ஹரிச்சந்திர பிதலே:-
பம்பாயில் ஹரிச்சந்திர பிதலே என்னும் பெயருள்ள மனிதர் ஒருவர் இருந்தார். காக்காய் வலிப்பால் அவதியுறும் ஒரு மகன் அவருக்கு இருந்தான். பல அலோபதி ஆயுர்வேத வைத்தியர்களிடம் காண்பித்தும் குணமேதும் ஏற்படவில்லை. ஒரே ஒரு வழிதான் பாக்கி இருந்தது. அதாவது ஞானிகளிடம் அடைக்கலம் புகுவது. தாஸ்கணு தமது மிகச்சிறந்த, அற்புதமான கீர்த்தனைகளால் பம்பாய் ராஜதானி எங்கும் பாபாவின் புகழைப் பரவச் செய்தார் என்று அத்தியாயம் 15ல் முன்னரே குறிக்கப்பட்டுள்ளது. பிதலே இக்கீர்தனைகள் சிலவற்றை 1910ல் கேட்டார்.
அதிலிருந்து மற்றவர்கள் மூலமாகவும் பாபா தமது ஸ்பரிசத்தாலும், வெறும் பார்வையாலும் மட்டுமே அனேக தீர்க்க முடியாத வியாதிகளைக் குணப்படுத்தியிருப்பதாக அறிந்தார். அதனால் சாயிபாபாவைக் காண அவர் மனதில் ஆர்வம் எழுந்தது. எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, வெகுமதிகளையும், பழக்கூடைகளையும் எடுத்துக்கொண்டு, பிதலே குடும்பத்துடன் ஷீர்டிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அவர்களுடன் மசூதிக்குச் சென்று பாபாவின்முன் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு தனது நோயாளிப் புதல்வனைப் பாபாவின் பாதங்களில் வைத்தார். பாபா அக்குழந்தையைக் கண்ட அத்தருணத்திலேயே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. கண்களைச் சுற்றிக்கொண்டு அப்புதல்வன் உணர்வற்றுக் கீழே விழுந்தான். அவனது வாய் நுரைதள்ளி, உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது. உயிரை விட்டுவிட்டான் போல் தோன்றியது. இதைக் கண்டு பெற்றோர் மிகவும் படபடத்து உணர்ச்சி வசப்பட்டனர். பையனுக்கு அடிக்கடி வலிப்பு வருமாயினும் இந்த வலிப்பு நீண்டதாகத் தோன்றியது.
தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிட்டாள். கொள்ளைக்காரனுக்குப் பயந்து ஒரு வீட்டில் ஒளிந்த ஒருவன் மீது அவ்வீடு சரிந்து விழுந்துவிட்டதைப் போலவும், புலிக்குப் பயந்து ஓடிய பசு ஒன்று கசாப்புக் கடைக்காரன் கையில் அகப்பட்டுக்கொண்டதைப் போலவும், வெப்பம் தாங்காது ஒரு மரத்தடியில் ஒதுங்கிய ஒரு வழிப்போக்கன் மீது அம்மரமே சாய்ந்து விழுந்துவிட்டதைப் போன்றும், பக்தியுள்ள ஒருவன் கோவிலுக்கு வழிபடச் சென்றபோது அக்கோவிலே அவன்மீது இடிந்து விழுந்துவிட்டதைப் போன்றும் தனது நிலையிருப்பதாகக் கூறி அவள் ஓலமிடத் தொடங்கினாள்.
பின் பாபா அவளை நோக்கி, "இம்மாதிரி ஓலமிடாதே. கொஞ்சம் பொறு. அமைதியாய் இரு. உன் இருப்பிடத்துக்கு இவனை எடுத்துச் செல். அரைமணி நேரத்தில் அவன் சுவாதீனத்துக்கு வருவான்" என்று கூறித் தோற்றினார். பாபா கூறியபடியே அவர்கள் செய்தனர். பாபாவின் மொழிகள் உண்மையானதைக் கண்டனர். வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனேயே பையன் குணமடைந்தான். பிதலேயின் குடும்பத்தவர் அனைவரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் ஐயம் அழிந்தது.
பின் பிதலே தன மனைவியுடன் பாபாவைக் காணவந்தார். அவர்முன் மிகப்பணிவாகவும், மரியாதையாகவும் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறே, மனதில் பாபாவின் உதவிக்கு நன்றி செலுத்தினார். பாபா புன்சிரிப்புடன், "உமது எல்லா எண்ணங்களும், சந்தேகங்களும், கருத்துக்களும் இப்போது சாந்தப்படுத்தப்பட்டனவா? நம்பிக்கையும், பொறுமையும் உடையோரையே ஹரி காப்பாற்றுகிறார்" என்றார். பிதலே வசதியுள்ள பணக்கார மனிதர். பெருமளவில் அவர் இனிப்புக்களை விநியோகித்து பாபாவுக்கு மிகச்சிறந்த பழங்களையும், வெற்றிலை பாக்கையும் அளித்தார். பிதலேயின் மனைவி மிகச்சிறந்த பண்புடையவள். எளிமை, அன்பு, நம்பிக்கை உடையவள். தூணுக்கு அருகில் அமர்ந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய பாபாவையே உற்றுப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். அவளது நட்பும், அன்புமுள்ள குணத்தைக் கண்டு பாபா மிகவும் சந்தோஷமடைந்தார். முழு மனத்தோடும், முழு ஆத்மாவோடும் தம்மிடம் சரணடைந்து வழிபடுவோர்பால் ஞானிகளும், கடவுளரும் சார்ந்திருக்கின்றனர் அன்றோ! பாபாவின் சந்நிதானத்தில் சில இன்பமான நாட்களைக் கழித்த பின்னர் அக்குடும்பத்தினர் புறப்படுவதற்குப் பாபாவின் அனுமதியைப் பெற மசூதிக்கு வந்திருந்தனர். உத்தியையும், ஆசீர்வாதத்தையும் அவர்களுக்கு பாபா அளித்த பின்பு பிதலேயை அருகே அழைத்தார். "பாபு நான் உனக்கு முன்பே இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறேன். இப்போது மூன்று ரூபாய் தருகிறேன். இதை உனது பூஜை அறையில் வைத்துக்கொள். நீ நன்மையடைவாய்" என்று கூறினார்.
இவைகளைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் அவர்முன் வீழ்ந்து வணங்கிவிட்டு, அவரது ஆசீர்வாதத்துக்காக வேண்டி நின்றார். ஷீர்டிக்கு இதுவே தமது முதல் விஜயமாதலால் பாபா தாம் முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியது தமக்கு விளங்கவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. இப்புதிர் விடுபடுவதற்கு அவர் ஆவலாய் இருந்தார். ஆனால் பாபா மெளனமாக இருந்துவிட்டார். பிதலே பம்பாய்க்குத் திரும்பியபின் தனது கிழத்தாயாருக்கு ஷீர்டியில் நடந்த எல்லாவற்றையும், பாபா அவருக்கு முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொன்ன புதிரையும் கூறினார்.
அந்தக் கிழவிக்கும் அப்புதிர் புரியவில்லை. ஆனால் இதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபின், நினைவுக்கு வந்த ஒரு பழைய சம்பவம் அப்புதிரை விடுவித்தது. "உனது மகனோடு இப்போது நீ சாயிபாபாவைப் பார்க்கச் சென்றதுபோல், பல ஆண்டுகளுக்குமுன் உனது தந்தையும் உன்னை அக்கல்கோட்டுக்கு அப்பெருமானின் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றார். அப்பெருமான்கூட ஒரு சித்தர், பரிபூரண யோகி, சர்வவியாபி, தாராள மனதுடையவர். உனது தந்தை தூயவர், பக்தியுடையவர். அவரது வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் உனது தந்தைக்கு இரண்டு ரூபாய்களைப் பூஜையறையில் வைத்து வழிபடுவதற்காக அளித்தார். உனது தந்தை, தான் சாகும்வரை அதை முறைப்படி வழிபட்டு வந்தார். ஆனால் அதற்குப்பின் வழிபாடு புறக்கணிக்கப்பட்டு அந்த ரூபாய்கள் தொலைந்துபோயின. சில ஆண்டுகளுக்குப் பின் அவற்றின் நினைப்பும் மறந்துபோயின. தற்போது நீ அதிஷ்டசாலியாக இருந்ததால், சாயிபாபாவின் ரூபத்தில் அக்கல்கோட் மஹராஜ் உனது கடமைகள், வழிபாடு இவற்றை நினைவூட்டவும், அபாயங்களை அகற்றிவிடவும் தோன்றியிருந்தார்.
இனிமேலாவது ஜாக்கிரதையாக எல்லா ஐயங்களையும் கெட்ட எண்ணங்களையும் அகற்றிவிடு. உனது மூதாதையர் வழிநின்று நன்றாக நடந்துகொள். குடும்ப தெய்வங்களையும், காசுகளையும் வணங்கி, நன்றாக எடைபோட்டு, ஞானிகளின் ஆசிகளில் பெருமைகொள். உனது பக்தி உணர்ச்சிக்கு சமர்த்த சாயி அன்புடன் புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறார். உனது நன்மைக்காக அதைப் பயிர் செய்வாய்" என்று கூறினாள். தாயாரின் இம்மொழிகளைக் கேட்டு பிதலே மிகவும் ஆச்சரியப்பட்டார். பாபாவின் சர்வவியாபித்துவத் தன்மையை அவர் அறிய தலைப்பட்டு, அதில் உறுதியானார். பாபாவின் தரிசனத்தின் முக்கியத்துவத்தையும் அவர் அறிந்தார். அதிலிருந்து அவர் குணத்தைப் பற்றி சர்வ ஜாக்கிரதையுடையவரானார்.

No comments :
Post a Comment