ஆம்ப்டேகர்:-
புனேவைச் சேர்ந்த கோபால் நாராயண் ஆம்ப்டேகர் என்பவர் பாபாவின் பக்தர். அவர் பத்து ஆண்டுகளுக்கு தாணே ஜில்லாவிலும், பின் ஜவ்கர் ஜில்லாவிலும் எக்ஸெய்ஸ் டிபார்ட்மென்டில் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார். வேறு ஒரு வேலை பெறுவதற்காக அவர் முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. மற்ற கேடுகளால் அவர் தாக்கப்பட்டு அவரது நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே வந்தது. இதே நிலைமையில் ஷீர்டிக்கு ஒவ்வோர் ஆண்டும் சென்று தனது கவலைகளை பாபாவின்முன் சமர்ப்பிப்பதுமாக ஏழாண்டுகள் கழித்தார். 1916ல் அவரது நிலைமை மோசமாகி, ஷீர்டியிலேயே தற்கொலை செய்துகொள்வது எனத் தீர்மானித்தார்.
எனவே தன் மனைவியுடன் ஷீரடிக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். ஒருநாள் தீஷித் வாதாவின் முன்னால் உள்ள மாட்டு வண்டியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் குதித்துத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர் தீர்மானித்துவிட்டார். அவர் ஒரு மாதிரியாக எண்ண, பாபா வேறொருவிதமாக நடப்பித்தார். இந்த இடத்துக்குச் சில அடி தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டல் முதலாளியும், பாபாவின் அடியவருமான சகுண் என்பவர் வெளியே வந்து அவரிடம், "அக்கல்கோட் மஹராஜின் இச்சரிதத்தை நீங்கள் எப்போதாவது படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். ஆம்ப்டேகர் அவரிடமிருந்து அந்நூலை வாங்கிப் படிக்கத் தொடங்கினார். எதேச்சையாக அல்லது தெய்வாதீனமாகக் கீழ்கண்ட ஒரு கதையை அவர் படிக்கத் தொடங்கினார்.
அக்கல்கோட் மஹராஜின் அடியவன் ஒருவன் தீர்க்கப்படமுடியாத ஒரு வியாதியால் மிகவும் அல்லலுற்றுக்கொண்டிருந்தான். அந்த வேதனையை மேற்கொண்டு தாங்கமுடியாமற்போகவே அவன் மனம் உடைந்து தனது தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் குதித்துவிட்டான்.
உடனே மஹாராஜ் அங்குவந்து அவனைத் தன் கரங்களாலேயே வெளியே எடுத்து, "நல்லதோ, கெட்டதோ உன் முந்தைய கர்மத்தின் பயனை நீ அடைந்தாக வேண்டும். அதன் அனுபவித்தல் பூரணமெய்தவில்லையானால் தற்கொலை உனக்கு உதவியளிக்காது. மீண்டும் ஒரு பிறவி எடுத்து அக்கஷ்டத்தையே அடையவேண்டும். எனவே உன்னை நீயே கொன்று கொள்வதற்குப் பதிலாக ஏன் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்து, முந்தைய கர்மத்தின் பலன்களை எல்லாம் முழுவதுமாக தீர்த்துவிடக்கூடாது?" என்றார்.
இந்தப் பொருத்தமான, தக்க சமயத்தில் கிடைத்த கதையைப் படித்துவிட்டு ஆம்ப்டேகர் மிகவும் ஆச்சரியப்பட்டார். உள்ளம் உருகினார். பாபாவின் குறிப்பை இக்கதையின் மூலம் அவர் பெற்றிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார். பாபாவின் சர்வ வியாபித்துவத்தையும், தயாளத்தையும் கண்டு, பாபா மேலுள்ள நம்பிக்கை அவருக்கு உறுதியாகி, பாபாவின் பெரும் பக்தராகிவிட்டார். அவர் தந்தையார் அக்கல்கோட் மஹராஜின் பக்தராக இருந்தவர். சாயிபாபா அவரையும் அவர் தந்தையார் சென்ற அடிச்சுவட்டிலேயே சென்று அவரிடம் பக்தி பூண்டவராகத் தொடர்ந்திருக்கும்படி விரும்பினார். பின்னர் பாபாவின் ஆசீர்வாதம் பெற்றார். அவரின் எதிர்காலம் சிறப்புறத் தொடங்கியது. பின்னர் ஜோதிடம் படித்து, அதில் திறமை பெற்றுத் தனது செல்வத்தைப் பெருக்கினார். போதுமான பணத்தை சம்பாதிக்க அவரால் இயன்று, தனது பிற்கால வாழ்வை சௌகரியமாகவும், வசதியாகவும் கழித்தார்.

No comments :
Post a Comment