புனிதமாக்கப்பட்ட நூலை அளித்தல்:-
பாபா உபதேசம் அளிக்கும் பலமுறைகளை முந்தைய அத்தியாயங்களில் நாம் முன்னரே கண்டிருக்கிறோம். அவற்றில் ஒருமுறையை இங்கு காண்போம். தாங்கள் சிறப்பாகப் பாராயணம் செய்ய விரும்பிய சில மத சம்பந்தமான நூல்களை பாபாவிடம் எடுத்துச்சென்று அவரது திருக்கரங்கள்பட்டு புனிதம் ஆக்கப்பட்டபின் அவைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வது சிலரின் வழக்கமாக இருந்து வந்தது.
அத்தகைய நூல்களை அவர்கள் தினந்தோறும் படிக்கும்போது பாபா அவர்களுடன் இருப்பதாக உணர்ந்தனர். ஒருமுறை காகா மஹாஜனி ஏக்நாத் பாகவதம் புத்தகம் ஒன்றுடன் ஷீர்டிக்கு வந்தார். ஷாமா இந்நூலைப் படிப்பதற்காக மசூதிக்கு எடுத்துச் சென்றார். பாபா அதை அவரிடமிருந்து வாங்கி இங்கும் அங்குமாக சில பக்கங்களைப் புரட்டிவிட்டு ஷாமாவிடம் திரும்ப அளித்து, "இதை நீ வைத்துக்கொள்" என்றார்.
ஷாமா: அது காகாவுடையது. அவருக்கு அதைத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும்.
பாபா: இல்லையில்லை. நான் உனக்கு அளித்தால் நன்மைக்காக உன்னிடமே வைத்துக்கொள். உனக்கு அது பயன்படும்.
இவ்விதமாகப் பல நூல்கள் ஷாமாவிடம் ஒப்படைக்கப்பட்டன. காகா இன்னமும் சில நாட்களில் மற்றொரு பாகவதத்துடன் வந்து அதை பாபாவின் கரங்களில் அளித்தார். பாபா அவருக்கு அதைப் பிரசாதமாகத் திரும்ப அளித்து, அதை நன்றாகப் பாதுகாக்கும்படியும் அது அவரை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்றும் கூறினார். காகாவும் அதை வணக்கத்துடன் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment