புளில் குச்சியின் ஒரு நுனியை அமுக்கினார். மற்றொரு நுனியைக் கம்பத்தில் பொருத்தவைத்து அழுத்த இரண்டு - மூன்றடி நாலமுள்ள சட்கா முழுவதும் அடிவயிற்றுக்குள் சென்றுவிட்ட மாதிரியாகத் தோன்றியது.
இன்னும் சிறிது நேரத்தில் அடிவயிறு கிழிந்துவிடுமென்று மக்கள் பயந்தனர். தூண் உறுதியானது. அசையாதது. பாபா அதனருகில் மிகமிக நெருக்கமாகப் போகத்தொடங்கித் தூணைப் பலமாக அணைத்தார். எந்த வினாடியிலும் வயிறுகிழியுமென எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் எல்லாம் பீதியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தாலும், வியப்பாலும் ஊமையாகி நின்றனர். பாபா தமது அடியவனுக்காகவே இவ்விதம் கஷ்டப்பட்டார். மற்ற அடியவர்கள் மௌஷிபாஜிடம் அவளது சேவையில் இன்னும் நிதானமாக இருக்கும்படியும் பாபாவுக்கு எவ்வித வலியையோ, தொல்லையையோ உண்டாக்கவேண்டாம் என்றும் குறிக்கவே விரும்பினர். நல்லெண்ணத்துடனே அவர்கள் இதைச் செய்தனர். ஆனால் பாபா இதைக்கூடப் பொறுக்கவில்லை. தங்களது நல்லெண்ண முயற்சியினால் பெருந்துன்பம் விளைவிக்கும் இத்திடீர் விளைவைக் கண்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர். காத்திருந்து பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்யமுடியவில்லை.
அதிஷ்டவசமாக பாபாவின் ஆவேசம் சீக்கிரம் குளிர்ந்தது. அவர் குச்சியை விட்டுவிட்டுத் தன் இடத்தினுள் வந்து அமர்ந்தார். இதிலிருந்து அடியவர்கள் மற்றவர் சேவைகளில் குறுக்கிடக்கூடாது என்றும் தாங்கள் விரும்பியவண்ணமே பாபாவுக்கு அவர்கள் சேவைசெய்ய விட்டுவிடவேண்டுமென்கிற பாடத்தைத் தெரிந்துகொண்டனர். ஏனெனில் அவர்கள் செய்யும் சேவைகளின் மதிப்பையும், தகுதியையும் பாபாவே அளக்க வல்லமையுடையவராய் இருக்கிறார்.

No comments :
Post a Comment